Pages

Thursday, May 8, 2025

முறுக்கு..

தட்டட்டியில் பெய்த மழைநீர்
தார்சாவில் ஒழுகுமுன்
ஆலாட்டியிருந்த அவித்த நெல்லை
அள்ளிவர ஓடுகிறாள் நல்லாச்சி
அள்ளி நிரப்பும் அவளது பெருங்கைகளினூடே
புகுந்து புறப்படுகின்றன
பேத்தியின் குறுங்கைகளும்

அவித்த நெல் அரிசியானபின்
முறுக்கும் இன்னபிறவும் வேண்டுமென
வேண்டுதல் வைக்கிறது குறுதெய்வம்
அப்படியே ஆகட்டுமென
அருள்வாக்களிக்கிறது முதுதெய்வம்

முக்காப்படி அரிசியை உரலிலிட்டு
முறுக்குச்சுற்றவென
முக்கிமுக்கி மாவாக்குகிறாள் செல்லம்மக்கா
விறகடுப்பில் செய்தால் அதிருசியென
கைகொள்ளாமல் விறகுகளை
அள்ளிவருகிறார் தாத்தா
தேங்காயெண்ணெய் முறுக்கின் மணமே அலாதியென்றபடி
கொப்பரைத்தேங்காய்களை செக்கிலிடுகிறாள் அம்மா
எட்டூருக்கும் தெரியும்படி முறுக்குச்சுடுகிறாள் நல்லாச்சி

முறுக்குமாவுப் பிள்ளையாருக்கு
முதல் ஈடைப் படையலிட்டு
பக்குவமாய் மீதத்தையும் சுட்டெடுத்து
அண்டைஅயலுக்கும் சொந்தத்துக்கும்
ஆளுக்கிரண்டைப் பகிர்ந்தளித்தபின்
பேத்திக்கும் விளம்புகிறாள் பாசத்துடன்
அவள் கேட்ட அரைவேக்காடு முறுக்கை

காப்பியில் நொறுக்கியிட்ட முறுக்கையும்
பேத்திக்குக் கடத்தியபின்
எவ்வகையிலும் பங்காற்றாமல்
சும்மா திரிந்த மாமனுக்கு
சூடு போடத் தேடுகிறாள் நல்லாச்சி
மடியில் முடிந்துகொண்ட முறுக்குடன்
மச்சுப்பக்கம் மாமன் ஔிந்து
முக்கால் மணியாயிற்றென
பேத்தி காட்டிக்கொடுக்க மாட்டாள்
நீங்களும் சொல்லிவிடாதீர்கள்.

Wednesday, April 30, 2025

வண்ணங்கள் தோய்ந்த வில்.


இரு வேறு வானிலைகளில் சில நிமிடங்களுக்காய்
தோன்றி மறையாமல்
எல்லாக் காதல் நிலைகளிலும் 
அன்பின் பேரொளியாய் நிலைத்து மிளிர்கிறது
காதல்வெளியின் வானவில்
எண்ணங்கள் குழைத்து வண்ணஞ்சேர்த்து
மனப்பரப்பில் தீட்டிய அந்த ஓவியம்
காத்திருப்பிற்கொரு நிறம்
ஊடலுக்கொரு நிறம்
பிரிவிற்கொரு நிறம்
இணைவதற்கொரு நிறமெனக் கொண்டு
காலங்கள் நீளுந்தோறும் இன்னும் இன்னுமென
அழுத்தமாய் நிறமேற்றிக்கொள்கிறது
காதல்வசந்தம் பூக்கிறது அங்கே
வாழ்த்தும் வசந்தங்களின் பூஞ்சாரலில் நனைந்து
முரலும் வண்டுகளின் பொற்சிறகுகளை
இரவல் வாங்கிய பட்டாம்பூச்சிகள்
காதல்வெளியெங்கும் பறந்து திரிகின்றன
காதலின் வண்ணங்களைப் பரப்பியபடி

டிஸ்கி: முகநூலில் தோழி பிரபாதேவி நடத்திய போட்டியில் பரிசு பெற்ற கவிதை.

