Pages

Monday, December 29, 2025

நல்லாச்சி


கண்புரை ஏற்பட்டிருக்கிறதாம் நல்லாச்சிக்கு
அறுவை சிகிச்சைக்குப் பயப்படுகிறாள் அவள்
தைரியம் சொல்பவர் சிலர்
அதன் பெயரால் 
அதைரியப்படுத்துபவர் இன்னும் சிலர்

தொடச்சுப்போட்ட டியூப்லைட் மாதிரி
பளீர்ன்னு தெரியும் ஒலகம்
அழகுபோல சீரியல் பாக்கலாம்
எனத்தெம்பூட்டுகிறாள்
சிகிச்சையால் பலன் பெற்ற செல்லாச்சி
நப்பாசையால் சம்மதிக்கிறாள் நல்லாச்சி
முற்றத்து வெயில் முகத்தில் படாது
வெக்கை அணுகாது 
அருகிலிருந்து பேத்தி பேச்சுத்துணையாக
அந்தப்புரத்து ராணி போல் உணர்கிறாள் அவள்

எனினும்
தன்னைப்போல் தாத்தாவும்
கண்ணாடி அணியும் ரகசியம் புரிந்த தினத்தில்
திக்குமுக்காடிப்போனாள் அவள்
தன்னைத்தானே
ஆண் காந்தாரி என வர்ணித்துக்கொண்ட தாத்தா
உயர்தர ரேபானுடன் உல்லாசமாகத் திரிவதில்
கடுப்பிலிருக்கும் அவளிடம் நெருங்கி விடாதீர்கள்
சுட்டெரித்து விடுவாள்
புரையே ஏற்படாத நெற்றிக்கண்ணால்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Saturday, December 20, 2025

காலத்தின் ஆன்மா.. (பண்புடன் மின்னிதழில் வெளியானது)


பேரன்பும் பெருங்கருணையும்
ததும்பித்தளும்பிய காலக்கடலிலிருந்து
பொங்கிப்பிரவாகித்து
கரைதழுவ ஓடி வந்தன நினைவலைகள்
நினைவுகளெனில் பாலைவனச்சோலையுமாம்
நினைவுகளெனில்
புன்னகையின் பின்னொளிந்த கோரப்பற்களுமாம்

வாழ்வெனும் காட்டாற்றின் நடுவே
சிறுதுண்டு நிலமாய்
காலூன்றி ஆசுவாசம் கொள்ளவும்
மலர்ந்திருக்கும் நினைவுகளில் கமழும்
நறுமணத்தால் பேதலித்து
காலடி நிலம் நழுவவும்
இளஞ்சூரியன் சிரிக்கும் இவ்வீதியில்
அதோ அந்தக்குழந்தையின் நகைப்பொலியாய்
ஓங்கியொலித்து
இறுதியில் முணுமுணுப்பாய்த் தேய்ந்தடங்கவும்
என நங்கூரமிட்டு
வரிசையாய் நிற்கின்றன நினைவுகள்
அவ்வப்போது பார்த்துக்கொள்ளும்
நட்சத்திரங்களைப்போல் மினுங்கியபடி

நினைவலைகளின் துணையுடன்
துடுப்பசைத்துத் திரிந்த நினைவுகள்
செலவிட மனதுவாரா உண்டியல் காசைப்போல்
கானல் நீருமாகி
எத்திசையிலோ உச்சுக்கொட்டிய பல்லிக்கு அஞ்சி
பேராழத்தில் அமிழ்ந்து கிடக்கின்றன
கரை திரும்பாமலும் எல்லை மீறாமலும்
காலத்தின் ஆன்மாவாய் நிலைத்தபடி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Sunday, December 14, 2025

நல்லாச்சி



வாழும் பல்லியும் மனைப்பாம்பும்
அரங்கு வீட்டில் உலவும் தேள்களும்
அசைத்துப்பார்த்ததில்லை பேத்தியை
பெரிய தாத்தாவின் முழ நீளத்தாடிக்கும்
மிலிட்டரி மாமாவின் கம்பீர மீசைக்கும்
சற்றும் பயந்ததில்லை அவள்

