Pages

Sunday, August 9, 2026

முகவரிகளின் வாசனை.


வளைந்து தொங்கும் நிலாவின் விளிம்பில்
மிதக்கும் என் பாதங்கள்
நிகழ்காலத்தின் காலணிகளை அணியும்போது
காற்றோடு கரைந்துபோகிறது
என் ஆதி முகவரிகளின் வாசனை

ஒவ்வொரு வாசலையும் கடக்கும் நேரம்
காலம் தோல் உரித்துக் கொள்ளும்போது
உதிர்ந்து விழும் என் நிழல்கள்
யாரோ விட்டுச்சென்ற நிழற்படத்தை
தன் முகம் என நம்ப முயல்கின்றன

வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளை
மெல்லத் திருடிக் கொண்டு
முட்களைச் சொருகி வைக்கும்
விசித்திர வேடத்திற்கு
பக்குவமென்றும் அனுபவமென்றும் பெயரிட்டு
நிறுவுந்தோறும்
இருண்ட வானில்
தன் பழைய கூட்டைத் தேடி அலையும்
ஒரு இறக்கையற்ற பறவையாய்
மிதந்து கொண்டிருக்கும்
என் குழந்தைப்பருவச் சிரிப்புடன்
யாருமற்ற வீதியில்
தன் சொந்தக் குரலையே தொலைத்துவிட்டு
தேடிக்கொண்டிருக்கிறது ஒரு வெற்று எதிரொலி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Saturday, August 8, 2026

நல்லாச்சி


நல்லாச்சி உறங்குகிறாள்
சமையலறைப் பாத்திரங்கள் ஓசையின்றி 
சைகையில் பேசிக்கொண்டிருக்க
தாழ்வாரம் வரை வந்து 
தயங்கி தவிப்போடு அமர்ந்திருக்கும்
வெயிலின் தங்க நிறம்
படிகளில் தேன்துளிகளாய்த் தேங்குகிறது

பகலெல்லாம் ஓயாமல் உழைத்த களைப்பில் 
பாயில் சாய்ந்திருக்கிறாள் நல்லாச்சி
இறகுகளை மெல்ல விரித்த தென்றல்
இதமாய் விசிறுகிறது அவளுக்கு
காற்றில் கலைந்த நிழல்கள்
பூனைக்குட்டியாய் அவள் காலடியில் முடங்கியிருக்க
முற்றத்தில் விளையாடும் பேத்தி
எட்டிப்பார்த்துக்கொள்கிறாள் அவ்வப்போது
அவளுக்கான கதைகள்தான்
இப்போது
நல்லாச்சியின் கனவுகளில் கருக்கொண்டிருக்கின்றன

அகில உலகமும் தன் இயக்கம் மறந்து நிற்க
காலமும் வெயிலும் வாசற்படியில் தவம் கிடக்கின்றன
சூரியனின் கதிர்களை அணைத்துக்கொண்டு
நல்லாச்சி உறங்குகிறாள்
பேத்தியும் காத்துக்கொண்டிருக்கிறாள்
அண்ணன் மீதான பஞ்சாயத்துக்கும்
கதைகளுக்குமாக

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Sunday, July 26, 2026

ஆகச்சிறந்த சுயநலமி..


இருளின் நஞ்சை விழுங்கி
அமுதச் சுடரினைப் பொழியும்
மௌன மரங்களின் கனவுலகில்
சஞ்சரிக்கும் மேகங்கள்
பூக்களின் புன்னகையை உதிர்க்கின்றன.

தன் காயங்களை மறைத்து
பிரபஞ்சத்தை ஒளிரச்செய்யும்
தேவதையின் வெண்ணிறச் சிறகுகளை
இருட்டறையில் சிறைப்பிடித்து வைத்திருக்கிறது
ஒரு பேராசைக்காரனின் நிழல்.

சுரக்கும் அமுதக்கலசத்தை உடைத்து
அதில் தன் இருட்டைக் கலந்து
தன்னை வாழவைத்த பேரன்பின் கழுத்தை
மென்மையாக அறுத்துப் பலியிடுகிறான்
மண்ணின் ஆகச்சிறந்த சுயநலமியாம் மனிதன்
செய்வதறியாமல் வேடிக்கை பார்க்கிறார் கடவுள்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட "பண்புடன்" மின்னிதழுக்கு நன்றி.

Sunday, July 19, 2026

நல்லாச்சி..


கிளை நுனியில் ஊசலாடும்
தூக்கணாங்குருவியின் பெருவீடு கண்டு
வியப்புடன் வினவினாள் பேத்தி
“கம்பியும் இல்லை, காரையும் இல்லை,
எப்படி முடைந்தது இத்தகு பேரழகை?
பட்டம் பயின்ற பொறியாளராலும்
இப்படியோர் விந்தை இயலுமோ ?”