Thursday, July 18, 2024

நல்லாச்சி


நல்லாச்சியின் பேத்தியை
வம்பிழுப்பதே
செல்லாச்சியின் பொழுதுபோக்கு
கூறத்தகாததைக் கூறாதேயென
நல்லாச்சி அறிவுறுத்தியும்
மாற்றமேதுமில்லை
செல்லாச்சியின் போக்கில்
வம்பிழுத்து வதைத்து
பிறரைக் கண்ணீர் சிந்த வைப்பதில்
சிலருக்கு ஏனோவொரு அற்பதிருப்தி
கல்லின்மேல் எழுத்தெனவும்
பசுமரத்தாணியெனவும்
தம் சொற்கள் சென்று தைக்குமேயென
அவர்கள்
கிஞ்சித்தும் யோசிப்பதில்லை
மழைக்காளானென அவை
பிறர் மனதில் பெருகிக்கிடப்பதையும்
ஊவாமுள்ளென காயப்படுத்துவதையும்
அறியாதவரல்லர் அவர்
ஆயினும் அப்பழக்கத்தை
கைவிட்டாருமில்லை
பேத்தியை 
நல்லாச்சி கண்டிக்கும் பொழுதுகளில்
'ஒன்ன தவுட்டுக்கு வாங்கினா ஒங்காச்சி
அதாம் உறுத்தில்லை ஒம்மேல' என்பாள்
'உன்னை கோவில்ல கண்டெடுத்தா நல்லாச்சி
அவளுக்குப் பேரன்தான் பெருசு' என்பாள்
'பொட்டப்புள்ள.. அடுத்தூட்டுக்குப் போறவதானே' என்பாள்
உதடு பிதுக்கி 
பேத்தி அழுவதையோ
கண்ணீர் கட்டிநிற்க அவள்
மெளனமாய்க் குனிவதையோ
சிறிதும்
சட்டை செய்தாலள்ளள்
ஒருநாள்
திண்ணையிலிருக்கும் செல்லாச்சியை
அவள் மகன் சடைவது கேட்டு
பேத்தி ஓடிச்சென்று நிற்கிறாள் 
கனன்ற விழிகளுடன்
சொற்போர் தொடுக்கிறாள்
'அவங்களைத் தவுட்டுக்கு வாங்கினீங்களா
எங்கியும் கண்டெடுத்தீங்களா
அதாம் உறுத்தில்லாம ஏசுதேளா'
அடுக்கிக்கொண்டே போகிறாள் சின்னவள்
அடிவாங்கினாற்போல் உறைகிறாள் பெரியவள்
'விதைச்சதுதான் கிடைக்கும்'
பார்வையால் அறிவுறுத்துகிறாள் நல்லாச்சி
புரிந்து தலைகவிழ்கிறாள் செல்லாச்சி
'ஆச்சி பாவம்' என்றபடி 
மடியில் முகம் புதைக்கிறாள் பேத்தி
அவள் தலைமேல் படிகின்றன
இருகரங்களும் ஆசீர்வாதமாய்.

Tuesday, February 27, 2024

நல்லாச்சி

அவ்வைக்கிழவி நம் கிழவி
அருமை மிகுந்த பழங்கிழவி’
குரலெடுத்துப்பாடிக்கொண்டிருக்கிறாள் பேத்தி
வாய்க்காலில் அளைந்து விளையாடியவாறு
நல்லாச்சியோ
கொழுக்கட்டை மாவிலொரு கண்ணும்
பிடுங்கக்காத்திருக்கும் குரங்கின்மீதொரு கண்ணுமாக
சுள்ளி சேகரித்துக்கொண்டிருக்கிறாள்
அடுப்பெரிக்க

பச்சரிசி மாவும் தேங்காயும் வெல்லமுமாய்
பிணைந்து பிணைந்து பிசைந்துருட்டி
அடுப்பில் வேகும் கூழ்க்கொழுக்கட்டைகள்
வனாந்திரத்தையே நாவூறச்செய்ய
கருவறையில் காத்திருக்கிறாள்
ஓளவையாரம்மன் 
அமுதம் பருக

