Pages

Tuesday, August 25, 2026

கள்ளியும் பூக்கும் (பண்புடன் மின்னிதழில் வெளியானது)

காலம் உறங்கும் இருட்டு அறையில் 
நிழல்கள் நிஜங்களை வேட்டையாடுகின்றன.
நீலக் கண்ணீர்த்துளிகளாய் 
சூரியன் உருகி வழிய
கடந்த பாதைகளின் காலடித்தடங்கள் 
கள்ளிச்செடிகளாய் முளைத்து நிற்கின்றன

தொண்டைக்குள் அடைபட்டுக் கிடந்த மௌனம் 
ஒரு கருப்புப் பறவையாய் 
ஆன்மாவைக் கொத்திக்கொண்டிருக்க
ஆழ்மனதின் கடலில் மூழ்கி 
வலிகளைச் சேகரிக்கிறேன் முத்துக்களென

வானத்தை நோக்கிய 
ஒரு புதிய வாசல்தான் வலி
காலம் எறிந்து சென்ற
காயங்களை எல்லாம்d
கவிதையாக்கிப் பருகிவிடலாம்
கசப்பை இனிப்பாக்கும் வித்தையோடு
எனக் கூவிச்செல்கிறாள் 
கண்களில் நெருப்பை அணிந்தவள்

காலடித்தடங்களில்
வண்ணங்களைத் தீட்டும்
என் விரல்களின் வழியே
கள்ளிகளெங்கும் பூத்துச்சொரிகின்றன
வெண்முத்துச்சூரியன்கள்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

No comments: