Pages

Monday, July 25, 2011

நழுவிச்செல்லும் காலம்..


ஆழ்நிலைக்கனவுகளொன்றில்
பிடிமானத்துக்காய்
துழாவிய கைகளில்
சிக்காது விளையாடுகின்றன;
எப்போதோ
நினைவடுக்ககத்தில் சேமிக்கப்பட்டிருந்த
பத்திரமாய் அடைகாக்கப்பட்டிருக்கும்
நினைவுகள்,
பெருங்கனவின் தணியாவெப்பத்தில்
காலாவதியாகுமுன்
காலம் நகர்த்திச்சென்ற
படகொன்றில்
துடுப்பசைத்துச்செல்கின்றன
தன்னையள்ளிக்கொள்ளும் இலக்கு தேடி..

டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி :-)

Friday, July 15, 2011

தாளஸ்வரங்கள்..

(படத்துக்கு நன்றி இணையமே)
காலிவயிற்றின் உறுமல்களை
எதிரொலித்த வாத்தியங்களும்
தன்னிலை மறந்து
தாளமிட்ட கால்களும்
ஓய்வெடுக்கும்
சிலஇடைக்காலத்துளிகளில்,
மெல்லியதாய் முனகிக்கொள்கின்றன
தட்டில்விழும் வட்ட நாணயங்கள்;
ஸ்வரம் தப்பாமல்
இறைஞ்சும் குரலுடன் இழைந்து..



டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணை மற்றும் வல்லமை இதழ்களுக்கு நன்றி :-)

Tuesday, July 12, 2011

அன்புடன் ஒரு மடல்..

(படத்துக்கு நன்றி.. இணையம்)
உனதும் எனதுமாய்
பிரிந்து நின்ற நம் எண்ணங்கள்,
நமதானபோது
பிரிவென்னும் சுனாமி
புரட்டிப்போட்டது நம்மை..

ஓருயிராயிருந்த
ஈருடலிலொன்று..
விட்டுச்சென்ற வெறுங்கூட்டில்,
சடசடத்தடங்கும்
எண்ணப்பறவைகளின் சிறகுகள்
வருடிக்கொடுக்கின்றன
குருதியொழுகும் நினைவுத்தழும்புகளை..

வண்ணமிகு எனதுலகின்
அத்துணை ஜன்னல்களிலும்,
இருட்டின் வாசம் வீசவிட்டு,..
உன்னில் நானடக்கமென்பதை
சொல்லாமல் சொல்கிறதடா நம்பெயர்
என்று,
இன்னொரு கத்தியை செருகிச்செல்கிறாய்
காயத்துக்கு மருந்தாக..
நாளை வரை காத்திருக்க
நானொன்றும் ராமனல்ல;
வந்துவிடு சீக்கிரம்...

டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி :-)