Pages

Sunday, February 22, 2026

நல்லாச்சி


உலகத்து வெயிலெல்லாம் உம்மேலதான்’
செல்லமாகக் கடிகிறாள் நல்லாச்சி
நட்புகளுடன் விளையாடும் பேத்தியை
உச்சிப்பொழுதின் வெப்பம்
வாட்டுமென்ற அக்கறையில்
கலந்தாலோசித்த பட்டாளம்
திருவிழா விளையாட்டைத் தேர்கிறது
அறங்காவலராக்குகிறது நல்லாச்சியை

செங்கற்களே மூர்த்தங்களாய்
அகப்பட்ட பூக்களே தோரணங்களாய்
வடிவெடுக்கிறது சப்பரம்
பூஜைப்பொருட்கள் ஒருவன் உபயம்
நைவேத்யம் ஒருத்தி கொணர்கிறாள்
காற்றில் ஒருவன் கொட்டுமுழக்க
தாத்தாவின் கைத்தடி நாகஸ்வரமாகிறது
ஏதும் கொணராத ஒருத்தியை
விலக்குகிறது கூட்டம்

பதைக்கிறாள் நல்லாச்சி
ஓதுகிறாள் பேத்தியின் காதில்
களிமண்ணில் வனைகிறார்கள்
அழகான ஸ்பீக்கர் செட்டை
உபயதாரராக்குகிறார்கள் விலக்கப்பட்டவளை
எட்டூருக்கு முழங்குகிறது இசை
கிளம்புகிறது புறப்பாடு
குதூகலிக்கிறார் இறைவன்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Monday, February 16, 2026

நல்லாச்சி


பனிச்சறுக்கு விளையாட ஆசை பேத்திக்கு
நயந்தும் பயந்தும் 
பெற்றோர்க்குச்சொன்னவையெல்லாம்
கிணற்றில் சறுக்கிய கல்லாய்க் கிடக்க
வழக்கம்போல் சரணடைகிறாள் நல்லாச்சியிடம்

இமயமலை பற்றி விளக்கினால்
‘ஆராம்ளி மலய விட ஒசரமா?’ என்கிறாள்
மணல்மணலாய்ப் பனித்துகள் காணலாமென்றால்
‘ஆத்தங்கரையில் இல்லாத மணலா?’ என்கிறாள்
ஊரே குளிர்ந்திருக்குமென ஆசை காட்டினால்
‘தடுமம் பிடிச்சுக்கிடும்ல’ என்கிறாள்
ஊரே உலகமென வாழ்ந்த நல்லாச்சி

பனிச்சறுக்குக் கனவில் குதித்துக்குதித்து 
பாவனையில் நடந்த பேத்தி
வாய்க்கால் சேற்றில் கால் இடறுகிறாள்
சில அடிகள் சறுக்கிவிழுகிறாள்
‘கனவில் கண்ட வயலை
விழித்ததும் அறுக்கப்போனாளாம் ஒருத்தி
பனியென்று எண்ணினாயோ சேற்றை’
கடிந்த நல்லாச்சி
இழுத்துச்செல்கிறாள் ஆற்றங்கரைக்கு
பனிப்பொம்மை வேண்டி
சேற்றுப்பொம்மையாய் நிற்கும் பேத்தியை
வேடிக்கை பார்க்கின்றன அத்தனை மீன்களும்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.


Sunday, February 1, 2026

நல்லாச்சி

                                    

சாப்பிடுவதற்கு
செரை படுத்தாத பேத்தி
ஏனோ
சில பொழுதுகளில் சுணங்குவதுண்டு
‘காத்தாட சாப்பிடுதேன்’ என்றபடி
கிணற்றடிக்குத் தட்டுடன் செல்பவள்
துலக்கி மினுக்கி மீள்வாள்
அம்மட்டில் திருப்தியுற்ற நல்லாச்சி
கண்டுகொள்ளாதிருக்கிறாள் சின்னவளை

‘காத்தாட’ தனித்துண்ணும் பொழுதுகள்
சந்தேகத்தை விதைக்கின்றன
அன்னையின் மனதில்
செல்லப்பேத்தியைச் சொல்லுக்கு ஆளாக்கினால்
ஆச்சி வீசுவாள் கண்டனக்கணையை
அகிலமே ஆச்சிக்கு அஞ்சும்போது
அன்னை எம்மாத்திரம்
எனினும்
புகையை ஒளிக்க இயலுமோ!!

