Pages

Monday, November 22, 2021

நல்லாச்சி - 20


வரிகளைத் தொலைத்த பாடலொன்று
வண்டாய் ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது 
நல்லாச்சி மனதில்
ஒன்றுக்கொன்று தொடர்பிலாத வரிகள்
தம்மைத்தாமே பற்றியிழுத்து
ரயில்பெட்டிகளாய்க் கோர்க்க முயன்று
மேலும் சிதறி மூலைக்கொன்றாய் விழுகின்றன
எங்கோ ஒலிக்கும் மாங்குயிலின் கீதம்போல்
அவளைப் பின்தொடர்ந்து கொண்டேயிருக்கிறது அப்பாடல்
தடத்தை மிஞ்ச விட்டுச்சென்ற பாம்பாய்
தன்னை உருக்காட்டி மறையும் அதன்
நுனி பற்றிழுத்து
குடத்திலடைத்து விட ஆவேசமாய் 
முயல்கிறாள் நல்லாச்சி
நொடியில் அதன் பிம்பத்தையள்ளி
இதோவென சேர்ப்பிக்கிறாள் பேத்தி
கை கோர்த்த பாடல் 
கொண்டாடிக்குதூகலிக்கிறது ஆச்சியின் இதழ்களில்
ஆச்சர்யப்படும் பேத்திக்கு
விசிலில் பதிலளிக்கிறாள் நல்லாச்சி
டேக் இட் ஈஸி ஊர்வசியென..

0 comments: