Pages

Saturday, July 1, 2017

வேறேதுமில்லை..

(இணையத்தின் படக்கொடைக்கு நன்றி)


நினைவுகளாய் மட்டுமே வாழ்ந்து
நினைவுகளாகவே இவ்வுலகில் எஞ்சுபவர் மீது
மரணத்தின்
விரல் கூட படிவதில்லை
அவர் மரணித்த பின்னும்
அவரை உயிர்த்தெழச்செய்ய
எங்கோ ஒரு பருப்பொருளில் ஒட்டியிருக்கும்
நினைவுகள் போதும்
ஒரு புகைஓவியம் போல் 
மெல்ல உருக்கொண்டு மீண்டெழும்
அவர்கள்
இதோ நிற்கிறார்கள்
தொட்டு விடும் தூரத்தில்
பிரியமானவர்களின் நினைவுகளில்
நீந்துபவர்களுக்கும்
அந்நினைவுகளின் ஆதாரக்கோட்டில்
வாழ்பவர்களுக்குமிடையேயான
கண் சிமிட்டும் தூரத்தில்
இதோ எங்கோ 
இருக்குமந்த திரிசங்கு சொர்க்கத்திற்கு
போகவும் மீளவும் விருப்பங்கொண்டு
நீண்ட வரிசையின் கடைக்கோடியில் நிற்பது
நீங்களாகவோ நானாகவோ
எதுவாகவோ இருப்பினும்
நினைவுகளின் நதிக்கப்பால் கை நீட்டும் 
படகோட்டிக்குக் கொடுத்திட எதுவுமில்லை
நினைவுகளைத்தவிர.