Pages

Sunday, December 14, 2025

நல்லாச்சி



வாழும் பல்லியும் மனைப்பாம்பும்
அரங்கு வீட்டில் உலவும் தேள்களும்
அசைத்துப்பார்த்ததில்லை பேத்தியை
பெரிய தாத்தாவின் முழ நீளத்தாடிக்கும்
மிலிட்டரி மாமாவின் கம்பீர மீசைக்கும்
சற்றும் பயந்ததில்லை அவள்

கண்ணைக்குத்துவதாய்ச்
சொல்லப்படும் சாமியிடமும்
தூக்கிச்சென்றுவிடுவதாய்
நிறுத்தப்படும் பூச்சாண்டியிடமும்
ராஜபார்ட்டுகளுக்குக் கோமாளிவேஷமிடுகிறார்களேயென
பரிதாபமேயுண்டு அவளுக்கு
தேனீக்குப் பயப்படாத மாமன்
குளவிக்கு அஞ்சும் விந்தையும்
முரட்டுக்காளையைத் தட்டி விலக்கும் செல்லாச்சி
மருமகளிடம் காட்டும் பணிவும்
என்றுமே புரிந்ததில்லை அவளுக்கு

ஆளைவிழுங்கும் சுறாமீனொன்றை
ஆங்கிலப்படமொன்றில் கண்ட நாள்முதல்
அத்தனை தைரியத்தையும் மறக்கிறாள்
எந்தக்குழாயின் வழி எத்தனை சுறா வருமோவென
அண்ணன் போடும் தூபத்தால்
அடுக்களை செல்லவும் மறுக்கிறாள்
சாமதானபேதங்களை பேத்தியிடமும்
தண்டத்தை அண்ணனிடமும் பிரயோகித்தபின்
நிலைமையைச் சீரமைக்க முற்படுகிறாள் நல்லாச்சி
ஆதியிலிருந்து ஊட்டி வளர்த்ததெல்லாம்
பாதியில் கரைந்து போனாலும்
எல்லாப்பூச்சையும் அழித்துவிட்டு
மறுபடியும் ஆரம்பித்திருக்கும்
அந்த ஓவியம் செவ்வனே நிறைவுறுவதாக.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட "பண்புடன்" மின்னிதழுக்கு நன்றி.

Thursday, December 4, 2025

நல்லாச்சி


ஒட்டி இழையும் குஞ்சுகளையெல்லாம்
எட்டித்துரத்தும் கோழியின் போக்கு
கொஞ்சமும் பிடிக்கவில்லை பேத்திக்கு
நல்லாச்சியிடம் வந்து அங்கலாய்க்கிறாள்
‘பிள்ளேளுக்க தப்பை அம்மைதானே மன்னிக்கணும்
அதுகளுக்கேது போக்கிடம்’

வெதும்பும் பேத்தியை
தேற்றுகிறாள் நல்லாச்சி புன்னகையுடன்
‘அட! கோட்டிப்பயபுள்ள.. குஞ்சுகளையெல்லாம்
கோழி தவுத்துட்டுது’ என்கிறாள்
‘தவிர்த்துவிட்டது’ எனத் தெளிவாயும் செப்புகிறாள்
புரியாமல் தலைசொரியும் பேத்திக்கு
இரைதேடல் முதல்
இரையாகாமல் தப்புதல் ஈறாகப் பயிற்றுவித்தபின்
குழந்தைகளை
சுயமாய் வாழச்செலுத்துதலே
தவிர்த்துவிடுதல் என விளக்குகிறாள்

எனில்
மனிதர்கள் மட்டும் ஏன்
குழந்தைகளைத் தவிர்த்துவிடுவதில்லையென்ற
பேத்தியின் கேள்விக்கு
நல்லாச்சி வாயடைத்து நிற்க
செல்லாச்சி பதிலிறுக்கிறாள்
மனிதப்பிறவியில்
எல்லாக் கேள்விகளுக்கும் விடையேது மகளே
தலையாட்டிக்கொண்ட பேத்தி
தானியத்தை இறைக்கிறாள்
அம்மையாய் எண்ணி அணைகின்றன
அத்தனை குஞ்சுகளும்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Sunday, November 23, 2025

நல்லாச்சி..