கண்ணைக்குத்துவதாய்ச்
சொல்லப்படும் சாமியிடமும்
தூக்கிச்சென்றுவிடுவதாய்
நிறுத்தப்படும் பூச்சாண்டியிடமும்
ராஜபார்ட்டுகளுக்குக் கோமாளிவேஷமிடுகிறார்களேயென
பரிதாபமேயுண்டு அவளுக்கு
தேனீக்குப் பயப்படாத மாமன்
குளவிக்கு அஞ்சும் விந்தையும்
முரட்டுக்காளையைத் தட்டி விலக்கும் செல்லாச்சி
மருமகளிடம் காட்டும் பணிவும்
என்றுமே புரிந்ததில்லை அவளுக்கு

ஆளைவிழுங்கும் சுறாமீனொன்றை
ஆங்கிலப்படமொன்றில் கண்ட நாள்முதல்
அத்தனை தைரியத்தையும் மறக்கிறாள்
எந்தக்குழாயின் வழி எத்தனை சுறா வருமோவென
அண்ணன் போடும் தூபத்தால்
அடுக்களை செல்லவும் மறுக்கிறாள்
சாமதானபேதங்களை பேத்தியிடமும்
தண்டத்தை அண்ணனிடமும் பிரயோகித்தபின்
நிலைமையைச் சீரமைக்க முற்படுகிறாள் நல்லாச்சி
ஆதியிலிருந்து ஊட்டி வளர்த்ததெல்லாம்
பாதியில் கரைந்து போனாலும்
எல்லாப்பூச்சையும் அழித்துவிட்டு
மறுபடியும் ஆரம்பித்திருக்கும்
அந்த ஓவியம் செவ்வனே நிறைவுறுவதாக.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட "பண்புடன்" மின்னிதழுக்கு நன்றி.

Thursday, December 4, 2025

நல்லாச்சி


ஒட்டி இழையும் குஞ்சுகளையெல்லாம்
எட்டித்துரத்தும் கோழியின் போக்கு
கொஞ்சமும் பிடிக்கவில்லை பேத்திக்கு
நல்லாச்சியிடம் வந்து அங்கலாய்க்கிறாள்
‘பிள்ளேளுக்க தப்பை அம்மைதானே மன்னிக்கணும்
அதுகளுக்கேது போக்கிடம்’

வெதும்பும் பேத்தியை
தேற்றுகிறாள் நல்லாச்சி புன்னகையுடன்
‘அட! கோட்டிப்பயபுள்ள.. குஞ்சுகளையெல்லாம்
கோழி தவுத்துட்டுது’ என்கிறாள்
‘தவிர்த்துவிட்டது’ எனத் தெளிவாயும் செப்புகிறாள்
புரியாமல் தலைசொரியும் பேத்திக்கு
இரைதேடல் முதல்
இரையாகாமல் தப்புதல் ஈறாகப் பயிற்றுவித்தபின்
குழந்தைகளை
சுயமாய் வாழச்செலுத்துதலே
தவிர்த்துவிடுதல் என விளக்குகிறாள்

எனில்
மனிதர்கள் மட்டும் ஏன்
குழந்தைகளைத் தவிர்த்துவிடுவதில்லையென்ற
பேத்தியின் கேள்விக்கு
நல்லாச்சி வாயடைத்து நிற்க
செல்லாச்சி பதிலிறுக்கிறாள்
மனிதப்பிறவியில்
எல்லாக் கேள்விகளுக்கும் விடையேது மகளே
தலையாட்டிக்கொண்ட பேத்தி
தானியத்தை இறைக்கிறாள்
அம்மையாய் எண்ணி அணைகின்றன
அத்தனை குஞ்சுகளும்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Sunday, November 23, 2025

நல்லாச்சி..


சுரைக்குடம் கட்டிச் சில நாட்கள்
காற்றடைத்த பையுடன் பலநாட்கள்
கவிழ்த்த குடத்துடன் ஒன்றிரண்டு நாளே
கடப்பாரை நீச்சலை மறந்து
கெண்டை மீனாய் நீந்துகிறாள் பேத்தி
நீரில் தானுமொரு துளியாய்க்கலந்தவளுக்கு
நிலமென்பது நினைவிலேயே இல்லை

ஆறும் குளமும் யோசிக்கின்றன
அடுத்த ஊருக்குப் போய்விடலாமென
தவளைகளெலாம் தப்பித்துவிட்டன எப்போதோ
‘கலங்கியது தானே தெளியும்’
அமைதிப்படுத்துகிறது மூத்த ஆறொன்று
‘வாய்ப்பில்லை’ என்கிறது வாய்க்கால்

