Pages

Monday, March 27, 2023

குருவியும் சரக்கொன்றையும்


முதற் சரக்கொன்றை பூத்து விட்டது
அக்காக்குருவிகளைத்தான் காணவில்லை.
அலகு ஓய்ந்ததோ
அன்றி
களைத்து இளைத்ததோ
அக்காக்களைக் கண்ணுக்குள்ளேயே
வைத்திருக்கும் தங்கைகள்
தேடித்தட்டழிகிறார்கள்

இந்த மரத்தில் பூத்திருப்பது
சென்ற வருடம் கூவிய
அக்காக்குருவியின் 
கீதமாக இருக்கலாம்
தங்கைகளின் ஏக்கமாக வழிவது
ஏதோ ஒரு வருடத்தின்
பூக்குவியலாகவும் இருக்கலாம்

சுள்ளிக்குவியலாய் இருக்கும்
மரத்தின்
பூவின் தனிமையும்
வனம் முழுக்க அக்கக்கோவென
தேடும் தங்கையின் தனிமையும்
ஒன்றென்றால் ஒன்றுதான்
வெவ்வேறென்றால் வேறு வேறுதான்
சொட்டும் குரலும் மகரந்தமும்
பரவும்
மண் மட்டும் என்றும் ஒன்றே போல்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.

Monday, March 13, 2023

தேடல்

             
விழித்திருக்கும்
கைக்குழந்தைக்குத் துணையாய்
கொட்டக்கொட்ட
தானும் விழித்திருக்கிறார்
நோய்மை கிழித்துப்போட்ட ஒருவர்
புறப்புலன் மங்கி 
அகப்புலன் தெளிவின்றி
சுய கட்டுப்பாடுமற்ற உடலர் இருவரில்
வந்த பாதை நினைவில்லை ஒருவருக்கு
போகும் பாதையோ 
தெரியவில்லை இன்னொருவருக்கு
அகமும் புலனுமற்ற ஏதோவொரு
மாயவெளியில்
அளவளாவும் இரு ஆன்மாக்களும்
தத்தம் ரேகைகளை
அங்கே பரிமாறிக்கொண்டு பிரிகின்றன
ரேகையைப் பத்திரப்படுத்தும் பொருட்டு
கால் கட்டைவிரலை
வாயில் வைத்துக்கொள்கிறது குழந்தை
கையை இறுக்கிக்கொள்கிறார் வயதானவர்
ஒருவரையொருவர் அர்த்தத்துடன் நோக்கி
பொக்கைச்சிரிப்பைச் சிந்துகின்றனர் இருவரும்
அப்பிக்கிடக்கும் காரிருளில்
விரல்களைத்தேடுகின்றன ரேகைகள்.

கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.

Tuesday, March 7, 2023

வலி

ஒவ்வொரு முறையும்
ஒரு குளிர் அலையைப்போல்
வலி வந்து மூடும்போது
விதிர்விதிர்த்துத் துடித்தடங்கும் உடம்பில்
எங்கோதான் இருக்கிறது
உடல்நடுக்க மையம்
மெல்லெனக்கிளம்பி திடீர்க்கணத்தில்
பின்னந்தலையில் சொடுக்கும்
குரூர வலியிடம் இறைஞ்சுவதற்கு யாதுளது
கர்மாவோ கடனோ
அனுபவித்துக்கழிப்பதொன்றே செய்யக்கூடியது

ததும்பும் பேரன்புடன் வலி சொன்னது
நீ
எனக்கு அடிமையாயிரு
என்னை ஆராதி
தியானித்தாலோ கதி மோட்சம் கிட்டும்
முடிந்தால்
புண்பட்ட உடலோ மனதோ
இன்னுங்கொஞ்சம் கீறிக்கொள்
வலி கொண்ட மனதென்றால் எனக்குப்பிரியமதிகம்
உனக்கும் பொழுது போகும்
சிரங்குற்ற குரங்கின் கதையை
கேள்வியுற்றிருப்பாய்தானே நீ
ஆயுதங்களைப்போட்டு விட்டு
சரணடைந்து விடு
எதிரிகள் இல்லாவிடத்தில்
நாய்க்குட்டியாய்ச் சுருண்டிருப்பேன் நான்

இருப்பையுணர்த்தும் அவசியம் எனக்கு
உண்மையில்
உன்னை நானென்ன செய்ய வேண்டுமென்று
நீதான் தீர்மானிக்க வேண்டும்
கங்கையாய்த் தாங்குவாயா
அல்லது
முயலகனாய் அடக்கி வைப்பாயா
சட்டெனச்சொல்
காலம் சொட்டிக்கொண்டிருக்கிறது விரைவாக

யுகம் கழிந்தும் பதிலில்லாததால்
வலி
உடல்நடுக்கப்புள்ளியில் மையம் கொண்டது
ஒரு 
கருக்குழந்தையாய்.

டிஸ்கி: திண்ணையில் வெளியானது. திண்ணையில் வரிகள் நான் அனுப்பியது போல் இல்லாமல் கொஞ்சம் முன்னே பின்னே பிரசுரமாகியிருக்கிறது.

Wednesday, March 1, 2023

எல்லாத்துறையிலும் ஒரே கடல்..


எந்தக்குளத்தில் பூத்தாலென்ன
எல்லாத்தாமரைக்கும்
ஒரே மணம்
எந்த உலையில் வெந்தாலென்ன
எல்லா அரிசியிலும்
ஒன்று போல்தான் பசி தீர்கிறது
எல்லாத்தாய்களும் ஒருவளே
குழந்தையின் பசி உணர்வதில்
எந்தத்துறையில் முங்கினாலென்ன
எல்லாத்துறையிலும் ஒரே கடல்
எல்லாச்சாளரங்களின் வழியும்
நுழைகிறது காற்று
உன் என் வியர்வையை ஆற்ற
எல்லாமும் சேருமிடம்
ஒரு புள்ளியில்
பரந்து பிரிவதும் அங்கிருந்தே
பலவற்றிலிருந்து ஒடுங்கியிணைந்தவையெலாம்
சிதறிப்பறக்கின்றன
ஒன்றுதான் ஒன்றுதான் என்றபடி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.