கரையவிட்ட தோசைகள் சூரியகாந்தியாய்
தூக்கியெறிந்த கொழுக்கட்டைகள் சப்போட்டாவாய்
மோதகங்களெல்லாம் கொய்யாவாய்
செடிக்குச்செடி காய்த்திருக்க
கிள்ளிப்போட்ட இட்லிகளோ
பஞ்சுபஞ்சாய்ப்பூத்திருக்கின்றன
சிலையாகிறாள் நல்லாச்சி திகைப்பில்
ஒன்றும் தெரியாத பாவனையில்
நழுவுகிறாள் பேத்தி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Sunday, January 25, 2026

நல்லாச்சி


விதைத்த சோளக்காடு அறுவடைக்கு நிற்கிறது
தளவாடங்களுடன் கிளம்புகிறது குடும்பம்
கோணிகளோடு நல்லாச்சியும் 
சிறு பையுடன் பேத்தியும் தொடர்கின்றனர்

கும்பிட்டு அறுத்த
முதல் கதிரே சாவியாய் இருக்க
அடுத்தடுத்த கதிர்களும் அப்படியே
போனால் போகிறதென
ஒன்றிரண்டு சோளமுத்துகளைச் சுமந்து
வெறுஞ்சிப்பியாய் பிளந்திருக்கின்றன மீதமுள்ளவை
பறவைகள் பாதி நாம் மீதியென
பிரிக்கத்தேவையின்றி
காலிப்பாத்திரத்தை வைத்திருக்கிறாள் மண்மாதா
மலைத்து நிற்கின்றனர் மற்றவர்
பரிகசிக்கிறாள் பேத்தி

அன்னைக்காய்ப் பரிகிறாள் நல்லாச்சி
எத்தனை பசித்திருந்தாளோ
கொடுத்ததையெல்லாம் செரித்துவிட்டாள்
மனங்குளிர்ந்த மண்மாதா
நாம் கொதிக்கச் சகிப்பாளோ
அடுத்த விளைச்சலை
பன்மடங்காய்த்தருவாள்
கிடைத்தவற்றை வீடுசேர்ப்போம் கோழிகளுக்காகும் 
இதுவும் அன்னையின் பிரசாதமே 
நல்லாச்சியைத் தொடர்கிறாள்
புத்திக்கொள்முதல் செய்த பேத்தி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Friday, January 16, 2026

நல்லாச்சி


தொலைத்த இடத்தில்தான் தேடணும்
என்கிறாள் நல்லாச்சி
தினமும் ஏதேனுமொன்றைத்
தொலைக்கும் பேத்தியிடம்
அவள்
எங்கோ தொலைத்ததையெல்லாம் கண்டுபிடிக்கும்
மந்திரக்கோலன்றோ நல்லாச்சி
எனினும்
அல்லல் அதிகமானால் அலுத்தும்கொள்வாள்

பொருட்களைத்தொலைத்தே பழக்கப்பட்ட பேத்தி
ஒருநாளில்
நல்லதோர் நட்பையும் தொலைக்கிறாள்
பிரிவென்ற பெயரில்;
அவ்வன்பை எங்கே தேடுவதெனக் குழம்புகிறாள்
பெற்றோரின் அன்போ
உற்றாரின் அன்போ
இன்னபிற களித்தோழரின் அன்போ
இணைவைக்க இயலாமல் தத்தளிக்கின்றன
தூக்கமின்றி ஏக்கத்தில் மெலிகிறாள் பேத்தி
மாற்றமொன்றே மருந்தாகும் என்கிறாள் நல்லாச்சி

முற்றத்தில் மேய வரும் பறவைகள்தாமும்
அன்பைச்சொரிகின்றன அவள்மேல்
மயிலிறகுகளாய் தூவியாய்
கொஞ்சுமொழிகளும் கீதங்களுமாய்
நனைக்கின்றன பேத்தியை
துளித்துளியாய் உயிர்க்கிறாள் அவள்
தொலைக்காத இடத்திலும் கிடைக்கலாமென
புரிந்து கொள்கின்றனர்
ஆச்சியும் பேத்தியும்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.


Tuesday, January 6, 2026

நல்லாச்சி


விருந்தொன்று வந்திருக்கிறது
நல்லாச்சி வீட்டுக்கு
அன்புமிக்கதுதான் அந்நெஞ்சமும்
எனினும்
இருண்டதும்
பேத்தியின் மேல் அன்பு
சற்றே வறண்டதும் கூட

வந்த நாள் முதல்
அதன் அட்டகாசங்களையெல்லாம் சகிக்கின்றனர்
உறவின் பெயரால்
தலைமேல் தாங்குகின்றனர் 
அன்பின் பெயரால்;
பேத்தியின் நனையும் கண்களையும்
வெதும்பும் நெஞ்சத்தையும்
மரியாதை நிமித்தம் வாளாவிருப்பதையும்
கண்ணுறாதவளல்ல நல்லாச்சி
வந்த உறவின் மனக்காயம் புரியாதவளுமல்ல

எல்லை மீறிய ஓர் நாளில் 
அருகிருத்தி உரைக்கிறாள் உறவிடம்
உன் மடி நிரம்பி வழிகிறது
என்னிடமிருப்பதோ ஒன்றே ஒன்று
மதிப்பறிந்தும் அலட்சியப்போக்கு
முறையோ? என்கிறாள்
உறவின் காயத்துக்கு மருந்திடுகிறாள்
மெல்ல மெல்ல ஆறத்தொடங்குவது
உறவின் கண்ணீரால் தெரிகிறது
தழும்பும் மிச்சமின்றிப்போகுமென்பது
சொல்லாமலே புரிகிறது 
பெருமூச்செறிகிறாள் நல்லாச்சி
விடியலுக்கு
மீதமிருக்கும் தூரத்தை எண்ணி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி