Pages

Thursday, December 22, 2022

நல்லாச்சி - 40


வெற்றிலையுடன்
வம்பையும் சேர்த்து மெல்லும்
செல்லாச்சி வருகிறாள் தடியூன்றி தெருவில்
ஈ காக்காயெல்லாம் 
இதோ பரதேசம் போகிறேனென
ஓடியொளிய
அப்பாவி நல்லாச்சி அகப்பட்டாள்
அன்றைய ஆட்டுக்குட்டியாய்
வட்டச்சம்மணமிட்டமர்ந்து
நல்லாவிடம் பேச்சு வளர்க்கிறாள் செல்லா
நாவில் சொல் வைத்து 
நன்றாய்த்தான் வீசுகிறாள் தூண்டிலை
பேச்சால் வலை விரித்து 
மான் சிக்கக் காத்திருக்கிறாள்
எண்ணிச் சொல்லெடுத்த நல்லாச்சி
கண்ணாடிப்பாத்திரம் கையாளும் லாவகத்துடன்
ஆய்ந்தாய்ந்து அனுப்புகிறாள் வாய்ச்சொல்லை
நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது எல்லாம்
குறும்பு செய்த பேத்தியை
அம்மா கண்டிக்கும் வரை
தன்னிலை மறந்த நல்லாச்சி
செல்லப்பேத்திக்காய் பரிந்து பேச
அவல் கிடைத்த திருப்தியுடன் 
கிளம்புகிறாள் செல்லாச்சி
'ஐயோ போச்சே' என
தலை பற்றி அமர்கிறாள் நல்லாச்சி
குழந்தைக்குறும்பு
மாமி மருகள் தகராறாய் உருப்பெருகிப் பரவுமேயென
மருகுகிறாள் நல்லாச்சி
அலங்கமலங்க விழிக்கின்றனர் அம்மையும் மகளும்.

Thursday, November 24, 2022

நல்லாச்சி - 39

பூக்கவுமில்லாம காய்க்கவும் செய்யாம
மரம் மாதிரி எதுக்கு நிக்கே?
சூடு சொரணை இருக்கா ஒனக்கு?
திட்டியபடி முருங்கை மரத்தை
துடைப்பத்தால் சாத்துகிறாள் நல்லாச்சி
பாவம் மரமெனப் பதறுகிறாள் பேத்தி
ஒண்ணுமில்ல மக்கா
பலன் கொடுக்காத தாவரத்துக்கு
செய்யற சாங்கியந்தான் இதுவென
சமாதானப்படுத்தியபடி
ஒற்றைச்செருப்பைக் கட்டித்தொங்கவிட்டு
கட்டிப்பெருங்காயத்தைப் புதைத்து
தேமோர் கரைசலையும் தெளித்து விட்டு
பெருமூச்சுடன் நகர்கிறாள் நல்லாச்சி
சின்னாளிலேயே
கொள்ளாத காய்களுடன் நிறைந்த மரம் கண்டு
சரஞ்சரமா சடை பிடிச்சுக்காய்ச்சிருக்கு
பறிச்சு முடியலை என
சந்தோஷமாய் அலுத்துக்கொள்ளும் நல்லாச்சியிடம்
மூச்சு விடவில்லை பேத்தி
காலையும் மாலையும் அவள்
காம்ப்ளான் ஊற்றி வளர்த்த உண்மையை
அத்தனையையும் கவனித்த
மூணாம் வீட்டு செல்லம்மாச்சி
வாரிசுக்காக நாளும்பொழுதும் மருமகளை
வதைப்பதை விட்டு
ஆஸ்பத்திரிக்கு முடுக்குகிறாள்
மருமகளையும் மகனையும்.

நல்லாச்சி - 38


வெள்ளரளியும் செவ்வரளியும்
கலந்தொரு மாலை கண்டத்தில்
வெண்டாமரை மொட்டுகள் கோர்த்தவொன்று 
நெஞ்சிலாடுகிறது
முற்பிறப்பின் பயனாய் வெள்ளைரோஜாக்கள்
வயிற்றைத் தரிசிக்க
போதாதென சம்பங்கி மாலையொன்று
இடைதழுவ
முழந்தாளைத்தொடுகிறது
பன்னீர்ப்பூ ஆரம்
இத்தனையுமிருந்தும்
தாள்தோயும்
முல்லை மல்லிகை நிலமாலை எங்கேயென
சந்நதம் வந்தாற்போல் சீறுகிறான்
தெய்வகுற்றமெனக் குழைகிறானொருவன்
சேலையைப் பற்றியிழுத்துக்
குறிப்புணர்த்தும் பேத்திக்கு
விளக்குகிறாள் நல்லாச்சி
பக்தரின் முன்கோபம் தணிவிக்க
நடக்கும் நேர்ச்சை இதுவென
இத்தனை வெண்மலர்களிலும் தணியாததையா
ஒரு நிலமாலையில் தணிவித்து விடும் தெய்வம்?
எனப் பரிகசிக்கும் பேத்தியின் வாயை
சர்க்கரைப்பொங்கலால் அடைத்து
அப்பால் இட்டுச்செல்கிறாள் நல்லாச்சி
மலர்களின் நறுமணத்தில்
கிறங்கி நிற்கிறது தெய்வம்
வேண்டுதல் இன்னவென்று கிரகிக்காமல்.