சுரைக்குடம் கட்டிச் சில நாட்கள்
காற்றடைத்த பையுடன் பலநாட்கள்
கவிழ்த்த குடத்துடன் ஒன்றிரண்டு நாளே
கடப்பாரை நீச்சலை மறந்து
கெண்டை மீனாய் நீந்துகிறாள் பேத்தி
நீரில் தானுமொரு துளியாய்க்கலந்தவளுக்கு
நிலமென்பது நினைவிலேயே இல்லை

ஆறும் குளமும் யோசிக்கின்றன
அடுத்த ஊருக்குப் போய்விடலாமென
தவளைகளெலாம் தப்பித்துவிட்டன எப்போதோ
‘கலங்கியது தானே தெளியும்’
அமைதிப்படுத்துகிறது மூத்த ஆறொன்று
‘வாய்ப்பில்லை’ என்கிறது வாய்க்கால்

ஊரிலுள்ள நீரிலெலாம் குடைந்தாடியவள்
கிணறுகளை ஏனோ சீண்டுவதில்லை
சாகசம் அங்குபோல் எங்குண்டு என்போரை
கிணறுகளின் பிரதாபம் பாடுவோரை
முற்றத்து மூலையில் நிறுத்துவாளவள்
பெருமழையில் விழுந்த தாத்தா
இரவெல்லாம் தவித்த கிணறு
தூர்ந்து போகாமல்
இன்றும் நினைவுகளில் அலையடிப்பதை
நல்லாச்சியும் அவளுமே அறிவர்

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Saturday, November 22, 2025

நல்லாச்சி..


கிடத்திய கிடுகில் வைக்கோல் பரப்பி
அதற்குக் குளிராது வேட்டி போர்த்தி
சுடுசாதம் கொட்டிப்பரத்துகிறாள் நல்லாச்சி
முத்தாய்ச்சொட்டும் துளிகளெல்லாம்
சத்தமில்லாமல் பயணிக்கின்றன கிடுகு வரை

அம்பாரச்சோறு அடங்குகிறது அண்டாவில்
சம்பாரம் பயணிக்கிறது அத்தோடு
முற்றத்து முருங்கைச்சாம்பார் உசத்தியாம்
கிரீடமாய்ப் பயணிக்கிறது நல்லாச்சி தலைமேல்
சோற்றுப்படையெடுத்துச் செல்கிறாள்
நடவு வயல் வீரர்களை நோக்கி
குழம்பும் கறியுமாய் ஆயுதமேந்தி

‘சோத்துவாசனைக்கு என்னமும் ஒட்டிக்கிட்டு வரும்’
இரும்புத்துண்டைக்காவலுக்குப் பணித்து 
பத்திரம் என்கிறாள் பேத்தியிடம்
‘மடத்துக்கிணத்தடியில்தான் அரற்றியபடியே அலைகிறாளாம்
சித்தி கொடுமையால் செத்த செம்பகம்
செத்தபின்னும் தீராப்பசி தொடருதையே
பாவப்பட்ட செம்மத்துக்கு’
புலம்பிய நல்லாச்சி கவனித்தாளில்லை
வரப்பிலும் மேட்டிலுமாய் அமர்ந்து
பசியாறும் நடவு ஆட்களில்
ஒருத்தி மட்டும்
செம்பகத்தின் சாயலாய்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Tuesday, November 4, 2025

நல்லாச்சி

திடலின் ஓரத்திலிருக்கும்
ஆலமரத்தைக் கண்ணுறுந்தோறும்
ஆவலும் பயமும் கொள்வாள் பேத்தி
கிளிகளைப்போன்ற அக்காக்களும்
அக்கக்கோவெனும் கிளிகளும்
இறுகப்பற்றி ஊஞ்சலாடும் விழுதுகள்
ஆசையையும் பயத்தையும் விதைத்திருந்தன அவளுக்குள்

விண்ணுக்கும் மண்ணுக்கும் 
பாலமாயிருந்த விழுதுகளில் சில
பாதாள லோகத்தையும் பார்த்துவரப்புகுந்திருந்தன
எண்ணெய் தடவாத முடிக்கற்றையென
நுனிகளில் பிளந்து கிளைத்திருந்தன சில
அக்கையொருத்தி கைபற்றிச்சேர்க்க
விழுது பற்றி ஆடிய பேத்தி
அதே வீச்சில்
பூமியை முத்தமிட்டுப் புரண்டு
புழுதியை விபூதியெனப் பூசியெழுந்தாள்
கசிந்த குங்குமச்சொட்டுகளை ஒற்றியெடுத்தாள்

