Pages

Wednesday, April 13, 2022

வாழ்க ..


என்னைப்பற்றிப் பேசுவதென்றால்
எல்லா நாக்குகளும்
புரள்கின்றன
என்னைப் பற்றிக் கேட்பதென்றால்
எல்லாக்காதுகளும்
திறந்து கொள்கின்றன
ஆன்றோர்நாள்
ஒரு மன்றாட்டுடன்
உங்கள் மன்றில் வந்து நின்றபோது
உங்கள் ஐம்புலன்களும்
இன்றுபோல் திறந்திருக்கவில்லை
நான் வந்துசென்ற பாதை
தூர்க்கப்பட்டு
இனியெப்போதும் அணுகாவண்ணம்
அகழிகள் அமைந்தபோது
அத்தனையையும் சிரித்துக்கடந்தேன்
சூரியப்புயலாய்ச் சினந்தெழுந்து சாம்பலாக்கி
நீறு பூசி நிற்குமென்னைக் குறித்து
ஓராயிரம் வார்த்தைகளுண்டு உங்களிடம்
அன்று பசித்து வந்தபோது
முகம் திரிந்து நோக்கிய நீங்கள்தான்
இன்று செத்தபின் பாலூற்றும் நீங்களும்
கையறு நிலையென்பதும்
ஓர் தருணமே
கடந்துவிட்டால் 
நானே சக்தியின் மாஊற்று
விஸ்வரூபம் எடுத்த என்முன்
தொழுத கையும் துடிக்கும் உதடுகளுமாய்
முழுவுடல் கிடத்தி வணங்கும்
உங்களுக்குச்சொல்ல ஏதுமில்லை என்னிடம்
வாழ்க எம்மக்காள்.

0 comments: