Pages

Sunday, February 1, 2026

நல்லாச்சி

                                    

சாப்பிடுவதற்கு
செரை படுத்தாத பேத்தி
ஏனோ
சில பொழுதுகளில் சுணங்குவதுண்டு
‘காத்தாட சாப்பிடுதேன்’ என்றபடி
கிணற்றடிக்குத் தட்டுடன் செல்பவள்
துலக்கி மினுக்கி மீள்வாள்
அம்மட்டில் திருப்தியுற்ற நல்லாச்சி
கண்டுகொள்ளாதிருக்கிறாள் சின்னவளை

‘காத்தாட’ தனித்துண்ணும் பொழுதுகள்
சந்தேகத்தை விதைக்கின்றன
அன்னையின் மனதில்
செல்லப்பேத்தியைச் சொல்லுக்கு ஆளாக்கினால்
ஆச்சி வீசுவாள் கண்டனக்கணையை
அகிலமே ஆச்சிக்கு அஞ்சும்போது
அன்னை எம்மாத்திரம்
எனினும்
புகையை ஒளிக்க இயலுமோ!!

கரையவிட்ட தோசைகள் சூரியகாந்தியாய்
தூக்கியெறிந்த கொழுக்கட்டைகள் சப்போட்டாவாய்
மோதகங்களெல்லாம் கொய்யாவாய்
செடிக்குச்செடி காய்த்திருக்க
கிள்ளிப்போட்ட இட்லிகளோ
பஞ்சுபஞ்சாய்ப்பூத்திருக்கின்றன
சிலையாகிறாள் நல்லாச்சி திகைப்பில்
ஒன்றும் தெரியாத பாவனையில்
நழுவுகிறாள் பேத்தி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Sunday, January 25, 2026

நல்லாச்சி


விதைத்த சோளக்காடு அறுவடைக்கு நிற்கிறது
தளவாடங்களுடன் கிளம்புகிறது குடும்பம்
கோணிகளோடு நல்லாச்சியும் 
சிறு பையுடன் பேத்தியும் தொடர்கின்றனர்

கும்பிட்டு அறுத்த
முதல் கதிரே சாவியாய் இருக்க
அடுத்தடுத்த கதிர்களும் அப்படியே
போனால் போகிறதென
ஒன்றிரண்டு சோளமுத்துகளைச் சுமந்து
வெறுஞ்சிப்பியாய் பிளந்திருக்கின்றன மீதமுள்ளவை
பறவைகள் பாதி நாம் மீதியென
பிரிக்கத்தேவையின்றி
காலிப்பாத்திரத்தை வைத்திருக்கிறாள் மண்மாதா
மலைத்து நிற்கின்றனர் மற்றவர்
பரிகசிக்கிறாள் பேத்தி

அன்னைக்காய்ப் பரிகிறாள் நல்லாச்சி
எத்தனை பசித்திருந்தாளோ
கொடுத்ததையெல்லாம் செரித்துவிட்டாள்
மனங்குளிர்ந்த மண்மாதா
நாம் கொதிக்கச் சகிப்பாளோ
அடுத்த விளைச்சலை
பன்மடங்காய்த்தருவாள்
கிடைத்தவற்றை வீடுசேர்ப்போம் கோழிகளுக்காகும் 
இதுவும் அன்னையின் பிரசாதமே 
நல்லாச்சியைத் தொடர்கிறாள்
புத்திக்கொள்முதல் செய்த பேத்தி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Friday, January 16, 2026

நல்லாச்சி


தொலைத்த இடத்தில்தான் தேடணும்
என்கிறாள் நல்லாச்சி
தினமும் ஏதேனுமொன்றைத்
தொலைக்கும் பேத்தியிடம்
அவள்
எங்கோ தொலைத்ததையெல்லாம் கண்டுபிடிக்கும்
மந்திரக்கோலன்றோ நல்லாச்சி
எனினும்
அல்லல் அதிகமானால் அலுத்தும்கொள்வாள்

