Pages

Tuesday, May 24, 2016

எவ்வரையில்..

ஒரு தாய்ப்பறவைக்கேயுரிய லாவகத்துடன்
ஒவ்வொரு குச்சியாக உருவி
கூட்டைக்கலைத்துக்கொண்டிருப்பவன்
அதே லாவகத்துடன் முட்டைகளையும்
சட்டைப்பையில் பத்திரப்படுத்திக்கொள்கிறான்
மாலையில் கூடு திரும்பும் பறவைகள்
தேடித் தட்டழியப் போவதைப்பற்றி
அவனுக்கென்ன கவலை..
காக்கைக்கூட்டில் முட்டையிடும் குயிலிடமிருந்து
கள்ளத்தனம் கற்றிருந்தால்
கண்மறைவாய்க் கூடு கட்டியிருந்திருக்கலாமென்று
சுள்ளிகளை மறுபடியும் சேகரிக்கும் இப்பறவைகளுக்கு
என்றேனும் தோன்றக்கூடும்
அதுவரை
கலைத்தலும் உருவாக்குதலும் பொருட்டே
உருண்டு கொண்டிருக்கும் அவ்வுலகம்.

Thursday, May 5, 2016

பட்டாம்பூச்சியும் நீலியும்..

படக்கொடையளித்த இணையத்திற்கு நன்றி
சிறு நகரத்தின் பின்னிரவையொத்த
பெரு நகரத்தின் முன்னிரவில்
தொலைக்காட்சித்தொடர்களின்
விசும்பல் ஓசைக்குள்
அமுங்கிப்போன அக்கதறல் வழக்கம்போல்
அக்குடிசைக்குள்ளேயே அடங்கிப்போனது

மீதமிருந்த ஒன்றிரண்டு ரூபாய் நோட்டுகளைக்
குடிகாரக்கணவனிடமிருந்து
காத்திடும் முயற்சியில்
தூக்கி வீசப்பட்டிருந்தவளின்
தலைக்காயத்திலிருந்து தெறித்த
ஒவ்வொரு துளியையும்
பட்டாம்பூச்சிகளைச் சுமந்து வந்திருந்தவளுக்கு
கதண்டுகளைப் பரிசளித்த
கையாலாகாச்சமூகத்தின் முன்
கேள்விக்குறியாய் விதைத்துக்கொண்டிருந்தாள்

கரைந்து கொண்டிருந்த அவனது பிரியத்தின்
கடைசி நூலிழை
இற்று அறுந்த எக்கணத்திலிருந்தோ
தனது பட்டாம்பூச்சிகளைக்
கூண்டிலடைத்து வாழப் பழகியிருந்த பின்னும்
உச்சந்தலையில் ஆணியறையப்பெற்ற
அந்த நீலி
ரத்தப்பழி தீர்க்க என்றேனும் வருவாளென
காத்திருக்கின்றன பட்டாம்பூச்சிகள்
கூண்டுக்குள் நாட்களை எண்ணியபடி.