Pages

Saturday, March 14, 2015

நல்லாச்சி

மெஹந்தி இடத்தெரியாத நல்லாச்சியை
உள்ளங்கையில் சிவந்திருந்த
நூடுல்ஸ் வரிகளும் அன்னமும்
சற்றே மிரளச்செய்திருந்தன
தொப்பியணிந்த விரல்களும்
இட்லி தோசையிட்ட உள்ளங்கைகளுமாய் வாழ்ந்த
அந்த கிராமத்துமனுஷி
சற்று அந்நியப்பட்டே நின்றிருந்தாள் அச்சூழலில்
அடுத்த விடுமுறைக்குள் கற்றுக்கொள்வதாய்
சபதமிட்டிருந்த நல்லாச்சி
சாக்குச்சொல்ல வார்த்தையும் தேடிக்கொண்டிருந்தாள்

பட்டணத்துப்பேத்தியை எதிர்கொள்ள நாணியவளிடம்
இட்லி தோசை வரைந்து
கூடுதலாய்த்தொப்பிகளும் வேண்டிய
அந்தக்கரும்புக்கொழுந்தின்
மருதாணிப்பூங்கரங்களில்
இழுத்தணைத்து முத்தமிட்ட ஆச்சியின்
அன்பு சிவந்திருந்தது
பேத்தியின் கைகளில்
மருதாணி வாசனையுடன்.

வால்: கவிதையை வெளியிட்ட அதீதம் இதழுக்கு நன்றி.

1 comment:

  1. மருதாணியின் வாசனையையும் நல்லாச்சியின் அன்பையும் உணர வைக்கும் அழகான கவிதை.

    ReplyDelete

கவிதை சொன்னவர்கள்.