விருந்தொன்று வந்திருக்கிறது
நல்லாச்சி வீட்டுக்கு
அன்புமிக்கதுதான் அந்நெஞ்சமும்
எனினும்
இருண்டதும்
பேத்தியின் மேல் அன்பு
சற்றே வறண்டதும் கூட
வந்த நாள் முதல்
அதன் அட்டகாசங்களையெல்லாம் சகிக்கின்றனர்
உறவின் பெயரால்
தலைமேல் தாங்குகின்றனர்
அன்பின் பெயரால்;
பேத்தியின் நனையும் கண்களையும்
வெதும்பும் நெஞ்சத்தையும்
மரியாதை நிமித்தம் வாளாவிருப்பதையும்
கண்ணுறாதவளல்ல நல்லாச்சி
வந்த உறவின் மனக்காயம் புரியாதவளுமல்ல
எல்லை மீறிய ஓர் நாளில்
அருகிருத்தி உரைக்கிறாள் உறவிடம்
உன் மடி நிரம்பி வழிகிறது
என்னிடமிருப்பதோ ஒன்றே ஒன்று
மதிப்பறிந்தும் அலட்சியப்போக்கு
முறையோ? என்கிறாள்
உறவின் காயத்துக்கு மருந்திடுகிறாள்
மெல்ல மெல்ல ஆறத்தொடங்குவது
உறவின் கண்ணீரால் தெரிகிறது
தழும்பும் மிச்சமின்றிப்போகுமென்பது
சொல்லாமலே புரிகிறது
பெருமூச்செறிகிறாள் நல்லாச்சி
விடியலுக்கு
மீதமிருக்கும் தூரத்தை எண்ணி.
டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி
No comments:
Post a Comment