Pages

Saturday, November 21, 2015

நல்லாச்சி - 4


"இதென்ன?அதென்ன?" வீதிகளை அளந்தபடி
பேத்தி வீசும் கேள்விகளுக்கெல்லாம்
பதிலளித்த நல்லாச்சி
"இது யார்" என்ற கேள்விக்கு
எப்படிப்பதிலளிப்பாள்
தாத்தா கொணர்ந்த 'இன்னொரு' ஆச்சியென்று.
*********************************
"எவ்ளோ பெரிய பூனை!!"
கூண்டுக்குள் உறங்கும் உருவம் கண்டு
இரு கன்னம் பொத்தி
அதிசயித்த பேத்திக்கு
புலியை அறிமுகப்படுத்தினாள் நல்லாச்சி
அன்றிரவு
பால் திருட அவர்கள் வீட்டிற்கு
வந்ததொரு சின்னப்புலி

தொலைக்காட்சிப்பெட்டியில்
மறுநாள்
புள்ளிமானைத் துரத்திக்கொண்டிருந்த அப்பூனைக்கு
ஊட்டச்சத்து கலந்த பாலை ஊட்டியதாய்
குற்றம் சாட்டப்பட்ட நல்லாச்சி
கூண்டுக்குள் நிற்கிறாள்
உறுமும் சாட்டைக்கு உடல் குறுக்கியபடி.
***************
ஏதோவொரு கோபத்தில்
பேத்தி விட்டெறிந்த பொம்மை
எதேச்சையாகவும் மிகச்சரியாகவும்
வந்து விழுந்தது நல்லாச்சியின் கைகளில்.

"அடடே!!.. சரியா காட்ச் பிடிச்சிட்டீங்களே"
கெத்தை விடாமல் பாராட்டியபடி
முளைக்காத மீசையில் ஒட்டாத மண்ணை
தட்டி விட்டுக்கொள்ளும் பேத்தியை
அள்ளிக்கொள்கிறாள் நல்லாச்சி
இன்னொரு பொம்மையாய்.

வால்: வெளியிட்ட அதீதம் மின்னிதழுக்கு நன்றி.