Pages

Wednesday, September 26, 2012

வாழ்வியலும் இன்னொன்றும்.. (கவி ஓவியாவில் வெளியானது)

சிக்கல்களை விடுவித்துக்கொண்டே
மேலும்
சிக்கலாக்கிக்கொண்ட பாதையொன்று
புதிர்களைப் புதைத்துக்கொண்டு
காத்திருக்கிறது
ஒரு திடுக்கிடலுக்காய்..

சரியானதென்று நம்பிச்சென்ற
பாதைகளெலாம் கை விட்டு விட
தயக்கத்துடன் கையிலெடுத்தவையோ
முன்னெடுத்துச்செல்கின்றன நம்பிக்கையுடன்.

சுற்றிச்சுற்றி,
ஆரம்பப்புள்ளியிலேயே மறுபடியும் குவிந்து,
இன்னும் இன்னுமென்று
மனதின் விரல்பிடித்து அடைந்த இலக்குகள்
பொக்கிஷமாய்த் தம்முள் வைத்திருந்த
உலைக்குமிழி உற்சாக நொடிகளில்
வாழ்ந்து முடித்துவிட்டு,
இலை மறைத்த வெற்றிக்கனியை
இனம்காணும் சூட்சும ருசி காண
மறுபடியும் புறப்படுகிறேன்
வேட்டைக்கு..

டிஸ்கி: இக்கவிதையை ஆகஸ்ட் 2012 இதழில் வெளியிட்ட கவி ஓவியா இதழுக்கு நன்றி.

Saturday, September 8, 2012

யுத்தவாணம்..

படத்தை இரவல் தந்த இணையத்துக்கு நன்றி
வென்று விட்டதாய்ப்
பேரிகை கொட்டும் தருணங்களில்தான்
ஆரம்பிக்கவே செய்கின்றன
பெருவாரியான யுத்தங்கள்.
வீழ்த்தி விடும் முனைப்புடன்,
கனிந்தெரியும் அகம்பாவத்தில்
கூர் தீட்டப்பட்ட
வாணங்களனைத்தும்
பசி மீறிய நொடிகளில்
படைத்தவனையும் சேர்த்தே புசித்து விட,
சன்னதம் கொண்டாடும் யுத்த குண்டத்தில்
ஆகுதியாய்ப் பெய்த வார்த்தைகளனைத்தும்
பொசுங்கிய சாம்பலினின்று
உயிர்த்தெழுகிறது ஓர் வெள்ளைப்புறா..

டிஸ்கி: ஆகஸ்ட்-2012 இதழில் இக்கவிதையை வெளியிட்ட வடக்கு வாசல் இதழுக்கு நன்றி.

Wednesday, September 5, 2012

துளியில் மலர்ந்த பூக்கள்..

படம் அளித்த இணைய வள்ளலுக்கு நன்றி


மலர்தலும் உதிர்தலும்
இயல்பெனினும்
காலக்கணக்கில் கட்டுண்டு நிகழாமல்
சிறு தூறலிலும்
உடன் மலர்ந்து விடுகின்றன
சாலைச்சோலையில்
பூக்கள்... குடைகளாய்;
தேனருந்தும் வண்டுகள்தாம்
மூக்குடைந்து திரும்புகின்றன
முயற்சியில் தோற்று.

ஊன்றுகோலாகவும் ஒத்தாசை செய்யும்
முதுகு வளைந்த
முதிய தலைமுறையினர் முன்
வெட்கிப் பதுங்கிய
இளைய தலைமுறைகள்
அடைக்கலம் தேடுகின்றன
கைப்பைகளுக்குள்,
மூன்று சாண் உடம்பை
ஒரு சாணாய்க் குறுக்கியபடி.

ஆரவாரத்துடன் நாட்டு வளம் காண
பாய்ந்து வந்த நொடியில்
சரேலென்று பறந்த
கறுப்புக்கொடிகள் கண்டு
திரும்பி விட எத்தனித்தாலும்
குடை மடக்கி உடல் நனைத்து
நா நீட்டி மழை ருசித்த
ஈர மனதை மேலும் குளிர்விக்கத்
திரும்பி வருகிறான்
வருண தேவன்.

டிஸ்கி : வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்.