Wednesday, October 12, 2022

நல்லாச்சி - 37


பன்னிரு கரம் விரித்து
உக்கிரமாய் ஆடிவருகிறாள் கருங்காளி
இட்ட அடிக்கும் எடுத்த அடிக்கும்
தோளில் புரளும் மாலை மலர்தூவ
செந்நாக்கு துருத்தி 
சீறும் கண்களையுருட்டி
விண்ணிலுயர்ந்த பாதம் கலீரென
வீதிவலம் வரும் அவளைக் காண்பித்து
பேத்திக்குச்சோறூட்டுகிறாள் நல்லாச்சி
அவளிடம் பிடித்துக் கொடுத்து விடுவதாக
பயமுறுத்தி
அருகி வந்ததும் கண்ணுற்ற காளி
செந்நாவை அகற்றிவிட்டுக்
குசலம் விசாரிக்கிறாள் நல்லாச்சியிடம்
பிஸ்கட் வாங்கித்தருவதாக
கைப்பிடித்துச் செல்லும் காளியுடன்
குதித்து நடக்கிறாள் பேத்தி
காளியை விட உக்கிரமாய்
முறைக்கிறாள் நல்லாச்சி.

நல்லாச்சி - 36

பக்கத்து ஊரில் ஒரு திருமணம். அன்றைக்கென்று முக்கியமான ஒரு வேலை வந்துவிட்டதால் தாத்தா "பேத்திப்பொண்ணும் நீயும் மட்டும் போய்ட்டு வாங்க" என நல்லாச்சியிடம் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். சும்மா வீட்டிலிருக்கும் பொழுதுகளிலேயே பேத்தியை அலங்கரித்து அழகு பார்க்கும் நல்லாச்சி, கல்யாண வீட்டுக்குப் போவதென்றால் வாய்ப்பை விடுவாரா என்ன?

பட்டுப்பாவாடை, அதற்குப் பொருத்தமான சட்டை, ஜொலிக்கும் நகைகள், நெத்திச்சுட்டி, கலீர்கலீரெனச் சிணுங்கும் காெலுசுகள், மணக்கும் மல்லிகைப்பூ என தன் கைவண்ணத்தையெல்லாம் காட்டி பேத்தியை அழகுபடுத்தினார். "ஆச்சி, போறும்.." எனச் சிணுங்கிய பேத்தியை "சும்மாரு புள்ள.." என அடக்கியவர் பட்டும்படாமலும் ஒரு திருஷ்டிப்பொட்டையும் வைத்துவிட்டு பேத்தியை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.

செல்லும் வழியில் "ஆச்சியும் பேத்தியும் எங்க சோடி போட்டுக்கிட்டுக் கிளம்பியிருக்கியோ?" என விசாரித்தவர்கள் பேத்தியின் அலங்காரத்தையும் அழகையும் அணுவணுவாய் உற்றுப்பார்த்ததைக் கவனிக்கத் தவறவில்லை ஆச்சி. கல்யாண வீட்டிலும் கிட்டே வந்து உள்ளன்போடு விசாரித்தவர்களைத் தவிர ஒரு சிலர், "பட்டுப்பாவட உடுத்துனாதாம் பொம்பளப்புள்ள லெச்சணமா இருக்கு. இந்த நெக்லசு எத்தன பவுனு? மவன் வெளிநாட்டுலேர்ந்து கொண்டாந்தானா?" எனக் கேட்டபடி  கையிலெடுத்துப் பார்த்துவிட்டு பெருமூச்சுடன் நகர்ந்ததையும் மனதில் வைத்துக்கொண்டாள். 

மணமக்களை வாழ்த்திவிட்டு, விருந்துண்டு வீட்டுக்கு வந்தவள், வீட்டு முற்றத்தில் பேத்தியை கிழக்கு நோக்கி நிற்க வைத்துவிட்டு, "இன்னா வாரேன்" எனச் சென்றவள் ஒரு பொட்டலத்துடன் திரும்பினாள்.

உப்பும் மிளகும்
கடுகும் காய்ந்த மிளகாயும்
அள்ளியெடுத்த முச்சந்தி மண்ணும் 
கூட்டிப்பொதிந்து
கண்ணேறு கழிக்கிறாள் நல்லாச்சி
அங்கமெலாம் பையத் தடவி
வயிற்றில் சற்றே அழுத்தித் தடவி
ஏதோ கேட்க முற்படும் பேத்தியை
கண்ணால் அடக்கி
இடவலமாகவும் எதிர்ச்சுற்றாகவும்
ஏற்றியிறக்கி
விரித்த பொட்டலத்தில்
மென்மையாய் மும்முறை துப்ப
சைகை காட்டி
காத்து கருப்பு அண்டாதிருக்கட்டும்
என்றபடி போடுகிறாள் கனலில்
பொட்டலத்துக்குப் போட்டியாய்ப்பொரிகிறாள்
காற்றடைத்த பலூனென
காத்துக்கும் கருப்புக்கும் விளக்கம் வேண்டி 
அதுகாறும் குதித்த பேத்தி
'பொறாமை கொண்டோரின்
பெருமூச்சுதான் காற்று
கெடுமதியாளரின் நிழல் இங்கே கருப்பு
இவ்விரண்டும் அண்டாமல்
நல்லோர் சூழ வாழிநீ'
என வழுத்துகிறாள் நல்லாச்சி
தெளிந்து குளிர்கிறாள் பேத்தி.

Monday, August 29, 2022

நல்லாச்சி - 35


"இரவும் பகலும் 
எப்படி வருகிறது ஆச்சி"
நல்லாச்சி மடியில் மல்லாக்கப்படுத்துக்கொண்டு
கேட்கிறாள் பேத்தி
"கடவுள் ஊட்ல 
சுச்சு போட்டா பகலு
அமுத்துனா ராவு அவ்வளவுதான்"
பதிலுறுத்தாள் நல்லாச்சி
இருள்பிரியாது நீண்ட
குளிர்கால இரவொன்றில்
பொறுமையிழந்த பேத்தி சொல்கிறாள்
"கடவுள் வீட்லயும்
பீசுகட்டய புடுங்கிட்டாவோ போலுக்கு
பில்லு கட்டலயோ"
ஞேயென விழிக்கிறாள் நல்லாச்சி
வெளிச்சம் வரக் காத்திருக்கிறாள் பேத்தி.

