Pages

Sunday, June 28, 2026

ஒரு துளியின் துளிர்ப்பு..


சாம்பல் படர்ந்த இதயங்களின் மேல்
மழைத்துளிகள்
ராகம் பாடிச் செல்கின்றன
சுட்டெரித்த சொற்களின் வடுக்களைக் கழுவி
மனதுக்குள் புதைந்திருந்த மௌனத்தை
பாட வைக்கிறது அந்தப் பெருமழை.

சொற்களால் வீழ்த்தப்படும் மனிதர்களை
இயற்கை ஒருபோதும் கைவிடுவதில்லை
கனிவுடன்
அமுதம் பொழிந்து உயிர்ப்பிக்கிறது
பேரழிவுக்குப் பின் நிகழும்
பேரன்பின் துளிர்ப்பு அது

சுட்டெரித்த எதிர்ப்புகளையெல்லாம் உரமாக்கி
அவநம்பிக்கையின் வேர்களை அறுத்தெறிந்து
மன்னித்தலின் பெருவழியில்
புன்னகையோடு பயணிக்கும் அந்த உயிருக்கு
ஒரு துளி அன்பு போதும்
அதை
யுகாந்த காலம் வரை வாழவைக்க.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Saturday, June 20, 2026

நல்லாச்சி


சந்தைவிலை சரியாய் அமையவில்லையாம்
கொட்டி வீசப்பட்டிருக்கின்றன காய்கனிகள்
கூடைகூடையாய் சாலையோரத்தில்
எதிர்ப்புமுகம் காட்டும்விதமாய்
கண்டு பதைபதைக்கிறாள்
விவசாயியும் தாயுமான நல்லாச்சி
ஊனுறக்கம் மறந்து அல்லும்பகலும் காத்ததெல்லாம்
பயிர்வாடத் தான் வாடி நின்றதெலாம்
அழிய விடுவதற்காகவோவெனக் குமுறுகிறாள்

ஆதரவற்றோர்க்கு அளி
அதிக லாபமின்றி அள்ளிக்கொடு
அல்லது
விளைந்ததின் மதிப்பை விவேகமாய்க்கூட்டு
விழுந்த விலைக்காய் நீயும் சோர்ந்தால்
உழைத்த நிலத்தின் உதிரம் வற்றாதோ
பக்குவம் செய்த மாங்காயை 
சாடியின் இருட்டுள் தவம் செய்ய வை
தக்காளியை அழலேற்றிப் பதனிடு
விளைவித்த நீயே விலையதிகாரியாவாய்
நிலத்தின் அறத்தையும் காப்பாயாக

அதுகாறும் அழுதவன் யோசிக்கிறான்
எந்நிலையிலும் கைவிடா பூமியை
தானும் கைவிடலாகாதெனத் தெளிகிறான்
மாற்றுவழி ஆயிரம் பிழைப்பிற்காய் இருக்க
காற்றைப்போல் அலைபாய்தல்
தகுமோவென எண்ணுகிறான்
பலனடையும் நடுவர்களை விலக்கி
அறுவடை நேரே அடுப்புக்குச்செல்ல
பாதை சமைக்க ஆரம்பிக்கிறான்
பயணம் இனி இனிதாய் அமையட்டும்..

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Saturday, June 6, 2026

நல்லாச்சி


பாகப்பிரிவினை வேண்டி
சண்டித்தனம் பண்ணுகிறார் சின்னத்தாத்தா
எல்லாம் பகிர்ந்து முடித்தபின்
தோட்டத்திலிருக்கும் மாமரத்திற்காக
வந்து நிற்கிறது பஞ்சாயத்து

அடிபெருத்த மாமரம் மரப்பலகைக்காகுமென
அடிபோட்டுக்கொண்டிருக்கிறார் சின்னத்தாத்தா
காய்ப்பு முடிந்த முதியமரம்
கட்டில்செய்ய ஆகுமென்பது அவர் வாதம்
வாடாத பசுமரம் வாசமுள்ள பால்மரம்
கிளை கழித்தால் தளிர்க்கும் 
முதிர்ந்தாலென்ன மூலையில் வாழட்டுமென
பெரியவர் கண்கசிகிறார்
இராத்தூக்கமென்பது இனி இராதென்பதுபோல்
கண்மூடிக் குமைகிறார்

பேத்தியின் ஆலோசனைப்படி தெளிகிறார்
அடிமரம் உனக்கு கிளையெலாம் எனக்கு
பிரி பாகத்தை என இறங்கிவருகிறார்
ஆனாலொன்று.. 
என் பாகத்தைச் சேதப்படுத்தாமல்
உன் பாகத்தை எடுத்துக்கொள் என்கிறார்
அடிமரமின்றி நுனிமரம் எங்ஙனம் பிழைக்கும்
குழம்புகின்றனர் கோள்மூட்டிய குறுக்குபுத்தியோர்
குறுஞ்சிரிப்புடன் நகர்கின்றனர் சான்றோர்
தங்கள் பாகத்துக்கிளையில்
பேத்திக்கு ஊஞ்சல் கட்டுகிறாள் நல்லாச்சி
புன்னகையுடன் உதவுகிறார் தாத்தா
சின்னத்தாத்தாவின் புகைச்சலை ரசித்தவாறே.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் இதழுக்கு நன்றி.