Pages

Tuesday, October 28, 2025

நல்லாச்சி..


பூக்களென்றால் கொள்ளைப்பிரியம் பேத்திக்கு
சூட்டிப்பார்ப்பதில் அதிகப்பிரியம் நல்லாச்சிக்கு
தென்னைமரக்குடுமி வைத்த பிராயத்திலிருந்து
கருநாகம் போல் பின்னலிடும் வயது வரை
விதவிதமாய்ச் சூட்டி அழகு பார்க்கிறாள்
சூட்டும்போதே பயன்களையும் சொல்லிவளர்க்கிறாள்
தாழைப்பூமுடித்து மருக்கொழுந்து சூடிய பொழுதில்
குழந்தை மீனாட்சியாய் வரித்து
சுற்றிப்போட்டும் கொள்கிறாள்  

பன்னீர், சண்பகம், ரோஜா, மகிழம், டேலியா என
தாத்தாவின் தோட்டத்தில் பூக்கிறது 
அந்தப் பூப்பிசாசிற்காக
எனினும்
தங்கத்தட்டாய் மலர்ந்திருக்கும் சூரியகாந்தி மேல்
ஆயிரம் கண் வைத்திருக்கிறாள் பேத்தி
தராமல்
சிட்டாய்ப்பறக்கும் மாமனை
வீடு காடு எங்கிலும் துரத்திக்கொண்டு ஓடுகிறாள்
நாவுலர்ந்து மூச்சு வாங்க
தட்டட்டியில் ஒளிகிறான் மாமன்
கூந்தல் பறக்க நிற்கிறாள் பேத்தி
ஓர் இசக்கியென

“அதை வித்துக்கு விட்டிருக்கு மக்களே
ஒரு பூவிலிருந்து ஓராயிரம் செடிகள்
பல லட்சம் சூரியப்பூக்கள்
காடெங்கும் மலையெங்கும் சூரியனாப்பூக்கும்
கைகொள்ளாமல் அள்ளிக்கொள்வாய் நீ”
சமாதானப்படுத்திய நல்லாச்சியின் வாக்கால்
சன்னதம் நீங்கி அமைதியடையும் பேத்தியின்
கண்முன் விரிகிறது
அடிமுடி காணவொட்டா ஒரு சூரியக்காடு.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

பானைக்குள் ஒரு பூனை.

தோழி செல்வியின் பூனை
இருளின் ஆழத்தில் தனிமையில்
சிறு பானைக்குள் முடங்கியமர்ந்து 
பகற்கனவில் ஆழ்ந்திருந்தது சிறு பூனை

சோம்பல் முறித்து நெளிந்தெழுந்த அது
வெளியேற இயலாமல் திகைத்தது
தவித்து வழிதேடிய பூனையின்
சின்ன மூளைக்குள் பிரளயமே நடந்தது
அதன் ஒவ்வொரு அசைவையும் 
தடைசெய்து சிறைப்படுத்தியது
அந்த சின்னஞ்சிறு பானை

கால் வீசி நடந்த கம்பீரம்
பழங்கனவாய் மின்ன
ஏக்கத்தின் மொழி கண்ணீராய் வழிய
சிக்கிக்கொண்ட ஆன்மா போராடுகிறது
பார்ப்பவர்களுக்கோ
அதுவுமொரு விளையாட்டாய்த்தெரிகிறது 
உலகமே ஒரு பெரும் பானை
பூனை என்பது
வாழ்வின் பிரதிபலிப்பும்தான்.

