ஸ்ரீதேவி மூக்குத்தியில் ஆரம்பித்து
எட்டுக்கல் பேசரி வரை
விதவிதமாய் ஆசைப்பட்டு
கடைசியில்
ஒற்றைக்கல் மூக்குத்தியில் நின்றது
அவர்களது கனவு
மகள்களின் எதிர்பார்ப்பைத்
தள்ளித்தான் போட முடிந்தது
கையாலாகாத பெற்றோரால்
நீலமும் பச்சையும் சிவப்புமாய்
கல் பதித்த
வண்ணக்கனவுகளில் மிதந்தவர்களை
அம்பாளாய் மீனாட்சியாய்
தன்னை உருவகித்துக்கொண்டவர்களை
தங்கமொட்டு மூக்குத்திகளாய் அவதரித்த
அம்மாவின் தேய்ந்த மோதிரம்
தரைக்கு அழைத்து வந்தது
ஒரு சுபயோக நன்னாளில்
அவை
அக்காள் குழந்தையின் காதுகளை அலங்கரித்தபோது
ஏழையாய்ப்பிறந்த வெம்பலுடன்
இரகசியமாய்த் துடைத்தெறிந்தனர் அவர்கள்
கண்ணீருடன் கனவுகளையும்
No comments:
Post a Comment
கவிதை சொன்னவர்கள்.