Pages

Saturday, January 10, 2015

நல்லாச்சி - 1

நல்லாச்சிக்கும் பேத்திக்குமிடையே
கடும் வாக்குவாதம்

"வெற்றிலை போட்டால் மாடு கொத்துமா தாத்தா?"
பேந்தப்பேந்த விழித்துக்கொண்டிருந்தார்
இழுத்து வரப்பட்ட பஞ்சாயத்துத்தலைவர்
"கோழிதான் முட்டும்" என்பதை
உரைக்கவியலாமல்..

**********************
கன்று மிதித்ததால் பாதம் வீங்கிக் கிடக்கும்
பேத்திக்கு
மஞ்சள்பத்துப் போடவென
மஞ்சனத்தி இலை பறித்தரைக்கிறாள் நல்லாச்சி
"செத்தோலதாம் வலிக்கும்.. கண்ணப்பொத்திக்கோ"
சொல்பவளை ஆமோதிக்கிறது
எங்கிருந்தோ ஒரு இருட்டுக்குயில்
தன் காலை நீவியபடி.
சமாதானப்படுத்திக்கொண்டிருப்பவளின் கண்களில்
வழிகிறது பேத்தியின் வலி
தீராநதியாய்..

************************

"நாலாம் பிறை கண்டால்
நாய் படாத பாடு பட வேண்டியிருக்கும்"
பேத்தியைக்கடிந்துகொண்டாள் நல்லாச்சி
ஜன்னல் வழியே நிலா பார்த்த பொழுதில்.
செய்வதறியாது கலக்கத்துடன் விழித்தது
தடாகத்தில்
தன் முகம் ரசித்துக்கொண்டிருந்த நிலா.