Sunday, August 28, 2022

நல்லாச்சி - 34


"ஆக்கறவனுக்குப் பல நாள் வேலை
அழிக்கறவனுக்கு ஒரு நிமுசந்தான்"
சொலவம் சொல்லியவாறு
வெற்றிலை போடத்துவங்குகிறாள் நல்லாச்சி
பாக்கு இடிபடுகிறது உரலில்
செத்தோல இழுவுகிறாள் சுண்ணாம்பை
காம்பும் நுனியுமற்ற வெற்றிலையின் முதுகில்
மூன்றையும் வாய்க்குள் அடக்கிய
ஒரு நிமிடத்தில்
சிவக்கிறது வாய்
நிறைவுறுகிறது நெஞ்சம்
கண்கொட்டாமல் கவனித்திருந்த பேத்தி
ஆமாமென ஆமோதிக்கிறாள் ஆச்சியின் கூற்றை
வெற்றிலை விளைய எத்தனை நாளோ
கமுகு பழுக்க எத்தனைக் காலமோ
சுண்ணாம்பு பக்குவப்பட எத்தனைப் பொழுதோ
அத்தனையையும் ஒரு நிமிடத்தில் மென்றுவிட்டாயே
வாய்க்குழம்பு சிதறாதிருக்க அடக்கிய சிரிப்பால்
புரையேறுகிறது ஆச்சிக்கு
நமுட்டுச்சிரிப்புடன் அகல்கிறாள் பேத்தி

Thursday, August 18, 2022

கேட்டதும் கிடைத்ததும்..


முந்நூறு கிராம் சர்க்கரைப்பொங்கலும்
மூன்று முழம் பூவும் படைத்து
வேண்டிநிற்கிறான் பக்தன்
மூன்றுலட்ச ரூபாய் லோன் பாசாக
தொகையைக்கேட்டு திகைத்த தெய்வம்
காணிக்கையை யோசிக்கவாரம்பித்தது
சுற்றுப்பட்டு நகரத்துசாமிகள் தம் பெருமையாய்
உருள்பெருந்தேரும் 
பூப்பல்லக்கும் சப்பரமும் கொண்டிருக்க
பின்னிருக்கும் காட்டுச்சுனையில்
தானோர் தெப்பஉலாவேனும் காண வேண்டாமா?
தெய்வத்தின் பட்டியல் நீண்டுசென்ற பொழுதில்
இடைமறித்தது பக்தையின் குரல்
"லோனு பாசானாத்தான்
புள்ளைக்கி மால பூக்கும்
கருணை காட்டப்பா"
ஆசையும் பரிவும்
துலாக்கோலில் நின்றாட
சட்டென பரிவின் கனத்தைக் கூட்டியது தெய்வம்
"பெண்ணடி பாவத்தைக் கையேந்தி
இன்னும் தும்பம்படவா இந்தக் காட்டுக்குள்ள?
பல்லக்கும் தெப்பமும் 
பசையுள்ள பக்தனைச் செய்ய வைப்போம்"
சிரசில் சூட்டிய மலரை வீழ்த்தி
நற்சகுனம் காட்டிய தெய்வத்திடம்
காணிக்கையாய்
கூரை போட்டுத் தருவதாய் வாக்களித்த பக்தனை
வாஞ்சையுடன் நோக்குகிறது
பழம்பட்டைப் போர்த்தி கூதலில் 
நடுங்கியமர்ந்திருக்கும் தெய்வம்.

நல்லாச்சி - 33


வெகுநாளாய் ஆடிக்கொண்டிருந்த
நல்லாச்சியின் பல்லொன்று 
விழுந்துவிட்டதாம்
சோகத்தில் ஆழ்ந்திருக்கிறாள் பேத்தி
பல்லைத்தொலைத்த நல்லாச்சி
பண்டம் சாப்பிடுவதெப்படி
கரும்பின் தோலுரித்துத் தனக்குத்
தருவதுதானெப்படி
பேத்தியின் அவஸ்தை கண்டு
நகையடக்கவியலா நல்லாச்சி
வயதானால் பல்லும் சொல்லும்
நலிவது இயல்பே எனப்புகன்றும்
ஆச்சியின் முதுமை
ஏற்பில்லை பேத்திக்கு
தொலைந்ததைத் திரும்பப்பெற
உபாயங்கள் தேடுகிறாள்
சாணகத்தில் பொதிந்து கூரை மேல் வீசுவது முதல்
டூத்ஃபெய்ரியிடம் வேண்டுவது வரை
சின்னஞ்சிறு மூளைக்குள்
மொட்டு விடுகின்றன உபாயங்கள்
சட்டெனப் பூக்கிறது வழியொன்று
இனி
அத்தனைப் பற்களும் உதிர்ந்தாலும் கவலையில்லை
நவீன டூத்ஃபெய்ரியாம் பல்மருத்துவர்
செவ்வனே கட்டித்தருவார் பொய்ப்பற்களை
இறுதிவரை புன்னகைஅரசியாய்
கோலோச்சலாம் நல்லாச்சி
பெருமிதம் மீற அணைத்துக்கொள்கிறாள் அரசி
புன்னகை இளவரசியை.

