Pages

Wednesday, November 23, 2011

எவரேனும்..


விருந்தினர் வரவைக்
கரைந்தறிவிக்கும் காக்கை
தானே ஒரு
விருந்தினரானது;
அப்பாவின் திதியன்று.. 
அவரே வந்ததாய் எண்ணி
பரிமாறிக் கொண்டிருக்கிறாள் அம்மா,
அப்பாவுக்குப் பிடித்ததையெல்லாம்..
தலை சாய்த்து உண்ணும்
காகத்தின் பார்வை
மின்னலாய்ச் சொடுக்கிப் போகிறது
மின்கம்பத்தில் முன் தினம்
கருகி வீழ்ந்த காகத்தின் நினைவையும்
கருகாத கேள்வியொன்றையும்.. 
பகிர்ந்துண்ணவும் பாசம் கொள்ளவும் மட்டுமன்றி,
பிண்டமிடவும் பித்ருவாய் வரவும்
அவற்றின் உலகிலும்
எவரேனும் இருக்கக் கூடுமோ?

டிஸ்கி: வல்லமையில் எழுதியதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன் :-)


Wednesday, November 9, 2011

மற்றுமோர் அவதாரம்..


படம் கொடுத்து உதவிய இணையமே உனக்கு நன்றி..
தொடர்ந்த வாசிப்பினால்
ஓரம் கிழிந்த புத்தகங்கள்
மேலும் கிழிக்கப்பட்டன
பொட்டலம் கட்டப்படவென..
இதயத்தின் அருகிலோ அல்லது
ஏதோ ஓர் மூலையிலோ,
மாறுபடவும் கூடும்,
அதன் முக்கியத்துவமும் இருப்பிடமும்
உள்ளடக்கத்தினைப் பொறுத்து..
கடலையோ வைரமோ
அல்லது        
சுமக்க நேரிட்ட எண்ணக் குவியல்களோ;
ஏதோவொன்றின்
உபயோகம் தீர்ந்த பின்
கசக்கி வீசப்பட்டாலும்
மேலும்
உபயோகப் படவெனக் காத்திருக்கின்றன,
கோணியும் பசியும்
சுமந்தலையும்
இருகால் மற்றும் நாற்கால் உயிர்களுக்காய்,
குப்பையென அவதாரமெடுத்து..


டிஸ்கி: வல்லமையில் எழுதியதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்..