தோழி செல்வியின் பூனை
இருளின் ஆழத்தில் தனிமையில்
சிறு பானைக்குள் முடங்கியமர்ந்து
பகற்கனவில் ஆழ்ந்திருந்தது சிறு பூனை
சோம்பல் முறித்து நெளிந்தெழுந்த அது
வெளியேற இயலாமல் திகைத்தது
தவித்து வழிதேடிய பூனையின்
சின்ன மூளைக்குள் பிரளயமே நடந்தது
அதன் ஒவ்வொரு அசைவையும்
தடைசெய்து சிறைப்படுத்தியது
அந்த சின்னஞ்சிறு பானை
கால் வீசி நடந்த கம்பீரம்
பழங்கனவாய் மின்ன
ஏக்கத்தின் மொழி கண்ணீராய் வழிய
சிக்கிக்கொண்ட ஆன்மா போராடுகிறது
பார்ப்பவர்களுக்கோ
அதுவுமொரு விளையாட்டாய்த்தெரிகிறது
உலகமே ஒரு பெரும் பானை
பூனை என்பது
வாழ்வின் பிரதிபலிப்பும்தான்.

No comments:
Post a Comment