அமைதியாய் நகர்ந்துகொண்டிருந்த வரிசைகளில்
எறும்பாய் ஊர்ந்து சென்ற வாகனங்கள்
முன்னும் பின்னுமாய் முட்டிமோதியும்
தவித்துத் தடுமாறியும்
நகர முயன்றுகொண்டிருந்தன.
கிடைத்த இடைவெளிகளில் புகுந்தவையோ
நங்கூரமிட்டுக்கொள்ள,
அடைபட்ட அவஸ்தையில்
அலறிக்கொண்டிருந்தன அத்தனையும்
தொண்டை கிழிய..
கடலாய்ப் பரந்திருந்த போக்குவரத்தை
வாய்க்காலாக்கிய பெருமையுடன்
மிட்டாய்க்காக அடம்பிடிக்கும் குழந்தையென
கால் பரப்பி நின்றிருந்தது
நாற்சந்திச்சாலை நடுவில் வாகனமொன்று
பசுந்தழைகளை உடுத்திக்கொண்டு..
பசுந்தழைகளை உடுத்திக்கொண்டு..
“பத்து பேராய்ச் சேர்ந்தால் ஓரத்திற்கு நகர்த்தி விடலாமே,
மற்றவர்களுக்கு இடையூறில்லாதபடி..”
என்றபடி
எத்தனையாவது மனிதனாகவோ
கடந்து கொண்டிருந்தேன் நான்.