Monday, October 6, 2025

நல்லாச்சி


ஐந்தாறு நாட்களாய்
அமர்க்களப்பட்டுக்கொண்டிருக்கிறது வீடு
பருப்புப்பொடியும் ஊறுகாய்களும் இன்னபிறவும்
பாட்டிலில் அடைபட்டுக்கொண்டிருக்கின்றன
ஆரவாரம் கண்டு புருவமுயர்த்துகிறாள் பேத்தி
‘அண்ணன் வெளிநாட்டுக்குப்போறாம்லா’ 
குறிப்பறிந்து கூறுகிறாள் நல்லாச்சி

பத்தில் ஒரு பங்கைச் சேமித்து வை
அன்றாடம் கணக்கெழுது
நிர்வாகப்பாடத்தை மூளையில் திணிக்கின்றனர்
அப்பாவும் அம்மாவும்
வம்புவழக்கில் போய் விழாதே
அறிவுரையுடன்
தலைவலி வாசனாதி திரவியங்களுக்கு
துண்டு போட்டு வைத்தாயிற்று அக்கம்பக்கத்தினர்
தாத்தா கிணற்றடியில்
துணி வெளுக்கக் கற்பிக்கிறார்
அடுப்படியிலோ நல்லாச்சியிடம் நளபாகப்பாடம்;
காணும் செல்லாச்சி வம்பு வளர்க்கிறாள்
புருஷன்வீடு போகும் பெண்ணுக்கல்லவா
இத்தனை பாடமும் தேவை
ஆணுக்கெதற்கு இக்கடமை என்கிறாள்

வாடிய பேத்தியின் சார்பாய்
பதிலளிக்கிறாள் நல்லாச்சி
‘அடிப்படைத்தேவைகளுக்குப் பேதமேது
பாலினம் பார்த்தா பசி துளிர்க்கிறது
கடமையின் பொருட்டன்றி
வாழ்தலின் பொருட்டேனும் கற்றல் வேண்டும்
கற்றவரெல்லாம் கடந்து விட்டனர்
கொடிகட்டிக் கோலோச்சுகின்றனர்
கற்காலம் விட்டு நீ இக்காலம் வா’ என்கிறாள்
நயந்துரைக்கிறாள் நல்லாச்சி அனைவருக்குமாய்
உயிர்வரை இனிக்கிறது பேத்திக்கு.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி

நல்லாச்சி


வயலில் நடக்கும் அறுவடையை
மேற்பார்வையிடவென
தொற்றிக்கொண்டு கிளம்பினாள் பேத்தியும்
கேள்விகளும் பதில்களுமாய்
வழிப்பாதையை நிரப்பிக்கொண்டே சென்றாலும்
அறுவடை என்பது ஒரு வடையல்ல என்பது
சற்று ஏமாற்றத்தையே கொடுத்தது அவளுக்கு

அடிவயிற்றிலிருந்து ஓங்காரமிட்டுக்கொண்டிருந்த
அந்த இயந்திரம்
பயிரைத்தின்று விட்டு
நெல்மணிகளையும் வைக்கோலையும்
தனித்தனியாய்த்துப்பியது பேராச்சரியம் அவளுக்கு
‘மாடு, யானைகளைக்கட்டிப் போரடிப்பார்களாமே
போரடித்தலென்றால் என்ன”
ஆதியோடந்தமாய் அவளுக்கு விளக்கிய நல்லாச்சி
மேலுமொரு தகவலையும் பரிமாறுகிறாள்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் எனும் சொல்
இதிலிருந்துதான் பிறந்ததென
‘சண்டு விடுதல்ன்னு கிராமத்தில் சொல்லுவோம்’
தனக்குள் முணுமுணுத்துக்கொள்கிறாள்
அக்கால நினைவுகளில் அமிழ்ந்தபடி

காற்றில்லா காலங்களில் முறங்களும்
நாகரீகம் பெருத்தபின் மின்விசிறிகளுமாய்
நான்கு பேர்களின் வேலையை ஒருவர் செய்வதென
மனித உழைப்பைப் படிப்படியாக 
இயந்திரம் விழுங்கியதை
பேத்திக்குச் சொல்லிப் பெருமூச்செறிகிறாள்
தற்போது இவ்வியந்திரம்
எத்தனை வாழ்வாதாரங்களைக் 
காவு கொண்டிருக்கிறதோ வினவுகிறாள் பேத்தி
நாற்பதோ நானூறோ
விவசாயியின் சத்துக்குட்பட்டது அக்கணக்கு
எடக்குப்பேச்சும் தெம்மாங்குமாய்
மணத்துக்கிடந்த களத்து மேட்டில்
ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது இயந்திரம்
நெல்மணிகளைத் தின்னவரும் குருவிகளை விரட்டியபடி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Tuesday, September 9, 2025

நல்லாச்சி..


