Pages

Wednesday, February 20, 2013

சிறகுதிர்த்த மின்மினி.. (வல்லமையில் வெளியானது)



இணையத்தில் சுட்ட படம்..
மின்மினி மந்தையினின்று
வழி தப்பிய எரிகல்லொன்று
கவணிடை
எறிகல்லாய்ப்புறப்பட்டது..
வெகுதூரப்பயணமோவென
ஏங்கி வினவிய சகாக்களைப்
புறங்கையால் ஒதுக்கிவிட்டு
உல்லாசமாய்ப்புறப்பட்ட உற்சாகத்துடன்
துள்ளித்துழைந்தது அண்டப்பெருவெளியில்.
இலக்கில்லாப்பயணத்தில்
அதிரும் பிம்பங்களைச் சிதற விட்டபடி
துழாவித்துழாவி உணர்கொம்புகள் நீட்டி
முன்னேறிக்கொண்டுதானிருந்தது அது.
இலக்கில்லா எவரோ.. எதுவோ.. 
ஓர் நாள்
இலக்கினை அடைந்தே தீரவேண்டிய
நியதிக்குட்பட்டு
பூமாதேவியிடம் மயங்கி
முத்தமிட முயன்றதில்
சீறி எரித்தது
லக்ஷ்மண ரேகை..
உதிர்ந்து வீழ்ந்தது மின்மினி
ஆயிரமாயிரம் பரப்பளவில் தன் சிறகுகளை உதிர்த்தபடி..

டிஸ்கி: வல்லமையில் வெளியானது.

Sunday, February 17, 2013

உணர்வுகளும் அமைதியும்..(இன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது)

பிளிறலுடன் நிலையத்தினுள்
நுழைந்தது ரயில்
மதம் பிடித்ததுவோ எனவஞ்சும்படி
ஆர்ப்பரித்துக்கொண்டு.
அரைகுறை உறக்கத்தில்
ஒவ்வொரு இலையாயுதிர்த்துக்கொண்டிருந்த
அரச மரமொன்று
தடதடவென அகிலமெங்கும் கிடுகிடுத்ததில்
சரசரவென வியர்த்துக் கொட்டியது
இலைத்துளிகளை
மடியில் உறங்கிக்கொண்டிருந்த
நாய்க்குட்டியின் மேல்..
அதிகபட்ச எதிர்ப்பாய்த்
திரும்பிப்படுத்துறங்குதலைக் காட்டிய
நாயிடம் கோபித்துக்கொண்டு
வெளியேறிக்கொண்டிருந்தது ரயில்
புயலென
கைகாட்டி மரத்தின் அசைவுக்கு
மனிதர்களை உதிர்த்து விட்டு..

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட இன் அண்ட் அவுட் சென்னை இதழுக்கு நன்றி.