Wednesday, May 18, 2022

மிஞ்சும் சூன்யம்


கடலென விரிந்து பரந்திருக்கும்
பகலின் அலைகள்
ஒதுக்கிச்சேர்க்கும் அனுபவங்களின்
சிடுக்குகளிடையே மிதந்தலையும்
சிப்பிகளுக்கும் மற்றவற்றுக்குமூடே
விதியொளித்திருக்கும்
மின்னுஞ் சிறுமுத்து
ஏற்புடைத்தில்லை இது எமக்கு
பென்னம்பெரிதே எமக்குத் தகுதியென
அலசியலசி வீசியதில்
ஔியிழந்தனைத்தும் அகன்றுவிட
மிஞ்சிய இருட்சாகரத்தின் அமைதியில்
ஆதிமுத்து வந்தமர்கிறது
கிடைத்ததைத் தொலைத்து
கிட்டாததற்காய் ஏங்கி
பாழும் கனவுவெளியில் 
அங்கிங்கெனாதபடி தேடியலைந்த இறுதியில்
மிஞ்சுகிறது
ஒரு பிடி சூன்யம்.

Saturday, May 7, 2022

பெருங்கருணை


தேர்ந்த நடனமங்கையின் நளினத்தோடு
இடுப்பை அசைத்தசைத்து
நீந்திக்கொண்டிருக்கிறது அம்மீன்
தொட்டுப்பிடிச்சு விளையாடிய
சகமீன்கள் ஒளிந்து கொண்டுவிட
தேடித் தட்டழிகிறது
சொப்பு வாய் திறந்து கூவியழைக்கிறது
ஆள் நிழல் கண்டதும் ஆழத்தில் மறைகிறது
மீனின் தவிப்பை 
தப்பர்த்தம் கொண்ட மரம்
காக்கும் நோக்கில்
இலைகளை உதிர்க்கிறது ஒவ்வொன்றாய்
மிதக்கும் இலையே கேடயமாய்
ஒளிந்து கொள்கிறது பயந்த சிறுமீன்
பதறும் மரத்திடம்
ஒன்று சொல்ல வாய் திறந்து
பின்
ஏதும் சொல்லாமல் இரை மேய்கின்றன
அத்தனை மீன்களும்.

Friday, May 6, 2022

கோமாளிப்புன்னகை


சர்க்கஸ் கோமாளிகள் நகைக்கிறார்கள்
அது அவர்கள் உலகம்
வலியில்லா வேதனையில்லா அழுகையில்லா
அபூர்வ உலகம் அவர்களுடையது
கேலி செய்வோரையும் வாய்மூட வைக்கும்
சுய எள்ளல்வாதிகள் அவர்கள்
விழுவதையெண்ணிப் பயந்தால்
பறப்பதெப்போது 
என்ற சித்தாந்த வாதிகள்

சொந்த ஊரில் மரமேறிப்பிழைத்தவன்தான்
இதோ
அடிக்கொரு தரம் தடுக்கிவிழுந்து 
அழுது ஊரைக்கூட்டுகிறான்
கிணற்று உள்நீச்சலில் கைதேர்ந்தவன்தான்
ஓரடி உயரத்திற்கே 
பாசாங்காய்ப் பயப்படுகிறான்
தோட்டாவாய் 
திணித்துக்கொண்ட பீரங்கி துப்பியதும்
அலறிப்பறக்கும் அவனைக்கண்டு
வெடித்துச்சிரிக்கிறது அரங்கம்
முகப்பூச்சுதான் 
எத்தனை வசதியானதாக இருக்கிறது
உணர்வுகளையெல்லாம் மறைக்க
வயது வேறுபாடின்றி 
அத்தனை பேரும் ரசிக்கும் அவன்மேல்
பசிக்குப் பெருங்காதல் 
அவனுக்கோ கலைமேல்

தன்னை வருத்திப் 
பிறரை மகிழ்விக்கும் அவன்
ஓர் நாள்
துடித்துத் துவண்டதையும் 
மெதுவாய் அடங்கியதையும்
கேளிக்கையாகவே எண்ணி
இவ்வுலகம்
கை தட்டிக்கொண்டிருக்கிறது உரக்க
பிறர் நகைக்க தானழுதவன் இதழ்களில்
இன்று
உறைந்து நிற்கிறது புன்னகை.

நல்லாச்சி - 32


வடாமும் வற்றலும் காயுமிடத்தில்
மொய்க்கும் காகங்களை
கட்டுப்படுத்த முயல்கிறாள் நல்லாச்சி
அவற்றுக்கொரு பங்கு
கொடுத்த பின்னும்
மேலுங்கேட்பதாக ஆவலாதி சொன்னவள்
அவற்றை விரட்டவென
நூறு உபாயங்களைக் கைக்கொள்கிறாள்
எல்லாக்கூத்தையும் கண்ட பேத்தி
சந்தேகம் கேட்கிறாள்
சில தினங்களில்
தலைவாழை விருந்திட்டு
முன்னோரென மதித்து
வாவென்கிறீர்கள்
இன்னும் சில தினங்களிலோ
வராதே போவென்கிறீர்கள்
குழம்பித்தவிக்கும் காகங்கள்
தன் பசியன்றி வேறெது அறியும்
என்ற பேத்தி
கைப்பிடி அரிசியை இறைக்கிறாள்
காகங்களெல்லாம் அத்திசை செல்கின்றன
பேத்தியை உச்சிநுகர்கிறாள் நல்லாச்சி.