கைபேசியில் தற்படமெடுக்க
கற்றுக்கொண்டுவிட்டாளாம் பேத்தி
கால் பாவாமல் தாவிக்கொண்டேயிருக்கிறாள்
பூக்களின் பின்னணியில் ஒன்று
பூவுடன் முகம் பொருத்தி ஒன்று
கன்றுக்குட்டியுடன் கன்னமிழைத்து இன்னொன்று
கலர் கோழிக்குஞ்சை 
தலையிலமர்த்தி மற்றொன்றென
கைபேசியின் மூளையை
படங்களால் நிரப்பிக்கொண்டேயிருக்கிறாள்

சாக்கு சொல்லி தப்பித்துக்கொண்டிருந்த
தாத்தாவைக்கூட
செய்தித்தாள் வாசிக்கும்
அசந்த நேரத்தில் 
காலையொளியின் பின்னணியில் படமெடுத்தாயிற்று
‘எல.. போட்டோ புடிச்சா ஆயுசு கொறையும்’
என நழுவிக்கொண்டிருக்கும்
நல்லாச்சிக்கும்
ஆசை ஒளிந்துதானிருக்கிறது
மனதின் மூலையில்

மோப்பம் பிடித்த பேத்தி நயந்துரைக்கிறாள்
பிடித்தவர்களுடன் கடக்கும் கணங்களால்
மகிழ்வு ஊற்றெடுக்கும்
அம்மகிழ்வு முகத்தில் பிரதிபலிக்கும்
உடலில் நல்மாற்றங்கள் உண்டாக்கும்
ஆரோக்கியம் மேம்படும் ஆயுசையும் கூட்டும்
அத்தகு கணங்களை
காலத்துக்கும் நினைவிருத்தும் இப்படங்கள்
மகிழ்வையும் ஆயுசையும்
மேலும் கூட்டுமேயன்றி குறையாது
தெளிந்த நல்லாச்சியும் வென்ற பேத்தியும்
தயாராகிறார்கள் படமெடுக்க
லேசான வெட்கத்துடன்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Friday, August 29, 2025

நல்லாச்சி

                               
தங்கம், ரப்பர், சங்கு என
விதவிதமாய் அணிந்த வளையல்கள்
அலுத்துப்போய் விட்டனவாம் பேத்திக்கு
புதிதாய் ஆசை துளிர்விட்டிருக்கிறது
கண்ணாடி வளையல்கள் மீது

கலகலவெனச்சிரிக்கும் அவற்றின் மகிழ்ச்சி
அணிந்தோரையும் அடுத்தோரையும்
தொற்றிக்கொள்வதாய்ச்சொல்லும்
பேத்தியின் குதூகலம்
நல்லாச்சியையும் தொற்றிக்கொள்கிறது
ஆடைக்கேற்ற வண்ணங்களில்
பேத்தியின் பூங்கரங்களில்
அழகழகாய் அடுக்கி அழகு பார்க்கிறாள்
‘எந்தங்கத்துக்கு எல்லாக்கலரும் எடுப்பாத்தான் இருக்கும்’
வளையல்களைத்தடவி முத்திக்கொள்கிறாள்
அவ்வீட்டினுள் நிறைந்தேயிருக்கிறது வளையோசை
மூடுபனியென