கொழுக்கட்டை வாசனை தீண்டிச்செல்ல
பேத்தியின்
சின்ன மூளைக்குள்ளொரு சந்தேக மொட்டு விரிகிறது
ஓடோடி வருகிறாள் 
குடைந்த கேள்விகளை
எடுத்து வீசுகிறாள் நல்லாச்சியிடம்
“அதியன் கொடுத்த நெல்லிக்கனி இவளுக்குத்தானே?
சுடாத பழம் போடென்று குமரனிடம் கேட்டவள் இவள்தானே?”
ஆமோதிக்கிறாள் நல்லாச்சி

‘எனில்
சுட்ட கொழுக்கட்டையா? சுடாத கொழுக்கட்டையா?
இச்சமயம் அவள் வேண்டுவது யாதென
எங்ஙனம் நாம் அறியக்கூடும்?
பல்லில்லாப் பாட்டிக்குப் பதமானது ஏது?’
விழிமலர்த்தி வினவும் பேத்திக்கு
பதிலுரைக்கா நல்லாச்சி
ஒளவையாரம்மன் என்ன சொல்வாளோவென
அமர்ந்திருக்கிறாள்
‘அவ்வைக்கிழவி நம் கிழவி
அருமை மிகுந்த பழங்கிழவி’
பாடியவாறே அடுப்புத்தள்ளுகிறாள் பேத்தி.

Monday, May 29, 2023

யானைப்பூச்சி


இத்தனை விகாரமாய்ப் படைத்திருக்க வேண்டாம்
நொந்து கொண்டபடி
ஆலமரத்தினடியில் சயனித்திருந்தது
மந்தையிலிருந்து பிரிந்து வந்துவிட்ட
புத்திளம் யானைக்கன்று

எதற்கென்றே தெரியாமல்
இரு பெரும் காதுகள்
இப்பிறவியில் மெலிய வாய்ப்பில்லா
மஹாகனம் கொண்ட பேருடல்
இடையிடையே இடையூறாய்
வந்து நெளியும் நீள்மூக்கு
தெண்ணீரில் தன்னுருவென 
தான் கண்டதையெண்ணி
இன்னும் மனம் கலங்கிற்று

தாவும் மான் தொடங்கி தோகை மயில் ஈறாக
அதன்
அழுத கண்ணீர் துடைத்தன
ஆறுதல் தோற்று நின்றன
தூக்கத்தைத் துக்கம் வென்றெடுக்க
துக்கத்தைக் கொடும்பசி தோற்கடிக்க
அலமுறையிட்டு அழுதது யானைக்கன்று

அழுகையின் வீரியம் கூடுந்தோறும்
படபடத்த காதுகள்
அடித்துக்கொண்டு வானேகின உச்சநொடியில்
இப்போதெல்லாம்
அந்த யானைக்கன்று கலங்குவதில்லை
மலருக்கு மலர் தாவிக்கொண்டிருக்கிறது
தும்பிக்கையால் தேனுறிஞ்சியபடி.

Tuesday, May 9, 2023

பூனையும் வினையும்..


நல்ல பூனைகளுக்கு இங்கே இடமுண்டா
வினவிக்கொண்டு வாசலில் நின்றதொரு பூனை
முகத்திலும்
பளிங்காங்குண்டுக்கண்களிலும்
சொட்டிய அப்பாவித்தனம் தவிர
இன்னொரு நற்சான்றிதழ் தேவையா என்ன
அதை உள்ளே அழைப்பதற்கு

வந்த நாள் முதலாய்
சிறு சோகமொளித்த அதன் சிரிப்பும்
ஏகாந்த வேளைகளில் எங்கோ வெறித்த
அதன் பெருமூச்சுகளும்
சமநிலை இழக்க வைத்தன என்னை
அறியும் ஆவலை ஊதிப்பெருக்கின
பற்றியெரிந்த ஓர் நாளில் வினவினேன் அதனிடம்
சுமந்தால் பாரம்
பகிர்ந்தால் தீரும்
என்னதான் உன் வேதனை என்றேன்
பழைய நண்பனைப் பிரிந்த வேதனை
சிந்தையைத் திருப்ப முயல்கிறேன் என்றது அது
ஆதிகாலம் முதலாய் 
எம்முன்னோர் சொல்லிச்சென்ற வழிமுறைகளில்
ஒன்றிரண்டை
நானும் அதற்கு எடுத்துரைத்தேன்

