Pages

Thursday, November 24, 2022

நல்லாச்சி - 39

பூக்கவுமில்லாம காய்க்கவும் செய்யாம
மரம் மாதிரி எதுக்கு நிக்கே?
சூடு சொரணை இருக்கா ஒனக்கு?
திட்டியபடி முருங்கை மரத்தை
துடைப்பத்தால் சாத்துகிறாள் நல்லாச்சி
பாவம் மரமெனப் பதறுகிறாள் பேத்தி
ஒண்ணுமில்ல மக்கா
பலன் கொடுக்காத தாவரத்துக்கு
செய்யற சாங்கியந்தான் இதுவென
சமாதானப்படுத்தியபடி
ஒற்றைச்செருப்பைக் கட்டித்தொங்கவிட்டு
கட்டிப்பெருங்காயத்தைப் புதைத்து
தேமோர் கரைசலையும் தெளித்து விட்டு
பெருமூச்சுடன் நகர்கிறாள் நல்லாச்சி
சின்னாளிலேயே
கொள்ளாத காய்களுடன் நிறைந்த மரம் கண்டு
சரஞ்சரமா சடை பிடிச்சுக்காய்ச்சிருக்கு
பறிச்சு முடியலை என
சந்தோஷமாய் அலுத்துக்கொள்ளும் நல்லாச்சியிடம்
மூச்சு விடவில்லை பேத்தி
காலையும் மாலையும் அவள்
காம்ப்ளான் ஊற்றி வளர்த்த உண்மையை
அத்தனையையும் கவனித்த
மூணாம் வீட்டு செல்லம்மாச்சி
வாரிசுக்காக நாளும்பொழுதும் மருமகளை
வதைப்பதை விட்டு
ஆஸ்பத்திரிக்கு முடுக்குகிறாள்
மருமகளையும் மகனையும்.

நல்லாச்சி - 38


வெள்ளரளியும் செவ்வரளியும்
கலந்தொரு மாலை கண்டத்தில்
வெண்டாமரை மொட்டுகள் கோர்த்தவொன்று 
நெஞ்சிலாடுகிறது
முற்பிறப்பின் பயனாய் வெள்ளைரோஜாக்கள்
வயிற்றைத் தரிசிக்க
போதாதென சம்பங்கி மாலையொன்று
இடைதழுவ
முழந்தாளைத்தொடுகிறது
பன்னீர்ப்பூ ஆரம்
இத்தனையுமிருந்தும்
தாள்தோயும்
முல்லை மல்லிகை நிலமாலை எங்கேயென
சந்நதம் வந்தாற்போல் சீறுகிறான்
தெய்வகுற்றமெனக் குழைகிறானொருவன்
சேலையைப் பற்றியிழுத்துக்
குறிப்புணர்த்தும் பேத்திக்கு
விளக்குகிறாள் நல்லாச்சி
பக்தரின் முன்கோபம் தணிவிக்க
நடக்கும் நேர்ச்சை இதுவென
இத்தனை வெண்மலர்களிலும் தணியாததையா
ஒரு நிலமாலையில் தணிவித்து விடும் தெய்வம்?
எனப் பரிகசிக்கும் பேத்தியின் வாயை
சர்க்கரைப்பொங்கலால் அடைத்து
அப்பால் இட்டுச்செல்கிறாள் நல்லாச்சி
மலர்களின் நறுமணத்தில்
கிறங்கி நிற்கிறது தெய்வம்
வேண்டுதல் இன்னவென்று கிரகிக்காமல்.