Pages

Wednesday, August 25, 2010

கணக்குகள் தப்பலாம்....

விட்டுவிட்டு வந்தபின்னும்
வாசலில்
வந்து நிற்கும்
நாய்க்குட்டியாய்;

சென்று நிற்கிறான்
வாழ்ந்துகெட்டவன்,
தனதாய் இருந்த வீட்டில்;
தினம்,
கனவில்.

*************************

தொடங்கிய புள்ளியிலேயே
நிற்கிறது காலம்:

அழித்தழித்து
எழுதியபின்னும்
சரியாகவே தெரிகின்றன
தப்பாய்ப்போன மனக்கணக்குகள்;

இருளிலும், ஒளியிலும்
பறந்து திரிந்த விடைகளை
இனம்கண்டு சேமித்தபின்;
களைப்பு
சொட்டும்போதுதான்
தெரிகிறது:

தொடங்கியபுள்ளியிலேயே
நிற்கிறது காலம்.


Wednesday, August 18, 2010

முடிவற்ற போராட்டம்...


தூக்கம் தொலைத்த நள்ளிரவின்
நிசப்தமான பின்னணியில்..
அடங்கியெழும் மனஅலைகளில்
மிதந்து சென்றன;
நட்சத்திரங்களின் கிசுகிசுப்புகள்.

இரவின் மௌனங்களுடன்
போட்டி போட்டுக்கொண்டு,
இரைச்சலிட்ட மனதிலிருந்து
வழிந்தோடிய நதி
சங்கமமான கடலின் இடத்தில்,
ஒரு மடியை
நினைத்துப்பார்க்கிறேன்.

கிசுகிசுப்புகள்
இரைச்சலாக கூடியிருக்கும்போது
வெளுத்துக்கொண்டிருக்கிறது வானம்;
ஜன்னலுக்கு வெளியே...