முதற்கட்டமாய்
களையெடுத்துத் தோட்டம் திருத்தியது
வன்னமாய்ப்பூத்தன வண்ண மலர்கள்
அல்லியும் தாமரையும் மண்டின குளத்தில்
பின் வந்த நாட்களிலோ
அல்லிக்குளத்தின் வண்ணமீன்கள்
தடயமில்லாமல் மறையத்தொடங்கின
ஒன்றும் நினைக்கவில்லை நான்

முற்றத்துச்சுவர் தாங்கிய செயற்கை வீடுகளில்
குஞ்சுகளைப்பறி கொடுத்த குருவிகள்
கதறிப்பதறின
சின்னாட்களில் குருவிகள் இல்லாத என் வீடு
நிசப்த பூமியானது 
பூனையின் முகம் தெளிந்திருந்தது இப்போது

சுவரிலிருந்த ஓவிய மீன்கள் 
எலும்புக்கூடுகளாய் மிஞ்சிய ஓர் நாளில்
விசாரித்தேன் பூனையை
எல்லாம் உனக்காகத்தான் என்றது அது
குளத்தின் அழகைக்கெடுத்த மீன்கள்
எச்சமிட்டும் சத்தமிட்டும்
வீட்டை அழுக்காக்கிய குருவிகள்
அத்தனையும் அகன்ற பின்
சுந்தரச்சோலையாயிருக்கிறது பார் உன் வீடு என்றது
அகற்றப்பட்டவை என்னானதோவென 
விசாரப்பட்டபோது
பாழாய்ப்போவதெல்லாம் பூனை வயிற்றிலே 
என்றபடி மீசையை நீவிக்கொண்டது
அமைதியும் அழகும் கொண்டதோர் இல்லம்
அமைத்திருக்கிறேன்
எனக்கென்ன பரிசு எனக்கேட்டபோது
வாசலை நோக்கி விரல் சுட்டி விரட்டினேன்

நல்ல பூனைகளுக்கு 
இங்கே இடமுண்டாவென வினவியபடி
உங்கள் வாசலிலும்
ஒரு பூனை தென்படக்கூடும்
தோற்றப்பிழையால் ஏமாறுவதும்
கும்பிடு போட்டு அனுப்பி வைப்பதும்
அவரவர் வினைப்பயன்.

Monday, March 27, 2023

குருவியும் சரக்கொன்றையும்


முதற் சரக்கொன்றை பூத்து விட்டது
அக்காக்குருவிகளைத்தான் காணவில்லை.
அலகு ஓய்ந்ததோ
அன்றி
களைத்து இளைத்ததோ
அக்காக்களைக் கண்ணுக்குள்ளேயே
வைத்திருக்கும் தங்கைகள்
தேடித்தட்டழிகிறார்கள்

இந்த மரத்தில் பூத்திருப்பது
சென்ற வருடம் கூவிய
அக்காக்குருவியின் 
கீதமாக இருக்கலாம்
தங்கைகளின் ஏக்கமாக வழிவது
ஏதோ ஒரு வருடத்தின்
பூக்குவியலாகவும் இருக்கலாம்

சுள்ளிக்குவியலாய் இருக்கும்
மரத்தின்
பூவின் தனிமையும்
வனம் முழுக்க அக்கக்கோவென
தேடும் தங்கையின் தனிமையும்
ஒன்றென்றால் ஒன்றுதான்
வெவ்வேறென்றால் வேறு வேறுதான்
சொட்டும் குரலும் மகரந்தமும்
பரவும்
மண் மட்டும் என்றும் ஒன்றே போல்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.