பொருட்களைத்தொலைத்தே பழக்கப்பட்ட பேத்தி
ஒருநாளில்
நல்லதோர் நட்பையும் தொலைக்கிறாள்
பிரிவென்ற பெயரில்;
அவ்வன்பை எங்கே தேடுவதெனக் குழம்புகிறாள்
பெற்றோரின் அன்போ
உற்றாரின் அன்போ
இன்னபிற களித்தோழரின் அன்போ
இணைவைக்க இயலாமல் தத்தளிக்கின்றன
தூக்கமின்றி ஏக்கத்தில் மெலிகிறாள் பேத்தி
மாற்றமொன்றே மருந்தாகும் என்கிறாள் நல்லாச்சி

முற்றத்தில் மேய வரும் பறவைகள்தாமும்
அன்பைச்சொரிகின்றன அவள்மேல்
மயிலிறகுகளாய் தூவியாய்
கொஞ்சுமொழிகளும் கீதங்களுமாய்
நனைக்கின்றன பேத்தியை
துளித்துளியாய் உயிர்க்கிறாள் அவள்
தொலைக்காத இடத்திலும் கிடைக்கலாமென
புரிந்து கொள்கின்றனர்
ஆச்சியும் பேத்தியும்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.


Tuesday, January 6, 2026

நல்லாச்சி


விருந்தொன்று வந்திருக்கிறது
நல்லாச்சி வீட்டுக்கு
அன்புமிக்கதுதான் அந்நெஞ்சமும்
எனினும்
இருண்டதும்
பேத்தியின் மேல் அன்பு
சற்றே வறண்டதும் கூட

வந்த நாள் முதல்
அதன் அட்டகாசங்களையெல்லாம் சகிக்கின்றனர்
உறவின் பெயரால்
தலைமேல் தாங்குகின்றனர் 
அன்பின் பெயரால்;
பேத்தியின் நனையும் கண்களையும்
வெதும்பும் நெஞ்சத்தையும்
மரியாதை நிமித்தம் வாளாவிருப்பதையும்
கண்ணுறாதவளல்ல நல்லாச்சி
வந்த உறவின் மனக்காயம் புரியாதவளுமல்ல

எல்லை மீறிய ஓர் நாளில் 
அருகிருத்தி உரைக்கிறாள் உறவிடம்
உன் மடி நிரம்பி வழிகிறது
என்னிடமிருப்பதோ ஒன்றே ஒன்று
மதிப்பறிந்தும் அலட்சியப்போக்கு
முறையோ? என்கிறாள்
உறவின் காயத்துக்கு மருந்திடுகிறாள்
மெல்ல மெல்ல ஆறத்தொடங்குவது
உறவின் கண்ணீரால் தெரிகிறது
தழும்பும் மிச்சமின்றிப்போகுமென்பது
சொல்லாமலே புரிகிறது 
பெருமூச்செறிகிறாள் நல்லாச்சி
விடியலுக்கு
மீதமிருக்கும் தூரத்தை எண்ணி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி

Monday, December 29, 2025

நல்லாச்சி


கண்புரை ஏற்பட்டிருக்கிறதாம் நல்லாச்சிக்கு
அறுவை சிகிச்சைக்குப் பயப்படுகிறாள் அவள்
தைரியம் சொல்பவர் சிலர்
அதன் பெயரால் 
அதைரியப்படுத்துபவர் இன்னும் சிலர்

தொடச்சுப்போட்ட டியூப்லைட் மாதிரி
பளீர்ன்னு தெரியும் ஒலகம்
அழகுபோல சீரியல் பாக்கலாம்
எனத்தெம்பூட்டுகிறாள்
சிகிச்சையால் பலன் பெற்ற செல்லாச்சி
நப்பாசையால் சம்மதிக்கிறாள் நல்லாச்சி
முற்றத்து வெயில் முகத்தில் படாது
வெக்கை அணுகாது 
அருகிலிருந்து பேத்தி பேச்சுத்துணையாக
அந்தப்புரத்து ராணி போல் உணர்கிறாள் அவள்

எனினும்
தன்னைப்போல் தாத்தாவும்
கண்ணாடி அணியும் ரகசியம் புரிந்த தினத்தில்
திக்குமுக்காடிப்போனாள் அவள்
தன்னைத்தானே
ஆண் காந்தாரி என வர்ணித்துக்கொண்ட தாத்தா
உயர்தர ரேபானுடன் உல்லாசமாகத் திரிவதில்
கடுப்பிலிருக்கும் அவளிடம் நெருங்கி விடாதீர்கள்
சுட்டெரித்து விடுவாள்
புரையே ஏற்படாத நெற்றிக்கண்ணால்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Saturday, December 20, 2025

