Pages

Friday, April 26, 2013

தாயம்.. (அதீதத்தில் வெளியானது)

களத்திலிறங்கிய காய்
பழமாகவில்லையாம்..
விரும்பிய எண் வரவில்லையென
சபிக்கிறார் பகடைக்காய்களை,
உருட்டியதே தான்தானென்பதை
மறந்து விட்டு.
கிடைத்த புதையல்
ஆணாக இல்லையாம்..
பிறந்தது பெண்ணென்று
வெறுக்கிறார்
பெற்றதே தான்தானென்பதை
வசதியாய் மறந்து விட்டு.
சபிக்கப்பட்டவர்களாய்
ஒதுங்கிக்கிடந்த காயும்
ஒதுக்கப்பட்ட பெண்ணும்
கிடைத்த துரும்பையூன்றி நகர,
தாயப்பகடையுருட்டி
சிம்மாசனத்தில் அமர்த்தியது காலம்..
உரிமை கொண்டாடி மார்தட்டிக்கொண்டும்
சாமரம் வீசிக்கொண்டும்
காலடியில்
விழுந்து கிடக்கும்
பச்சோந்திகளைத்தாண்டிச் செல்கின்றன
மேலும் சில காய்கள்,
காலம் மட்டும்
இன்னும் அதே நேர்ப்பார்வையில்..

டிஸ்கி: வெளியிட்ட அதீதம் மின்னிதழுக்கு நன்றி.

Monday, April 1, 2013

பறவைகள் பூத்த மரம்.. (அமீரகத்தமிழ்மன்றத்தின் ஆண்டுவிழா மலரில் வெளியானது)

இலை நிறைந்து
அடர்ந்த பழங்களினூடே
அலகுகளின் வழி ஒலிபரப்பிக்கொண்டிருந்தன
சங்கீதத்தை
கிளை நிறைந்து படர்ந்திருந்த பறவைகள்
கோடி வீட்டு மாமரத்தில்.
உதயாஸ்தமனங்களை அறிவிக்கும்
சம்பளமில்லாப்பணியாளர்களுடன்
கழிந்தன
வீடு கொள்ளாமல்
நிரம்பி வழிந்த விருந்தாளிகளின் பொழுதுகள்
ரசனையோடு சிலருக்கும்
சற்றே எரிச்சலோடு பலருக்கும்.
கொத்துக்கொத்தாய்ப் பூத்த
பறவைகளின் வாசத்தில்
கிறுகிறுத்து நின்ற மாமரமும்
கொட்டிய செல்வத்தில் புரண்டெழுந்த தனகோடியும்
ஒற்றைக்கவண்கல்லுக்கு
அத்தனையும் உதிர்த்து நிற்க
வெறிச்சோடிய முற்றத்தில் விழுந்து கிடக்கின்றன
தூவிகள் ஒட்டிய
ஒன்றிரண்டு மாம்பிஞ்சுகள். 

டிஸ்கி: அமீரகத் தமிழ்மன்றத்தின் பதின்மூன்றாம் ஆண்டுவிழா மலரில் வெளியானது.

அதீதத்திலும் வெளியிட்டுச் சிறப்பித்த ஆசிரியர் குழுவிற்கு நன்றி.