Pages

Friday, January 20, 2023

நல்லாச்சி - 46


பச்சரிசிப் பொங்கலும் பல காய்க் குழம்புமாக
முதல்நாள் கொண்டாடியாயிற்று
தவுனுக்கு வாயூறிய பேத்தியின் மனதை
சுட்ட பனங்கிழங்கு கொண்டு
ஆற்றுகிறாள் நல்லாச்சி
துள்ளும் செல்லக்கன்றின்
கழுத்தணைத்துக் கொஞ்சி
அடக்கிவிட்டதாய் ஆர்ப்பரிக்கும்
பேத்திக்குப் பரிசாய் விரலில் விழுகிறது 
ஆச்சியின் நெளிமோதிரம் இரண்டாம் நாளில்
கடவம் நிறைந்த கரும்புச்சக்கைகளை
அடுப்பெரிக்க ஆகுமென்று
வெயில் நனைக்கும் முற்றத்தில்
பரப்பும் நல்லாச்சியிடம்
காதல்மணம் கொண்டதால் ஆகாதவர்களான
மாமனையும் அத்தையையும் கண்டால்தான்
காணும்பொங்கலும் நிறைவுறுமென
சொல்ல வந்தவை திக்கி
நிலைகொள்ளாமல் நிற்கிறாள் பேத்தி
அறியாத நல்லாச்சி
உடைத்து நீட்டுகிறாள் இன்னொரு கரும்புத்துண்டை
வழக்கம்போல் இவ்வருடமும்
காணாமலேயே கழியப்போகிறது
காணும் பொங்கல்

No comments:

Post a Comment

கவிதை சொன்னவர்கள்.