Sunday, May 1, 2022

நல்லாச்சி - 31


அட்டகாசம் செய்கின்றன குரங்குகள்
உன் போல் என
அலுத்தபடி வந்தாள் நல்லாச்சி
உண்ணாமல் தின்னாமல்
ஒரு வயிற்றுக்குள்ளும் போகாமல்
புழக்கடைத்தோட்டத்தில்
சூறைபடுகின்றனவாம் அத்தனையும்
பழிப்புக்காட்டி ஓடி விடும்
பல்லைக்காட்டி உறுமும்
மோனநிலையில் அமர்ந்திருக்கும் மந்திகள்
கூட்டத்திடையே
ஆத்தாளும் பேத்தியாளும் இருக்கக்கூடுமோ
என யோசனையிலாழ்கிறாள் பேத்தி
கவனம் சிதறிய கணத்தில்
கைக்கொண்ட நீர்ச்சொம்பைக்
கவர்ந்திழுக்கிறது
தாகித்திருந்த ஒரு குட்டி
இரு குரங்குகளும் போட்டியிட்டால்
என் செய்வேன் நானென
போலியாய் அபிநயிக்கிறாள் நல்லாச்சி
சிணுங்குகிறாள் பேத்தி சங்கீதமாய்.

Saturday, April 30, 2022

பிள்ளைத்தனம்..

ஆனாலும் உனக்குக் கல்மனசுதான்
விசும்பியது என் யானை
என் மேல் பாசமற்றுப்போனாய்
என கூசாமல் குற்றமுரைத்தது
வெள்ளிக்கொலுசுகளும் கழுத்து மணிகளும்
சப்திக்க
குலுங்கிக்குலுங்கி அழுதது
வராத கண்ணீரையும் துளிர்க்காத வியர்வையையும்
ஒற்றிக்கொண்டு
கலையாத முகப்பூச்சைக்
கவனத்துடன் நோக்கிக்கொண்டது
என்னதான் பிரச்சினையுனக்கு?
சற்றே எரிச்சல் எட்டிப்பார்த்தது எனக்குள்
கேளடா மானிடா..
உன் வீட்டில் 
பூனைக்கென தனி வாயில்
உன் படுக்கையில் அதற்கோர் இடம்
அல்லும் பகலும் கைகளில் சுமக்கிறாய்
எனக்கென ஏது?
என்னை ஒருநாளும் சுமந்ததில்லை நீ
கட்டில் இல்லாவிடில் போகிறது
ஒரு தொட்டிலாவது தரலாம் நீ
மீசை முறுக்கித்திரியும்
உன் பூனையின் முன்
மனமொடுங்கி வாழாமல்
மானத்துடன் வாழ விடு என்றது
உருவத்தால் யானையாயிருந்த அப்பூனை.

சின்ன மூக்குத்தி.


ஸ்ரீதேவி மூக்குத்தியில் ஆரம்பித்து
எட்டுக்கல் பேசரி வரை
விதவிதமாய் ஆசைப்பட்டு
கடைசியில்
ஒற்றைக்கல் மூக்குத்தியில் நின்றது
அவர்களது கனவு

மகள்களின் எதிர்பார்ப்பைத்
தள்ளித்தான் போட முடிந்தது
கையாலாகாத பெற்றோரால்
நீலமும் பச்சையும் சிவப்புமாய்
கல் பதித்த
வண்ணக்கனவுகளில் மிதந்தவர்களை
அம்பாளாய் மீனாட்சியாய் 
தன்னை உருவகித்துக்கொண்டவர்களை
தங்கமொட்டு மூக்குத்திகளாய் அவதரித்த
அம்மாவின் தேய்ந்த மோதிரம்
தரைக்கு அழைத்து வந்தது

ஒரு சுபயோக நன்னாளில் 
அவை
அக்காள் குழந்தையின் காதுகளை அலங்கரித்தபோது
ஏழையாய்ப்பிறந்த வெம்பலுடன்
இரகசியமாய்த் துடைத்தெறிந்தனர் அவர்கள்
கண்ணீருடன் கனவுகளையும்

Thursday, April 28, 2022

பாவனைகள்..


சற்றே இடறி விழுந்தான்
அடிபட்ட பாவனையில் கோணியது முகம்
வலித்திருக்க வேண்டும்
ஆதரவாய் 
தன் பூனையை அணைத்துக்கொண்டான்
முகத்தோடு முகம் வைத்துக்
கொஞ்சியது அதுவும்
ஆறுதலாய் ம்யாவியது
தோளுறங்கித் தேற்றியது
கூரிய மீன்முள் பற்களைக்காட்டி
நீண்ட கொட்டாவி விட்டபின்
மடியிலிருந்து குதித்திறங்கி
எனக்கொன்றும் ஆகிவிடவில்லை பார்
என்ற பாவனையில் 
தோளை நிமிர்த்திக்கொண்டு
நீளமாய் நடந்து போனது
ஆழுறக்கத்தில் வீழுமுன்
கடைசியாய் கனவிலென
அவன் நினைவுக்கு வந்தது
இடறி விட்ட அதன் வால். 

Friday, April 22, 2022

எல்லாம் மாயை..

