Pages

Thursday, August 14, 2025

கைவிடப்பட்ட கூடு (காற்றுவெளி)

உடைந்த சுள்ளிகளும் பஞ்சுப்பிசிறுகளும்
பாதி பின்னிவிடப்பட்டிருக்கும் நார் இழைகளுமாய்
முற்றுப்பெறாமல் நிற்கும் அக்கூட்டில்
முராரி ராகமிசைக்கின்றன
அங்கே பொரிக்கவிருந்த பறவைக்குஞ்சுகள்
யாருமற்ற கூட்டின் சுவர்களில்
எதிரொலித்து அடங்குகிறது அந்த இசை

ஒரு கனவு ஆரம்பிக்கும் முன்னரே
முடங்கி 
கைவிடப்பட்டதன் கதை
கேள்விக்குறியாய் நிற்கிறது அதன்முன்
கனவுகள் எல்லாமே
கண்டு கைவிடப்படுவதற்கு மட்டுந்தானா?
முழுமை பெறாத கனவுகளின் நினைவுச்சின்னமாய்
இனியெப்போதும் அந்தக்கூடு
அங்கேயே காத்திருக்கும்
என்றாவது ஓர்நாள் அப்பறவைகள்
அக்கூட்டின் நலம் விசாரிக்க
அங்கே வரக்கூடும்
கைவிடப்பட்ட இன்னொரு பறவைக்கு
இந்தக்கூடு அடைக்கலமாகவும் கூடும்

முழுமையடையா பறவைக்கூடு
வெற்று மௌனத்துடன் உறைந்து
ஒரு துயரச்சின்னமாய் 
முடிவிலா சோகத்துடன் காத்திருக்கிறது
கிளைகள் காற்றில் மெல்ல அசைகின்றன
எங்கிருந்தோ ஒரு குயிலின் கூவல் கேட்கிறது
முடிக்கப்படாத இந்தக்கூட்டின்
கதை அறியாது
அதைக்கடந்து செல்கிறார்கள்
அது கைவிடப்பட்டதன் துயரமும் அறியாமல்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட காற்று வெளி மின்னிதழுக்கு நன்றி.

No comments: