அரக்கியுட்டாத்தான் அடர்த்தியா வளரும்
கூறிய தாத்தா
கிளைகளைக் கழித்துத் தள்ளுகிறார்
ஒட்டடைக்குச்சிகள்போல் சிலவும்
பாப்கட் சிறுமிகள்போல் பலவும்
திட்டுத்திட்டாய்ப் பசுமை பூசிய இரண்டொன்றுமென
வேறு முகம் போர்த்தியிருக்கிறது தோட்டம்
சின்னாளில் அவை பலவாய்க் கிளைக்கும்
பல்கிப் பலன் தருமெனின்
தென்னைக்கும் பனைக்கும் மட்டும்
ஏனிந்த ஓரவஞ்சனையென்று கேட்டு
நல்லாச்சியின் ஒக்கலில் அமர்ந்தவாறு
பூவரசம்பீப்பியை ஊதியபடி செல்கிறாள் பேத்தி
யோசனையிலாழ்கிறார் தாத்தா
அரக்கிவிடாததால் அடர்த்தியிழந்த
வழுக்கைத்தலையைச் சொறிந்தபடி
No comments:
Post a Comment
கவிதை சொன்னவர்கள்.