Pages

Saturday, March 31, 2012

வேரிலும் பூக்கலாம் வசந்தங்கள்..

படம் இணையத்தில் சுட்டது :-)
பெருவெளியெங்கும் பரந்து விரிந்திருந்த
கூட்டுக்குடும்ப விழுதுகள்
அற்றும் இற்றும் போன பின்
தனிமை கொன்று கொண்டிருக்கும்
அந்த ஒற்றை மரத்தில்
மிச்சமிருக்கிறது பசுமை.. இன்னும்,
மனித நேயத்தைப் போலவே.

சென்றவர்களெல்லாம்
மீண்டும் வரக்கூடுமென்ற
மீதமிருந்த நம்பிக்கையுடன்
ஆகாயத்துடன் உரையாடியபடி
மேகங்களை எதிர் நோக்கும் பொழுதுகளிலும்
ஊமையாகி விடாமல் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது
பறவைகளின் தாலாட்டுக்குரல்,
இன்னும் வெட்டப்படாத கிளைகளில்.

தனிமைக்கடத்தியாய்
ஏகாந்தம் கலைத்த தென்றலோ
வனமெங்கும் பூச்சொரிகிறது
ஏக்கம் சுமந்த வேர்களில்..
கானல் நீருக்காய்க் காத்திருந்த ஏக்கத்தில்
வேரடி வசந்தத்தை மறந்ததையெண்ணி
நெகிழ்ந்து சிரிக்கிறது
ஒற்றை மரம்.




டிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்.

Tuesday, March 20, 2012

பிழைத்துக் கிடக்கிறோம்..

என்னோட காமிராவுக்கு நன்றி சொல்லிக்கிறேன்
மனிதம் விற்று நடத்திய
சுயநல வியாபாரத்தில்
மிஞ்சியவை
மனிதனின் கணக்கில் லாபமாகவும்
இயற்கையின் கணக்கில் நட்டமாகவும்
வரவு வைக்கப்பட்டு விட.

கதிர்வீச்சு அழித்திட்ட
எங்கள் குழந்தைகளின் நினைவுகளைச்
சுமந்து கொண்டு..
சோலைகளிலும் வீட்டு முற்றங்களிலும்
விட்டு விடுதலையாய்த்திரிந்த
நாட்களை அசை போட்டபடி
அலைந்து திரிகின்றோம் அங்குமிங்கும்
பகடைகளாய்,
நீங்கள் ஆடும் சதுரங்கத்தில்..

சொந்த மண்ணிலேயே அகதிகளான
எங்கள் அபயக்குரல்கள்
எதிரொலிக்க வழியின்றி
என் அலகினுள்ளேயே
உங்கள் செவிகளை எட்டாவண்ணம்.
உறைந்து போய் விட

எங்களுக்கான வாழ்வாதாரங்கள்
கலைக்கப்பட்டு விட்ட பின்னும்
பிழைத்துக் கிடக்கிறோம்
ஒரு பிடி உணவிலும் ஒரு துளித் தண்ணீரிலும்
பச்சையம் மறந்த
இரும்புக்கிளைகளிலுமாக..

டிஸ்கி: குருவிகள் தினத்திற்காக வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்.