Pages

Monday, September 12, 2011

வாடா மலர்கள்..

என் மீதான உன் காதலை
தவிப்புடன் அடைகாத்த நெஞ்சை
உதடுகளிலிருந்து உதிரும் சொற்களை முந்திக்கொண்டு
காட்டிக் கொடுத்துவிடுகின்றன...
அலைபாயும் உன் கண்கள்;
இறுமாந்து போகிறேன் நான்...

நிராகரிக்கப்படாமல், உனக்கென நிச்சயிக்கப்பட்டதும்
மழையெனப்பொழிந்த உனதன்பால்
நமக்கென ஓர் கனவுலகை படைப்பிக்கிறாய்..
உன் கண்கள் வழியே காணும் கனவும்கூட
சுகமாய்த்தான் இருக்கிறது;
பெருமிதப் படுகிறேன் நான்...

குறுகியும் நீண்டும் கடந்துசென்ற
ஊடலும் கூடலுமான ஒற்றையடிப் பாதைகள்
நமக்கென செதுக்கி வைத்த
ராஜபாட்டையில்
உன் கைத்தலம் பற்றிய உரிமையுடன்
உன் மனதருகே கிசுகிசுக்கிறேன்..
'உனக்கான கடமைகளை எனக்கும் பங்கிடு' என்று..
இம்முறை வியப்பது உன் முறையாயிற்று..

வாழ்ந்த காலங்களின் சுவை
அடிமனதில் இன்னும் தித்தித்திருக்க,
பற்றிய கைத்தலத்தை இன்னும் இறுக்குகிறாய்;
முட்களையெல்லாம் பூவாக்கும் வித்தையை
வயோதிகத்திலும் கைவிடாமல்..
ஏதும் மிச்சப்படாமல்
கரைந்துபோகிறேன் நான்..

உணர்வதற்கும்
உணர்த்தப்படுவதற்குமான இடைவெளியில்
உயிர்ப்புடனும்,
களவுக்கும்
கைத்தலத்துக்குமான பெருவெளியில்
கனவுகளுடனும்,
தலம்பற்றியபின் கடமையுடனும்
வாழ்ந்த காதல்..
வயோதிகத்தின் வாசல்படியில்
சொரிந்து நிற்கும்
ஊவாமுட்களையும்
மலரச்செய்து வாசமாய்;
சொரிந்து நிற்கிறது பன்னீர்ப்பூக்களை,
பிணைந்திருக்கும் இரு நெஞ்சங்களில்..

டிஸ்கி: வல்லமைக்காக எழுதியதை இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன். இந்தத் தளத்தில் இது என்னோட ஐம்பதாவது படைப்பு. தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி :-)


18 comments:

  1. இப்போதைய காதல் போல மொட்டிலேயே கருகாது
    முதுமைவரை இதமாய் தொடர்ந்து முதிர்ந்து
    ஒரு முன்னுதாரணமாக இருக்கும் ஒரு
    அழகான காதல் தம்பதியினரின் படமும்
    அதற்கான அழகான விளக்கம் போல் அமைந்த கவிதையும்
    மிக மிக அருமை
    அவர்களது அன்னியோன்யத்தை சொல்லிச் செல்லும் விதம்
    மிகமிக அற்புதம்
    மனம் தொட்டுப் போகும் அழகிய காதல் கவிதையைத்
    தந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  2. /முட்களையெல்லாம் பூவாக்கும் வித்தையை
    வயோதிகத்திலும் கைவிடாமல்../

    என்றுமே வாடாது அன்பால் மலர்ந்த பூக்கள். அருமையான கவிதை சாந்தி.

    ReplyDelete
  3. பிணைத்தக் கரங்களைப் பிரியாது,வாழ்வின் இறுதிவரை வழிநடத்தும் காதலைச் சொன்ன வார்த்தைகள் அழகு. முதுமையின் காதலைச் சிலாகித்த வரிகள் அழகோ அழகு.

    ReplyDelete
  4. கவிதை செமையா மணக்குதுங்கோ சூப்பருங்கோ...!!!

    ReplyDelete
  5. //ஏதும் மிச்சப்படாமல்
    கரைந்துபோகிறேன் நான்..//

    அன்பில் கரையும் அனுபவமே அலாதிதான்.அதுவும் வயோதிகத்தில்
    துணையின் அன்பில் கரைவது என்றால்...

    என்ன ஒரு காதல்!!

    ஊவா முட்களையும் மலரச் செய்து
    பன்னீர்ப்பூக்களை சொரிந்து மணம்
    நன்றாகவே வீசுகிறது கவிதையிலும்!!

    ReplyDelete
  6. ''...என் மீதான உன் காதலை
    தவிப்புடன் அடைகாத்த நெஞ்சை
    உதடுகளிலிருந்து உதிரும் சொற்களை முந்திக்கொண்டு
    காட்டிக் கொடுத்துவிடுகின்றன...
    அலைபாயும் உன் கண்கள்;
    இறுமாந்து போகிறேன் நான்...''
    மிக விததியாசமான கவி வரிகள். எனக்குப் பிடித்துள்ளது வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  7. உன் கண்கள் வழியே காணும் கனவும்கூட
    சுகமாய்த்தான் இருக்கிறது;//

    அன்பும் உண்மையானால் அது என்றுமெ அழிவதில்ல... காலத்திற்கும் அன்பை பற்றி கவிதையில் கலக்கலாக சொல்லி அசத்தியுள்ளீர்கள்

    ReplyDelete
  8. உன் கண்கள் வழியே காணும் கனவும்கூட
    சுகமாய்த்தான் இருக்கிறது;

    ஆஹா..

    ReplyDelete
  9. வாழ்ந்த காலங்களின் சுவை
    அடிமனதில் இன்னும் தித்தித்திருக்க,
    பற்றிய கைத்தலத்தை இன்னும் இறுக்குகிறாய்;
    முட்களையெல்லாம் பூவாக்கும் வித்தையை
    வயோதிகத்திலும் கைவிடாமல்..
    ஏதும் மிச்சப்படாமல்
    கரைந்துபோகிறேன் நான்..

    அருமையான கவிதை வரிகள் வாழ்த்துக்கள் சகோ .
    நன்றி பகிர்வுக்கு ........

    ReplyDelete
  10. வாங்க ரமணி,

    வாசிச்சு சிலாகிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க :-))

    ReplyDelete
  11. வாங்க ராமலஷ்மி,

    வாசிச்சதுக்கு நன்றி.

    ReplyDelete
  12. வாங்க கீதா,

    வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க :-)

    ReplyDelete
  13. வாங்க மனோ,

    ரொம்ப நன்றிங்கோ :-))

    ReplyDelete
  14. வாங்க ராஜி,

    வயோதிகம் வரையிலும் அது நீடிக்க கொடுப்பினை வேணும் :-))

    ReplyDelete
  15. வாங்க கோவைக்கவி,

    ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு :-)

    ReplyDelete
  16. வாங்க மாய உலகம்,

    உண்மையான அன்பு அழிவதேயில்லைதான். ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு :-)

    ReplyDelete
  17. வாங்க ரிஷபன்,

    ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு :-)

    ReplyDelete
  18. வாங்க அம்பாளடியாள்,

    வாசிச்சு ரசிச்சதுக்கு நன்றிங்க :-)

    ReplyDelete

கவிதை சொன்னவர்கள்.