Pages

Sunday, February 22, 2026

நல்லாச்சி


உலகத்து வெயிலெல்லாம் உம்மேலதான்’
செல்லமாகக் கடிகிறாள் நல்லாச்சி
நட்புகளுடன் விளையாடும் பேத்தியை
உச்சிப்பொழுதின் வெப்பம்
வாட்டுமென்ற அக்கறையில்
கலந்தாலோசித்த பட்டாளம்
திருவிழா விளையாட்டைத் தேர்கிறது
அறங்காவலராக்குகிறது நல்லாச்சியை

செங்கற்களே மூர்த்தங்களாய்
அகப்பட்ட பூக்களே தோரணங்களாய்
வடிவெடுக்கிறது சப்பரம்
பூஜைப்பொருட்கள் ஒருவன் உபயம்
நைவேத்யம் ஒருத்தி கொணர்கிறாள்
காற்றில் ஒருவன் கொட்டுமுழக்க
தாத்தாவின் கைத்தடி நாகஸ்வரமாகிறது
ஏதும் கொணராத ஒருத்தியை
விலக்குகிறது கூட்டம்

பதைக்கிறாள் நல்லாச்சி
ஓதுகிறாள் பேத்தியின் காதில்
களிமண்ணில் வனைகிறார்கள்
அழகான ஸ்பீக்கர் செட்டை
உபயதாரராக்குகிறார்கள் விலக்கப்பட்டவளை
எட்டூருக்கு முழங்குகிறது இசை
கிளம்புகிறது புறப்பாடு
குதூகலிக்கிறார் இறைவன்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Monday, February 16, 2026

நல்லாச்சி


பனிச்சறுக்கு விளையாட ஆசை பேத்திக்கு
நயந்தும் பயந்தும் 
பெற்றோர்க்குச்சொன்னவையெல்லாம்
கிணற்றில் சறுக்கிய கல்லாய்க் கிடக்க
வழக்கம்போல் சரணடைகிறாள் நல்லாச்சியிடம்

இமயமலை பற்றி விளக்கினால்
‘ஆராம்ளி மலய விட ஒசரமா?’ என்கிறாள்
மணல்மணலாய்ப் பனித்துகள் காணலாமென்றால்
‘ஆத்தங்கரையில் இல்லாத மணலா?’ என்கிறாள்
ஊரே குளிர்ந்திருக்குமென ஆசை காட்டினால்
‘தடுமம் பிடிச்சுக்கிடும்ல’ என்கிறாள்
ஊரே உலகமென வாழ்ந்த நல்லாச்சி

பனிச்சறுக்குக் கனவில் குதித்துக்குதித்து 
பாவனையில் நடந்த பேத்தி
வாய்க்கால் சேற்றில் கால் இடறுகிறாள்
சில அடிகள் சறுக்கிவிழுகிறாள்
‘கனவில் கண்ட வயலை
விழித்ததும் அறுக்கப்போனாளாம் ஒருத்தி
பனியென்று எண்ணினாயோ சேற்றை’
கடிந்த நல்லாச்சி
இழுத்துச்செல்கிறாள் ஆற்றங்கரைக்கு
பனிப்பொம்மை வேண்டி
சேற்றுப்பொம்மையாய் நிற்கும் பேத்தியை
வேடிக்கை பார்க்கின்றன அத்தனை மீன்களும்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.


Sunday, February 1, 2026

நல்லாச்சி

                                    

சாப்பிடுவதற்கு
செரை படுத்தாத பேத்தி
ஏனோ
சில பொழுதுகளில் சுணங்குவதுண்டு
‘காத்தாட சாப்பிடுதேன்’ என்றபடி
கிணற்றடிக்குத் தட்டுடன் செல்பவள்
துலக்கி மினுக்கி மீள்வாள்
அம்மட்டில் திருப்தியுற்ற நல்லாச்சி
கண்டுகொள்ளாதிருக்கிறாள் சின்னவளை

‘காத்தாட’ தனித்துண்ணும் பொழுதுகள்
சந்தேகத்தை விதைக்கின்றன
அன்னையின் மனதில்
செல்லப்பேத்தியைச் சொல்லுக்கு ஆளாக்கினால்
ஆச்சி வீசுவாள் கண்டனக்கணையை
அகிலமே ஆச்சிக்கு அஞ்சும்போது
அன்னை எம்மாத்திரம்
எனினும்
புகையை ஒளிக்க இயலுமோ!!

கரையவிட்ட தோசைகள் சூரியகாந்தியாய்
தூக்கியெறிந்த கொழுக்கட்டைகள் சப்போட்டாவாய்
மோதகங்களெல்லாம் கொய்யாவாய்
செடிக்குச்செடி காய்த்திருக்க
கிள்ளிப்போட்ட இட்லிகளோ
பஞ்சுபஞ்சாய்ப்பூத்திருக்கின்றன
சிலையாகிறாள் நல்லாச்சி திகைப்பில்
ஒன்றும் தெரியாத பாவனையில்
நழுவுகிறாள் பேத்தி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.