ஊரிலுள்ள நீரிலெலாம் குடைந்தாடியவள்
கிணறுகளை ஏனோ சீண்டுவதில்லை
சாகசம் அங்குபோல் எங்குண்டு என்போரை
கிணறுகளின் பிரதாபம் பாடுவோரை
முற்றத்து மூலையில் நிறுத்துவாளவள்
பெருமழையில் விழுந்த தாத்தா
இரவெல்லாம் தவித்த கிணறு
தூர்ந்து போகாமல்
இன்றும் நினைவுகளில் அலையடிப்பதை
நல்லாச்சியும் அவளுமே அறிவர்

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Saturday, November 22, 2025

நல்லாச்சி..


கிடத்திய கிடுகில் வைக்கோல் பரப்பி
அதற்குக் குளிராது வேட்டி போர்த்தி
சுடுசாதம் கொட்டிப்பரத்துகிறாள் நல்லாச்சி
முத்தாய்ச்சொட்டும் துளிகளெல்லாம்
சத்தமில்லாமல் பயணிக்கின்றன கிடுகு வரை

அம்பாரச்சோறு அடங்குகிறது அண்டாவில்
சம்பாரம் பயணிக்கிறது அத்தோடு
முற்றத்து முருங்கைச்சாம்பார் உசத்தியாம்
கிரீடமாய்ப் பயணிக்கிறது நல்லாச்சி தலைமேல்
சோற்றுப்படையெடுத்துச் செல்கிறாள்
நடவு வயல் வீரர்களை நோக்கி
குழம்பும் கறியுமாய் ஆயுதமேந்தி

‘சோத்துவாசனைக்கு என்னமும் ஒட்டிக்கிட்டு வரும்’
இரும்புத்துண்டைக்காவலுக்குப் பணித்து 
பத்திரம் என்கிறாள் பேத்தியிடம்
‘மடத்துக்கிணத்தடியில்தான் அரற்றியபடியே அலைகிறாளாம்
சித்தி கொடுமையால் செத்த செம்பகம்
செத்தபின்னும் தீராப்பசி தொடருதையே
பாவப்பட்ட செம்மத்துக்கு’
புலம்பிய நல்லாச்சி கவனித்தாளில்லை
வரப்பிலும் மேட்டிலுமாய் அமர்ந்து
பசியாறும் நடவு ஆட்களில்
ஒருத்தி மட்டும்
செம்பகத்தின் சாயலாய்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Tuesday, November 4, 2025

நல்லாச்சி

திடலின் ஓரத்திலிருக்கும்
ஆலமரத்தைக் கண்ணுறுந்தோறும்
ஆவலும் பயமும் கொள்வாள் பேத்தி
கிளிகளைப்போன்ற அக்காக்களும்
அக்கக்கோவெனும் கிளிகளும்
இறுகப்பற்றி ஊஞ்சலாடும் விழுதுகள்
ஆசையையும் பயத்தையும் விதைத்திருந்தன அவளுக்குள்

விண்ணுக்கும் மண்ணுக்கும் 
பாலமாயிருந்த விழுதுகளில் சில
பாதாள லோகத்தையும் பார்த்துவரப்புகுந்திருந்தன
எண்ணெய் தடவாத முடிக்கற்றையென
நுனிகளில் பிளந்து கிளைத்திருந்தன சில
அக்கையொருத்தி கைபற்றிச்சேர்க்க
விழுது பற்றி ஆடிய பேத்தி
அதே வீச்சில்
பூமியை முத்தமிட்டுப் புரண்டு
புழுதியை விபூதியெனப் பூசியெழுந்தாள்
கசிந்த குங்குமச்சொட்டுகளை ஒற்றியெடுத்தாள்

வாரியணைத்த நல்லாச்சி
சூனியக்கிழவிதான் இவ்வடிவெடுத்திருப்பதாயும்
‘வடக்கற்றையெலாம் அவளின் சடைக்கற்றை
அவ தலமுடியில தொங்குனா வலிக்கும்லா
அதாம் தள்ளியுட்டுட்டா’
என்றும் பயமூட்டுகிறாள்
உளுத்த மரத்திற்கொரு கதை சொன்னவள்
உயிர்மரத்துக்கும் ஒன்று வைத்திருப்பாள்
தள்ளிவிடாத மரமொன்று
தேவதையின் கூந்தலாய்க் கிளைத்திருக்கலாம்
எங்கேனும்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.