நீண்டதொரு புகார்ப்பட்டியலுடன்
காத்திருந்தது அவன் நாய்
வெளியே அடிக்கடி கூட்டிச்செல்லாததிலிருந்து
கழுத்துப் பட்டையின் நிறம் 
பிடிக்கவில்லை என்பது வரை
வாசித்து முடித்தபின்
இப்போதெல்லாம்
பக்கத்து வீட்டுப்பூனையின் மேல்தான்
பாசம் பொங்குகிறதுனக்கு
எனக்கேவியது
நாய்களைப்போலொரு
பாவப்பட்ட ஜென்மம் ஏதுண்டு?
நானொன்றும் 
முழுநேரக் குற்றவாளியல்ல
என் பற்களும் நகங்களுமே குற்றவாளிகளன்றி
நானெப்போதுமில்லை
பழிகளைச்சுமந்தே
வளைந்த என் முதுகு
இற்றுவிடும் படி இன்னும் ஏற்றாதே
என்றெல்லாம் பிலாக்கணம் வைத்தபின்
கைக்குள் சிறை வைத்திருந்த 
சிட்டுக்குருவியுடன்
மரண விளையாட்டைத் தொடர்ந்தது
அது 
கீறிக்கிழித்து ஒளித்த சட்டையைத் 
தேடிக்கொண்டிருக்கிறான் அவன்.

இவ்விடம் நல்ல பூனை கிடைக்கும்


என் பூனை இரக்கசுபாவி
உறிப்பாலைத் திருடுவதில்லை
கறிச்சட்டிகளை உருட்டுவதில்லை
என் மதியஉறக்கம் கலையாவண்ணம்
காலடியில் சுருண்டு கொள்ளும்
என்னவொன்று
தொட்டியிலிருக்கும் மீன்கள்தான்
அவ்வப்போது
காணாமற் போய்விடுகின்றன
மீசை வைத்த மீனை
என் பூனை
குரோதத்துடன் பார்த்தபோதே
புரிந்திருக்க வேண்டுமெனக்கு
என் கண்ணிலிருந்து அதன் நகங்கள்
ரத்தம் வழியவிட்டபோதும்
நானே குற்றவாளியென ஆவதில்
அதற்குப் பெரும்மகிழ்ச்சி
என் பூனை
உடனடியாகக் கொல்லாது
ஏனெனில்
அது இரக்கசுபாவி.

Friday, April 15, 2022

இவற்றுக்காகவும்தான்..


செய்திகள் கடத்தும் தூதுவராய்
வகுப்பறையிலும்,
கடிதம் சுமக்கும் தபால்காரராய்
காதலரிடையேயும்,
வகுப்புக்குச்செல்லாத மாணவன் உறங்கும்
பசும்புல்வெளியில்
தலையணையாகவும்

பட்டியல் கணக்கில் சிலவற்றைக் கூட்டவும்
அலமாரிகளை நிரப்பும்பொருட்டும்
அடுக்கி வைத்து
அழகு பார்க்கவும்
வாசிப்பின் ஆழ அகலங்களைப்
பறை சாற்றிக்கொள்ளவும்
மட்டுமன்றி,
வெப்பமிகு மதிய வேளைகளின்
காத்திருப்புப் பொழுதுகளிலும்
கை கொடுக்கின்றன
புத்தகங்கள்
விசிறிக்கொள்வதற்காகவும்.

நல்லாச்சி - 30


பழங்கள் பலகாரங்கள் படையலிட்டு
பூவும் தூபமும் கமழ
பூஜித்துக்கொண்டிருக்கிறாள் நல்லாச்சி
கிண்கிணிச் சதங்கை குலுங்க
கை பூட்டிய வளையல்கள் பேச
பட்டும் பூவும் சாற்றி
கைகூப்பி பிரார்த்தித்து நிற்கிறது
பேத்தியாய் வந்த தெய்வம்
ஒரு கண் படைத்தவன்மேல்
மனசெல்லாம் படையல்மேல்
பாயசமும் நல்திராட்சையும்
கற்கண்டும் செவ்வாழையும்
வேண்டுவன எல்லாம் நீ கொள்
வடைகளை மட்டும் எனக்கே தா.

Wednesday, April 13, 2022

போலச்செய்தல்..


தனக்குப் போட்டியாக
கல்லைக்கொத்திக்கொண்டிருப்பவனை 
முறைத்து விட்டு
கொத்துவதைத்தொடர்கிறது 
மரங்கொத்தி
சற்று நிதானித்துவிட்டு
கொத்துவதைத் தொடர்கிறான் சிற்பி
கல்லைக் குடைந்து
புழுபூச்சிகள் தேடுகிறான் அவன்
மரத்திலோர் சிற்பத்தை
வடித்து வைத்திருக்கிறது மரங்கொத்தி
கண்ணொடு கண் நோக்கியபின்
மௌனமாய்ப்பிரிகின்றனர் இருவரும்.

வாழ்க ..


என்னைப்பற்றிப் பேசுவதென்றால்
எல்லா நாக்குகளும்
புரள்கின்றன
என்னைப் பற்றிக் கேட்பதென்றால்
எல்லாக்காதுகளும்
திறந்து கொள்கின்றன
ஆன்றோர்நாள்
ஒரு மன்றாட்டுடன்
உங்கள் மன்றில் வந்து நின்றபோது
உங்கள் ஐம்புலன்களும்
இன்றுபோல் திறந்திருக்கவில்லை
நான் வந்துசென்ற பாதை
தூர்க்கப்பட்டு
இனியெப்போதும் அணுகாவண்ணம்
அகழிகள் அமைந்தபோது
அத்தனையையும் சிரித்துக்கடந்தேன்
சூரியப்புயலாய்ச் சினந்தெழுந்து சாம்பலாக்கி
நீறு பூசி நிற்குமென்னைக் குறித்து
ஓராயிரம் வார்த்தைகளுண்டு உங்களிடம்
அன்று பசித்து வந்தபோது
முகம் திரிந்து நோக்கிய நீங்கள்தான்
இன்று செத்தபின் பாலூற்றும் நீங்களும்
கையறு நிலையென்பதும்
ஓர் தருணமே
கடந்துவிட்டால் 
நானே சக்தியின் மாஊற்று
விஸ்வரூபம் எடுத்த என்முன்
தொழுத கையும் துடிக்கும் உதடுகளுமாய்
முழுவுடல் கிடத்தி வணங்கும்
உங்களுக்குச்சொல்ல ஏதுமில்லை என்னிடம்
வாழ்க எம்மக்காள்.

