Pages

Wednesday, August 15, 2012

கனவு சாம்ராஜ்யத்தில்..


இணையத்தில் சுட்ட படம்
அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்தனர்
எனது சாம்ராஜ்யத்தில்.

பசிப்பிணி முற்றாய் அகன்றதனதால்
கழுவிக்கவிழ்த்து விட்ட
மணிமேகலையின் அட்சயபாத்திரம்
சிலந்திகளின் உறைவிடமாகிவிட,
சுமையற்ற கல்வியாலயங்களில்
குடி புகுந்த சரஸ்வதி
நிரந்தரக்கொலுவீற்றிருந்தாள்
சிறார்களின் புன்னகைகளில்..

பேராசையுடனலைந்த
வரதட்சணைப்பேயின் தலை
சுக்கு நூறாகச்சிதறி விட
பெண் சிசுக்களுக்கென்று மட்டும்
மடி சுரந்த
எருக்கிலமும் கள்ளியும்
அடிமாடுகளாய்ப்போய்க்கொண்டிருந்தன
அடுப்படியில் பலியிடப்படுவதற்கென்று..

கேட்டுப்பெறாமல்
தானாய்க்கிடைத்த சுதந்திரக்காற்றில்
கொல்லைப்புற மருதாணியும்
முற்றத்துத் துளசியும் வாசம் பரப்பி வர
அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்து கொண்டிருந்தனர்
எனது கனவு சாம்ராஜ்யத்தில்..

டிஸ்கி: வல்லமையின் சுதந்திர தினச் சிறப்பிதழில் எழுதியதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.

அனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்

9 comments:

  1. கவிதை அருமை சாந்தி.

    முல்லைக்கும் மருதாணிக்கும் வீசிய காற்று அனைவருக்கும் வீசட்டுமாக!

    இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. சிறப்புக் கவிதை அருமை... நன்றி... (TM 2)


    ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளரட்டும்...
    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

    ReplyDelete
  3. கனவு பலிக்கட்டும்.
    சுதந்திர தின நல வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  4. துளசிக்குக் கிடைத்த சுதந்திரம்கூட நமக்குக் கனவில்தான்.அருமையா இருக்கு சாரல் !

    ReplyDelete
  5. /*பசிப்பிணி முற்றாய் அகன்றதனதால்/* புரியவில்லையே? தட்டச்சுப் பிழையா?

    ReplyDelete
  6. கேட்டுப்பெறாமல்
    தானாய்க்கிடைத்த சுதந்திரக்காற்றில்
    கொல்லைப்புற மருதாணியும்
    முற்றத்துத் துளசியும் வாசம் பரப்பி வர
    அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்து கொண்டிருந்தனர்
    எனது கனவு சாம்ராஜ்யத்தில்..//

    கனவில் மட்டும் அல்லாமல் நினைவிலும் சுபிடசமாக வாழ்ட்டும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அறிவுப் பசிக்கும் வயிற்றுப் பசிக்கும் நிரந்தர தீர்வு கிட்டிவிட்டபின் என்ன? கவிப்பசி மட்டுமே நிரந்தரமாய் நீடிக்கும். கனவு சாம்ராஜ்யத்திலேனும் சுதந்திரக் கனவு காணமுடிகிறதே... அற்புதமான கவியும் கருவும். பாராட்டுகள் அமைதிச்சாரல்.

    ReplyDelete
  8. வாசித்துக் கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete

கவிதை சொன்னவர்கள்.