Pages

Monday, March 30, 2026

நல்லாச்சி


இருளென்றால் பயப்படும் பேத்திக்கு
இரவும் ஆகாது
மூன்றுகண்ணன் வசிப்பதாய்
முற்றத்திற்கும் செல்ல மாட்டாள்
இரவின் நிறத்தைப் பூசியதால்
கருமையும் ஒவ்வாததாயிற்று

ஒரு எள்ளுருண்டையைப்போல்
திரண்டிருக்கும் கன்றுக்குட்டிக்கோ
அவளென்றால் தனிப்பிரியம்
ஒதுக்கினாலும் விரட்டினாலும்
அகலாது பிரியஞ்சொரியும்

பேத்தியைத் தெளிவிக்க
இட்டுச்சென்ற நல்லாச்சி
பலவும் சொல்லிப் போதிக்கிறாள்
பிஞ்சு மனதைப் பக்குவப்படுத்துகிறாள்
இரவின் கருமைக்குள்தான் நட்சத்திரங்கள்
தம் முகவரியைத் தேடிக்கொள்கின்றன
வெளிச்சம் ஓர் பிம்பம் எனில்
இருள் ஓர் நிஜம்
வெயில் குடித்துக் களைத்த பூமியின்
போர்வையே இருள்
இத்தனை அஞ்சும் நீ
கண்துஞ்சும்போது
உன்னுள் அமைதியாய் உறைந்திருப்பவும்
காரிருளே
இருளை அஞ்சுவாயெனில்
அது
உன்னையே நீ அஞ்சுவதாம்
யோசிக்க ஆரம்பிக்கிறாள் பேத்தி
ஊர ஆரம்பித்திருக்கிறது எறும்பு
கல் தேய்ந்துவிடும் விரைவில்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Monday, March 23, 2026

நல்லாச்சி


நல்லாச்சியிடம் கதையளக்கிறாள் பேத்தி
கண்டபடி பறக்கிறது கற்பனைக்குதிரை
கதை சொல்வதும் அளப்பதும்
ஆச்சிகளின் வழக்கம்
இங்கு இன்று
அது பேத்தியின் முறை

நல்லாச்சியின் முதல் விமானப்பயணம்
குதூகலம் பாதி
கலவரம் பாதியென இருப்பவளிடம்தான்
கண்ணகல உரைக்கிறாள் பேத்தி
மேகங்களின் மேல் ஓய்வெடுக்கும் நிலவை
வன்னமிகு இந்திரலோகத்தை
மேலோகம் சென்ற மூதாதையரை
கண்குளிரக் காணலாமென்கிறாள்
அறிவுக்கும் சந்தேகத்துக்குமிடையே
ஊசலாடுகிறது நல்லாச்சி உள்ளம்

உயரப்பறந்த வானூர்தி
மேகங்களின்மேல் மிதக்கிறது
நல்லாச்சியின் பார்வையும்
தொடுதூரம் வரை தொட்டுத்திரும்புகிறது
அங்குமிங்குமாய்த் தேடுகிறது
விசாரித்த பேத்தியிடம் சொல்கிறாள்
‘எங்க அப்பாவைத் தேடுகேன்’
வார்த்தை வராத பேத்தி
நல்லாச்சியுடன் கைகோர்க்கிறாள் ஆதுரமாய்

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Monday, March 16, 2026

நல்லாச்சி


நாளும் நாலு நல்லதை
நடைப்பயிற்சியின்போது அலசுவது
நல்லாச்சிக்கும் பேத்திக்கும் வழக்கம்
தகவல்கள் பரிமாறுவதுபோலவே
அறிவுரைகளும் பரிமாறப்படும்
பேதமின்றி ஏற்பாள் நல்லாச்சி

வகுப்புத்தோழி குடும்பச்சண்டையால்
அம்மாச்சி ஊருக்குப் போய்விட்டது முதல்
நாளது தினம் தொலைக்காட்சிச்செய்தி வரை
பிழிந்து அலசியபின்
பேத்திக்கு வருகிறது சந்தேகமொன்று
மனிதர்கள் ஏன் மோதிக்கொள்கிறார்களென

அகந்தையும் தன்முனைப்பும்
பெற்றுப்போட்ட காரணங்கள்தாம்
காரணங்களென்கிறாள் நல்லாச்சி
துளிக்குள் பிறந்தழியும்
மாந்தர் அறியாரோ
துளிக்குள் துளியே தாமென்று
அகந்தை அமர்ந்த அறிவும்
மதயானை புகுந்த மல்லித்தோட்டமும்
பிழைக்குமோ!! தழைக்குமோ!!
கேள்விகளின் பாதையில்
சென்றுகொண்டேயிருக்கிறாள் பேத்தி
நின்று கொண்டேயிருக்கிறாள் நல்லாச்சி
யுகயுகமாய்..

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Sunday, March 1, 2026

தனிமையின் தண்மை


தூரத்து மலையில்
தனித்தலையும் ஒற்றைக்குருவி
மனிதவாசம் படா வெளியில்
ஒற்றையாய்ப்பூத்திருக்கும் நீலப்பூ
இன்னொரு ஒற்றைப்பாறைக்கு
தாவிச்செல்லும் வரையாடு
தன்னுள்மூழ்கித் தியானிக்கும்
அலையற்ற சிறுகுளம்
அவரவர் தனிமைக்கு
அவரவரே துணையாயிருக்க
பனித்துகள் திரட்டி
நிலாப்பொம்மை செய்கிறது மலை
ஒவ்வொருவரின் தனிமையையும்
கதகதப்பாய் அணைக்கிறது நிலா
குளிர்கிறது தனிமை.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.