Thursday, April 7, 2022

தீராப்பசி.


துக்கம்
ஒரு விருந்தாளியைப்போல்
வந்தமர்கிறது
நீங்கள்
அதை பலமாக உபசரிக்கிறீர்கள்
பல்வேறு விதமாய்ப் போஷிக்கிறீர்கள்
அதற்கு எவ்விதக் குறையும் ஏற்படாவண்ணம்
அதன்
பழம்பெருமை பேசி வளர்க்கிறீர்கள்
உங்களிடமே தக்க வைத்துக்கொள்கிறீர்கள்
அணுவளவாய் நுழைந்தது 
மெல்ல மெல்ல
அத்தனையையும் ஆக்கிரமித்துக்
கபளீகரம் செய்கிறது
நீங்கள் உட்பட
பின் எண்ணத்துவங்குகிறது
நீங்கள் எத்தனையாவதென.

அம்மாவின் தம்ளர்.


தம்ளரின் பக்கவாட்டில்
நெருடுகிறது
செதுக்கப்பட்டிருக்கும் அம்மாவின் பெயர்
விரலால் நீவுகையில்
அம்மாவின் 
பழம்புடவை வாசம்
சிலருடன் ஆடை அணிகலன்களாய்
சிலருடன் புகைப்படமாய் 
சிலருடன் வெற்று நினைவுகளாய்
இருக்கும் அம்மா
தம்ளராய்த்தான்
வாசம் செய்கிறாள் எங்களுடன்
ஆறி ஆடை படர்ந்திருக்கும்
ஏதோவொரு திரவம்
கொண்ட தம்ளரை
நடுங்கிய கைகளில் ஏந்தி
கொல்லைப் படிக்கட்டிலமரும்போது
நுரைத்துச் சுடுகிறது காப்பி
அது
அம்மா டம்ளர்
கண்மூடி லயித்து அருந்துவதும்
அவள் கொடுத்ததுதான்.

Thursday, March 31, 2022

நல்லாச்சி - 29


பொலிந்து நிற்கிறது
பொற்கொன்றை மரம்
தொட்டடுத்தொரு மஞ்சாடி மரம்
பொன்னாய்ப் பாவித்து பூவை
நிறுத்து விளையாடுகிறாள் பேத்தி
கண்ணாடித்துண்டுகளே வைரவைடூரியங்கள்
கொற்கை முத்துகளுக்கோ யாதொரு பஞ்சமுமில்லை
போணி செய்ய வரும் நல்லாச்சி
பேத்தியின் கோலங்கண்டு
புன்னகை உறைய நிற்கிறாள்
இழுகிய மகரந்தப்பொற்பொடியால் வதனம் துலங்க
செவியணிந்த செம்பருத்தி மொட்டுகள்
லோலாக்காய் ஆட
செம்பூவிதழ் நுதலில் செந்தூரமாய்த் துலங்க
அமர்ந்திருக்கிறாள்
குளிர்ந்த கொற்றவையாய் பேத்தி
கொன்றை தூவிய பிரியத்தின் சில இதழ்கள்
படிகின்றன பேத்தியின் தலையில்
சொடக்கிட்டு கண்ணேறு கழிக்கிறாள் நல்லாச்சி

Wednesday, March 16, 2022

நல்லாச்சி - 28


அப்படி என்னதானிருக்கிறது?
குடைந்து 
ஆராய்ந்து கொண்டிருக்கிறாள் பேத்தி
பொடி டப்பியும் வதங்கிய வெற்றிலையும்
தாத்தாவின் வெற்றிலைச்செல்லத்தில்
சிற்சில ரெவின்யூ ஸ்டாம்புகளும்
பிள்ளைகளின் போட்டோவும்
அப்பாவின் பர்ஸில்
சித்தப்பா அலமாரியின் 
ரகசிய அறையில்
சிறையிருக்கும் சிறு டப்பாவில்
காய்ந்த ரோஜாவும் பஸ் டிக்கெட்டுகள் ஒன்றிரண்டும்
அம்மாவின் கைப்பையை அலசவோ
பாதாளக்கரண்டி வேண்டும்
இறுதி இலக்கு
நல்லாச்சியின் அஞ்சறைப்பெட்டி
பேத்தி தொடுமுன்
பாய்ந்து வந்து பத்திரப்படுத்தும் நல்லாச்சியின் 
"ங்ஙேரு.. ஓடிரு"
சிரிப்பு பொதிந்த அதட்டலுக்கு
வாய் பொத்தி கிளுகிளுவெனக் குலுங்குகிறாள்
ரகசியம் தெரிந்த பேத்தி.

நல்லாச்சி - 27

..
உச்சியில் கிருஷ்ணர் கொண்டை
சுற்றப்பட்ட பூச்சரம்
காகத்தின் இறகாய் புருவத்தீற்றல்
குருவிக்கால் மையெழுதி
கன்னத்தில் திருஷ்டிப்பொட்டிட்டு
காலில் கச்சப்புரம் அணிவிக்கிறாள் நல்லாச்சி
திட்டுத்திட்டாய் பவுடர் இழுகியிருந்தால்தானென்ன
பட்டுப்பாவாடை குலுங்க
வளைய வரும் பேத்தி ஜொலிக்கிறாள்
அத்தனை நட்சத்திரங்களிடையே
வீற்றிருக்கும் பாலாம்பிகையாய்.