வாரியணைத்த நல்லாச்சி
சூனியக்கிழவிதான் இவ்வடிவெடுத்திருப்பதாயும்
‘வடக்கற்றையெலாம் அவளின் சடைக்கற்றை
அவ தலமுடியில தொங்குனா வலிக்கும்லா
அதாம் தள்ளியுட்டுட்டா’
என்றும் பயமூட்டுகிறாள்
உளுத்த மரத்திற்கொரு கதை சொன்னவள்
உயிர்மரத்துக்கும் ஒன்று வைத்திருப்பாள்
தள்ளிவிடாத மரமொன்று
தேவதையின் கூந்தலாய்க் கிளைத்திருக்கலாம்
எங்கேனும்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Tuesday, October 28, 2025

நல்லாச்சி..


பூக்களென்றால் கொள்ளைப்பிரியம் பேத்திக்கு
சூட்டிப்பார்ப்பதில் அதிகப்பிரியம் நல்லாச்சிக்கு
தென்னைமரக்குடுமி வைத்த பிராயத்திலிருந்து
கருநாகம் போல் பின்னலிடும் வயது வரை
விதவிதமாய்ச் சூட்டி அழகு பார்க்கிறாள்
சூட்டும்போதே பயன்களையும் சொல்லிவளர்க்கிறாள்
தாழைப்பூமுடித்து மருக்கொழுந்து சூடிய பொழுதில்
குழந்தை மீனாட்சியாய் வரித்து
சுற்றிப்போட்டும் கொள்கிறாள்  

பன்னீர், சண்பகம், ரோஜா, மகிழம், டேலியா என
தாத்தாவின் தோட்டத்தில் பூக்கிறது 
அந்தப் பூப்பிசாசிற்காக
எனினும்
தங்கத்தட்டாய் மலர்ந்திருக்கும் சூரியகாந்தி மேல்
ஆயிரம் கண் வைத்திருக்கிறாள் பேத்தி
தராமல்
சிட்டாய்ப்பறக்கும் மாமனை
வீடு காடு எங்கிலும் துரத்திக்கொண்டு ஓடுகிறாள்
நாவுலர்ந்து மூச்சு வாங்க
தட்டட்டியில் ஒளிகிறான் மாமன்
கூந்தல் பறக்க நிற்கிறாள் பேத்தி
ஓர் இசக்கியென

“அதை வித்துக்கு விட்டிருக்கு மக்களே
ஒரு பூவிலிருந்து ஓராயிரம் செடிகள்
பல லட்சம் சூரியப்பூக்கள்
காடெங்கும் மலையெங்கும் சூரியனாப்பூக்கும்
கைகொள்ளாமல் அள்ளிக்கொள்வாய் நீ”
சமாதானப்படுத்திய நல்லாச்சியின் வாக்கால்
சன்னதம் நீங்கி அமைதியடையும் பேத்தியின்
கண்முன் விரிகிறது
அடிமுடி காணவொட்டா ஒரு சூரியக்காடு.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

பானைக்குள் ஒரு பூனை.

தோழி செல்வியின் பூனை
இருளின் ஆழத்தில் தனிமையில்
சிறு பானைக்குள் முடங்கியமர்ந்து 
பகற்கனவில் ஆழ்ந்திருந்தது சிறு பூனை

சோம்பல் முறித்து நெளிந்தெழுந்த அது
வெளியேற இயலாமல் திகைத்தது
தவித்து வழிதேடிய பூனையின்
சின்ன மூளைக்குள் பிரளயமே நடந்தது
அதன் ஒவ்வொரு அசைவையும் 
தடைசெய்து சிறைப்படுத்தியது
அந்த சின்னஞ்சிறு பானை

கால் வீசி நடந்த கம்பீரம்
பழங்கனவாய் மின்ன
ஏக்கத்தின் மொழி கண்ணீராய் வழிய
சிக்கிக்கொண்ட ஆன்மா போராடுகிறது
பார்ப்பவர்களுக்கோ
அதுவுமொரு விளையாட்டாய்த்தெரிகிறது 
உலகமே ஒரு பெரும் பானை
பூனை என்பது
வாழ்வின் பிரதிபலிப்பும்தான்.