மென்னகை புரிந்த நல்லாச்சி
இயற்கையின் அதிசயங்களில்
இதுவுமொன்று என்றாள்;
கூட்டுக்குள் மழைத்தூறல் நனைக்குமே
இரவானால் வெளிச்சத்திற்கு என்செய்யும்
அசராமல் கேள்விகளை அடுக்குகிறாள் பேத்தி

‘புல்லின் பின்னல் மழையைத்தடுக்கும்
மின்மினிகள் பதித்த சேற்றுருண்டை விளக்காம்’
நல்லாச்சியின் விளக்கத்தில் மகிழ்ந்து
“எனக்கும் தருவாயோ இப்படியொரு கூடு
என் பொம்மைகள் குடியிருக்க?”
ஆசையாய் அணைத்துக் கேட்கிறாள் பேத்தி
குப்பையின்றி உன் கூட்டைச் சுத்தப்படுத்து
வெகுமதியாய்க்கிடைக்கும் குருவிக்கூடு
நெற்றியில் வருடும் விரல்களில்
வழிகிறது அன்பின் மொழி
ஆமோதிக்கின்றன குருவிகளெல்லாம்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Wednesday, July 15, 2026

வண்ணத்துப்பூச்சிகளின் பிரபஞ்சம்..


காலத்தின் கால்களில் நசுங்கவேண்டுமென்ற 
விதிமுறைகளின் சாம்பல்நிறப் புத்தகத்தை
வாசித்தறியா பூக்கள்
ஒவ்வொன்றாய் கண்மலர்த்துகின்றன

காற்றின் கத்தரிக்கோலால்
உலர்ந்த சருகுகளாய் நறுக்கப்பட்டு
மண்ணின் ஆழத்தில் புதையப்போகும்
மரணத்தின் கணக்குகளைத் தள்ளுபடி செய்துவிட்டு
தங்கள் பூங்கதவுகளைத் திறக்கின்றன

யாரோ வரைந்த ஓவியத்திலிருந்து
திடீரென வெளியேறும் வண்ணத்துப் பூச்சிகளாய்
உலகைப் பார்க்கும்
அவற்றின் பார்வையில்
வானம் ஒரு நீலநிற நதியாகவும்,
பூமி அதில் மிதக்கும் கனவாகவும் மாறுகிறது

விதியின் காலணிகள்
காத்திருக்கும் பாதையெங்கும்
தன் பாட்டிற்கு இசைத்துக்கொண்டு
பிரபஞ்சத்தின் காதுகளில்
மௌனமான ரகசியங்களை கிசுகிசுக்கின்றன
அச்சமற்ற ஒரு அழகின் திமிரோடு.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட "பண்புடன்" மின்னிதழுக்கு நன்றி.

Monday, July 6, 2026

நல்லாச்சி


மழை பொய்த்த அவ்வருடம்
அலைமோதுகின்றனர் தண்ணீருக்காய்
கண்ணீரும் ஆவியாய்ப்போகும் வெப்பத்தில்
வெடித்து அழுகிறது நிலம்
மழைக்கஞ்சியை உண்டுவிட்டு 
மௌனம் சாதிக்கும் கடவுளர்முன்
இறைஞ்சி ஏங்குகின்றனர் மக்களெலாம்

அடிகருத்த வானம் துளிகளோடு ஏமாற்றிவிட
அடாபுடாவென வந்திறங்குகிறது இடி
நல்லாச்சி வீட்டு வாழைமரத்தில்
கருகிய வாழைமரத்தூரில்
தங்கமாய் உறைந்திருக்குமென்று
பொறாமையுடனும் ஆவலுடனும் பார்க்கிறது கூட்டம்

அனுமதி பெறாத அவசரக்காரனொருவன்
அடிமேலாய்ப்புரட்டுகிறான் மண்ணை
கிளைத்துக்கொத்திச்சாய்க்கிறான் 
ஆறடி ஆழத்துக்கு
பொங்கிவந்த ஊற்றொன்று வானத்தையெட்டுகிறது
இதுதான் தங்கமெனச்சுட்டுகிறாள் நல்லாச்சி
உயிர் வளர்க்கும் அமுதத்தை
ஊருக்காய் நேர்ந்து விடுகிறாள்
எண்ணியெண்ணி வாழ்த்துகின்றனர் தலைமுறைக்கும்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Sunday, June 28, 2026

ஒரு துளியின் துளிர்ப்பு..


சாம்பல் படர்ந்த இதயங்களின் மேல்
மழைத்துளிகள்
ராகம் பாடிச் செல்கின்றன
சுட்டெரித்த சொற்களின் வடுக்களைக் கழுவி
மனதுக்குள் புதைந்திருந்த மௌனத்தை
பாட வைக்கிறது அந்தப் பெருமழை.

சொற்களால் வீழ்த்தப்படும் மனிதர்களை
இயற்கை ஒருபோதும் கைவிடுவதில்லை
கனிவுடன்
அமுதம் பொழிந்து உயிர்ப்பிக்கிறது
பேரழிவுக்குப் பின் நிகழும்
பேரன்பின் துளிர்ப்பு அது

சுட்டெரித்த எதிர்ப்புகளையெல்லாம் உரமாக்கி
அவநம்பிக்கையின் வேர்களை அறுத்தெறிந்து
மன்னித்தலின் பெருவழியில்
புன்னகையோடு பயணிக்கும் அந்த உயிருக்கு
ஒரு துளி அன்பு போதும்
அதை
யுகாந்த காலம் வரை வாழவைக்க.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.