வாழும் பல்லியும் மனைப்பாம்பும்
அரங்கு வீட்டில் உலவும் தேள்களும்
அசைத்துப்பார்த்ததில்லை பேத்தியை
பெரிய தாத்தாவின் முழ நீளத்தாடிக்கும்
மிலிட்டரி மாமாவின் கம்பீர மீசைக்கும்
சற்றும் பயந்ததில்லை அவள்
கண்ணைக்குத்துவதாய்ச்
சொல்லப்படும் சாமியிடமும்
தூக்கிச்சென்றுவிடுவதாய்
நிறுத்தப்படும் பூச்சாண்டியிடமும்
ராஜபார்ட்டுகளுக்குக் கோமாளிவேஷமிடுகிறார்களேயென
பரிதாபமேயுண்டு அவளுக்கு
தேனீக்குப் பயப்படாத மாமன்
குளவிக்கு அஞ்சும் விந்தையும்
முரட்டுக்காளையைத் தட்டி விலக்கும் செல்லாச்சி
மருமகளிடம் காட்டும் பணிவும்
என்றுமே புரிந்ததில்லை அவளுக்கு
ஆளைவிழுங்கும் சுறாமீனொன்றை
ஆங்கிலப்படமொன்றில் கண்ட நாள்முதல்
அத்தனை தைரியத்தையும் மறக்கிறாள்
எந்தக்குழாயின் வழி எத்தனை சுறா வருமோவென
அண்ணன் போடும் தூபத்தால்
அடுக்களை செல்லவும் மறுக்கிறாள்
சாமதானபேதங்களை பேத்தியிடமும்
தண்டத்தை அண்ணனிடமும் பிரயோகித்தபின்
நிலைமையைச் சீரமைக்க முற்படுகிறாள் நல்லாச்சி
ஆதியிலிருந்து ஊட்டி வளர்த்ததெல்லாம்
பாதியில் கரைந்து போனாலும்
எல்லாப்பூச்சையும் அழித்துவிட்டு
மறுபடியும் ஆரம்பித்திருக்கும்
அந்த ஓவியம் செவ்வனே நிறைவுறுவதாக.
டிஸ்கி: கவிதையை வெளியிட்ட "பண்புடன்" மின்னிதழுக்கு நன்றி.

No comments:
Post a Comment