கள்ளன் போலீஸ் விளையாட்டின்போது
போலீசாயிருக்கும் பேத்தியின் கைகளில்
திருடன் எப்பொழுதும் அகப்படுவதேயில்லை
போலீஸ் வரும் தகவல்
க்ளிங்கென ஒரு தந்தியைப்போல் 
முன்னரே சென்று சேர்ந்து விடுகிறது அவனுக்கு
உளவாளி யாரென துப்புக்கொடுப்போர்க்கு
ஒரு நெல்லிக்காய் சன்மானமாம்
தனக்குத்தெரியுமென எவ்விக்குதிக்கின்றன வளையல்கள்
அதன் மொழி புரியாத பேத்தி
இன்னும் ஆக்ரோஷத்துடன் அலைமோதுகின்றாள்
புரிந்துகொண்ட நல்லாச்சியோ
வாளாவிருக்கின்றாள்
என்ன செய்ய
நெல்லிக்காய் அளவுக்கே
கண்ணாடி வளையல்களையும் பிடித்திருக்கிறதே அவளுக்கும்.

டிஸ்கி: வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி

Sunday, August 24, 2025

நல்லாச்சி

                                         
தொட்டுப்பொட்டு வைத்துக்கொள்ளலாம்போல்
கரேலென்றிருக்கும் வானத்தில்
ஆட்டுக்குட்டிகளாய் 
மேய்ந்து கொண்டிருக்கின்றன மேகங்களெல்லாம்

தலைப்பிரசவம்போல் 
எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடும்
மழையின் வீச்சிலிருந்து
நெல்லைக்காப்பாற்றும் முகமாய்
சாக்குப்பையில்
மரக்காலால் அள்ளி நிறைக்கிறாள் நல்லாச்சி
உழக்கு போல் ஒட்டிக்கொண்டு இழையும் பேத்தி
கேட்கிறாள்
மழை எப்போது பெய்யுமென

‘மழை பெய்யறதும் மக்க பொறக்கறதும்
மகேசன் கணக்குல்லா’
பதிலாகவும் புலம்பலாகவும்
ஒரே நேரத்தில் சொன்னபடி
மெலிதான இடிச்சத்தத்தைச் செவிமடுக்கும் ஆச்சியை
தாக்குகிறது அடுத்த கேள்விக்கணை
அதென்ன கிடுகிடுச்சத்தமென
இறைவனும் இறைவியும் தாயம் விளையாடுகின்றனர்
தாயக்கட்டைகளை உருட்டும் ஒலிதான் அதுவென
பகர்கிறாள் ஆச்சி பேத்தியிடம்

கடவுளர் சற்று வேகமாக உருட்டிவிட்டனர் போலும்
அண்டம் கிடுகிடுக்கிறது பேரிடியால்
அர்ச்சுனா.. அர்ச்சுனா என விளிக்கின்றாள் நல்லாச்சி
வாய்திறந்து அலறினால்
வாய்ப்பூட்டு நேராதென
அறிவியலை விளக்கியவள்
அர்ச்சுனனை அனைவரும் அஞ்சுவர் என
ஆன்மீகத்தையும் தெளிக்கிறாள்
கேள்வியின் நாயகியைப் பேத்தியாய் அடைந்தவள்

அடுத்து உருண்டு வந்த இடியை
அர்ச்சுனர் பேர் சொல்லி அச்சுறுத்தும் 
குரல்கள் நடுவே
தனித்து மிரட்டுகிறது
‘ஆச்சி.. ஆச்சி’ என்றொரு குரல்
நல்லாச்சி வந்துன்னை 
வெற்றிலையில் பாக்காய் மெல்லுமுன் ஓடிவிடென
மேலும் மிரட்டுகிறாள் பேத்தி
அந்த இடி
இங்கே எங்கேயோதான் 
நல்லாச்சிக்கும் பேத்திக்கும் பயந்துகொண்டு
தலைமறைவாய்ச் சுற்றிக்கொண்டிருக்கிறதாம்
என்றாவது அது வாலாட்டினால்
நீங்கள்தான் நல்லாச்சியெனச்சொல்லுங்கள் 
போதும்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.