செண்பகமும் பன்னீர் ரோஜாவும் கிடைத்தால்
பள்ளிப்பிராய நினைவுகளின் வாசனை
சூழ்ந்துகொள்ளும் பொன்னாக்காவை.
பால்யத்தை மீட்டுக்கொணரும் வாசனைகள்
அவ்வப்போது அவளை உயிர்ப்பித்தபோதும்
இன்ன பிற வாசனைகள் அவளைக் கைவிடவில்லை
அவளும் அவற்றைக் கைவிட்டு விடவில்லை.
அவற்றின் பின்னொரு
பைத்தியத்தைப்போல் அலைந்து
ஒவ்வொன்றாக நுரையீரலில் சேகரிப்பாள்
அக்கணங்களில் அவள் முகம்
புத்தனின் மோன நிலையை ஒத்திருக்கும்
என அங்கலாய்த்துக்கொள்ளும் வீட்டாரை
சட்டை செய்ததேயில்லை அவள்
பூநாகமென ஒவ்வொரு வாசனையிலும்
கிறங்கிக்கிடந்தவள்
ஒரு வெயில் நாளில்
மண்ணெண்ணெய் வாசத்துடன் கருகிக்கிடந்தாள்
அவளுக்குச் சற்றும் பிடிக்காத வாசனை அது
என்பதை
அன்று நினைவு கூரத்தவறவில்லை அத்தனை பேரும்.
வால் : ஆகஸ்ட் மாத இதழில் கவிதையை வெளியிட்ட அகநாழிகை இதழுக்கு நன்றி.
No comments:
Post a Comment
கவிதை சொன்னவர்கள்.