நல்லாச்சி - 26


விடிகாலை
கோழிகூவலில் ஆரம்பித்து
அந்தியில் மலரும் 
நாலுமணிப்பூ வரைக்கும்
கச்சிதமாய் நேரம் சொல்லும் நல்லாச்சி
முற்பகலில் வரும் சிறுகுருவிக்கு
பதினொருமணிக் குருவியென்றே
பெயரிட்டிருக்கிறாள்
அவள் கடிகாரத்தை
உலைத்துப்போடும் மணிப்பயல் மட்டும்
வாலாட்டிக்கொண்டு
அதிகாரமாக வந்தமர்வான் இருளில்
ஒன்பதுக்கு மேல் பதினொன்றுக்ககம்
கடிகாரம் ஏதுமின்றியே நேரமுணரும் நல்லாச்சியிடம்
தனக்கும் அத்திறன் உண்டென மொழியும் பேத்தி
குறும்புடன் அடுக்குகிறாள் ஒவ்வொன்றாய்
அவளது கடிகாரத்தின் அத்தனை மணித்துளிகளுமே
சுற்றிச்சுழல்வதாக இருக்கின்றன
நல்லாச்சியை மையமாய்க்கொண்டு.

Monday, February 7, 2022

நல்லாச்சி - 25


பாப்பா பேருக்கொரு
சீட்டெடுத்துப்போடு ஆத்தா மீனாச்சி
சீட்டை உருவியெறிந்துவிட்டு
நெல்மணிகள் அணைக்காத பசி நெருப்புடன்
கூண்டுக்குள் திரும்பி முடங்குகிறது பசுங்கிளி
சோகமாகிறாள் நல்லாச்சி மடியமர்ந்திருக்கும் பேத்தி
நெல்மணிகளை ஈந்துவிட்டு
காற்றைப் புசிப்பவன்
சீட்டுகளை மறுபடியும் அடுக்கத்துவங்குகிறான்
மீனாச்சிக்கு விடுதலையெப்போ
அவ சுதந்திரமாய்ப் பறப்பதுதானெப்போ
வேண்டி வருந்தும் பேத்தியை ஏறிட்டு
அடித்தொண்டையில் அழுகிறது கிளி
கதவென்னவோ திறந்துதானிருக்கிறது.

Thursday, February 3, 2022

நல்லாச்சி - 24


அரிசி மரம் காண 
ஆசை கொண்ட பேத்திக்கு
நெல் விளையும் வயலைக் காட்டுகிறாள் நல்லாச்சி
கூடவே கற்பிக்கிறாள்
அது
அரிசி மரமல்ல செடியுமல்ல
நெற்பயிரென இயம்புவதே சரியென
ஒவ்வொரு நெல்லாய்த் தோலுரித்து
அரிசியெடுக்கும் பணிக்கஷ்டத்திற்காய்ப் 
பரிதாபப்படும் பேத்திக்கு
ஆதியோடந்தமாய் விளக்கிச்சொல்லி
கிளைக்கேள்விகளுக்கெல்லாம்
ஊக்கப்படுத்தி
நா வறண்டு நிற்கும் நல்லாச்சியை நோக்கிப்
பாய்ந்து வருகிறது இன்னொரு கேள்விக்கணை
பச்சரிசிப் பயிரெது
புழுங்கலரிசிப் பயிரெது
காட்டுக இவ்வயலில் என..

Wednesday, January 26, 2022

நல்லாச்சி - 23

ஆத்திரமும் அழுகையுமாய்
அமர்ந்திருக்கும் பேத்தியிடம்
காரணம் வினவுகிறாள் நல்லாச்சி
உடற்தோற்றத்தையும் நிறத்தையும் 
குறிச்சொற்களாய்க்கொண்டு
உருவ கேலி செய்வதில் பெருமை கொளும் நட்பொன்று
வெள்ளாட்டு மந்தையில் செம்மறியாடாய் 
ஊடுருவியிருப்பதுவும்
பேசித்தீர்க்கவெண்ணியது தடம் மாறி
பேசிப்பேசியே 
விரோதமாய் முடிந்ததுவும்
கதைகதையாய் கொட்டப்பட்டதில்
கவலை கொள்கிறாள் நல்லாச்சி
விருட்சமாகுமுன் அழிக்கப்படவேண்டியது
அப்புத்தியில் முளைத்திருக்கும் பிஞ்சு முள்மரமேயன்றி
நட்பல்ல
என்னருமை கருநாவற்பழமே
நச்சை நீக்கிக்கொள்ள 
நட்புக்கு மேலும் உறுதுணையாயிருங்களென
பேத்தியை மேலும் இறுக்கிக்கொள்கிறாள் நல்லாச்சி
கன்னம் குழிய சிரிக்கிறது சிறுமலர்.

நல்லாச்சி -22


பசிக்கும்ல
பேத்திக்கும்
கண்ணாடித்தொட்டி மீனுக்கும்
அவரவர் உணவைப்
பரிமாறிச்செல்கிறாள் நல்லாச்சி
வெளிப்புறத்தில்
பேத்தி விரல் பதித்தெடுக்கும் இடமெல்லாம்
ஓடோடி வந்து
வாயைக் குவித்துக்குவித்து 
முத்துகிறதொரு சிறுமீன்
அதற்கும் அவளுக்குமான 
சிறுவிளையாட்டின் போது
தொட்டிச்சுவரில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது
அன்பின் முகவரி
மனம் நிறைவதே
எல்லாம் நிறைந்தாற்போலிருக்கிறது
இருவருக்கும்.