காலத்தின் ஆன்மா.. (பண்புடன் மின்னிதழில் வெளியானது)


பேரன்பும் பெருங்கருணையும்
ததும்பித்தளும்பிய காலக்கடலிலிருந்து
பொங்கிப்பிரவாகித்து
கரைதழுவ ஓடி வந்தன நினைவலைகள்
நினைவுகளெனில் பாலைவனச்சோலையுமாம்
நினைவுகளெனில்
புன்னகையின் பின்னொளிந்த கோரப்பற்களுமாம்

வாழ்வெனும் காட்டாற்றின் நடுவே
சிறுதுண்டு நிலமாய்
காலூன்றி ஆசுவாசம் கொள்ளவும்
மலர்ந்திருக்கும் நினைவுகளில் கமழும்
நறுமணத்தால் பேதலித்து
காலடி நிலம் நழுவவும்
இளஞ்சூரியன் சிரிக்கும் இவ்வீதியில்
அதோ அந்தக்குழந்தையின் நகைப்பொலியாய்
ஓங்கியொலித்து
இறுதியில் முணுமுணுப்பாய்த் தேய்ந்தடங்கவும்
என நங்கூரமிட்டு
வரிசையாய் நிற்கின்றன நினைவுகள்
அவ்வப்போது பார்த்துக்கொள்ளும்
நட்சத்திரங்களைப்போல் மினுங்கியபடி

நினைவலைகளின் துணையுடன்
துடுப்பசைத்துத் திரிந்த நினைவுகள்
செலவிட மனதுவாரா உண்டியல் காசைப்போல்
கானல் நீருமாகி
எத்திசையிலோ உச்சுக்கொட்டிய பல்லிக்கு அஞ்சி
பேராழத்தில் அமிழ்ந்து கிடக்கின்றன
கரை திரும்பாமலும் எல்லை மீறாமலும்
காலத்தின் ஆன்மாவாய் நிலைத்தபடி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Sunday, December 14, 2025

நல்லாச்சி



வாழும் பல்லியும் மனைப்பாம்பும்
அரங்கு வீட்டில் உலவும் தேள்களும்
அசைத்துப்பார்த்ததில்லை பேத்தியை
பெரிய தாத்தாவின் முழ நீளத்தாடிக்கும்
மிலிட்டரி மாமாவின் கம்பீர மீசைக்கும்
சற்றும் பயந்ததில்லை அவள்

கண்ணைக்குத்துவதாய்ச்
சொல்லப்படும் சாமியிடமும்
தூக்கிச்சென்றுவிடுவதாய்
நிறுத்தப்படும் பூச்சாண்டியிடமும்
ராஜபார்ட்டுகளுக்குக் கோமாளிவேஷமிடுகிறார்களேயென
பரிதாபமேயுண்டு அவளுக்கு
தேனீக்குப் பயப்படாத மாமன்
குளவிக்கு அஞ்சும் விந்தையும்
முரட்டுக்காளையைத் தட்டி விலக்கும் செல்லாச்சி
மருமகளிடம் காட்டும் பணிவும்
என்றுமே புரிந்ததில்லை அவளுக்கு

ஆளைவிழுங்கும் சுறாமீனொன்றை
ஆங்கிலப்படமொன்றில் கண்ட நாள்முதல்
அத்தனை தைரியத்தையும் மறக்கிறாள்
எந்தக்குழாயின் வழி எத்தனை சுறா வருமோவென
அண்ணன் போடும் தூபத்தால்
அடுக்களை செல்லவும் மறுக்கிறாள்
சாமதானபேதங்களை பேத்தியிடமும்
தண்டத்தை அண்ணனிடமும் பிரயோகித்தபின்
நிலைமையைச் சீரமைக்க முற்படுகிறாள் நல்லாச்சி
ஆதியிலிருந்து ஊட்டி வளர்த்ததெல்லாம்
பாதியில் கரைந்து போனாலும்
எல்லாப்பூச்சையும் அழித்துவிட்டு
மறுபடியும் ஆரம்பித்திருக்கும்
அந்த ஓவியம் செவ்வனே நிறைவுறுவதாக.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட "பண்புடன்" மின்னிதழுக்கு நன்றி.