Pages

Tuesday, February 27, 2024

நல்லாச்சி - 51

அவ்வைக்கிழவி நம் கிழவி
அருமை மிகுந்த பழங்கிழவி’
குரலெடுத்துப்பாடிக்கொண்டிருக்கிறாள் பேத்தி
வாய்க்காலில் அளைந்து விளையாடியவாறு
நல்லாச்சியோ
கொழுக்கட்டை மாவிலொரு கண்ணும்
பிடுங்கக்காத்திருக்கும் குரங்கின்மீதொரு கண்ணுமாக
சுள்ளி சேகரித்துக்கொண்டிருக்கிறாள்
அடுப்பெரிக்க

பச்சரிசி மாவும் தேங்காயும் வெல்லமுமாய்
பிணைந்து பிணைந்து பிசைந்துருட்டி
அடுப்பில் வேகும் கூழ்க்கொழுக்கட்டைகள்
வனாந்திரத்தையே நாவூறச்செய்ய
கருவறையில் காத்திருக்கிறாள்
ஓளவையாரம்மன் 
அமுதம் பருக

கொழுக்கட்டை வாசனை தீண்டிச்செல்ல
பேத்தியின்
சின்ன மூளைக்குள்ளொரு சந்தேக மொட்டு விரிகிறது
ஓடோடி வருகிறாள் 
குடைந்த கேள்விகளை
எடுத்து வீசுகிறாள் நல்லாச்சியிடம்
“அதியன் கொடுத்த நெல்லிக்கனி இவளுக்குத்தானே?
சுடாத பழம் போடென்று குமரனிடம் கேட்டவள் இவள்தானே?”
ஆமோதிக்கிறாள் நல்லாச்சி

‘எனில்
சுட்ட கொழுக்கட்டையா? சுடாத கொழுக்கட்டையா?
இச்சமயம் அவள் வேண்டுவது யாதென
எங்ஙனம் நாம் அறியக்கூடும்?
பல்லில்லாப் பாட்டிக்குப் பதமானது ஏது?’
விழிமலர்த்தி வினவும் பேத்திக்கு
பதிலுரைக்கா நல்லாச்சி
ஒளவையாரம்மன் என்ன சொல்வாளோவென
அமர்ந்திருக்கிறாள்
‘அவ்வைக்கிழவி நம் கிழவி
அருமை மிகுந்த பழங்கிழவி’
பாடியவாறே அடுப்புத்தள்ளுகிறாள் பேத்தி.

Monday, May 29, 2023

யானைப்பூச்சி


இத்தனை விகாரமாய்ப் படைத்திருக்க வேண்டாம்
நொந்து கொண்டபடி
ஆலமரத்தினடியில் சயனித்திருந்தது
மந்தையிலிருந்து பிரிந்து வந்துவிட்ட
புத்திளம் யானைக்கன்று

எதற்கென்றே தெரியாமல்
இரு பெரும் காதுகள்
இப்பிறவியில் மெலிய வாய்ப்பில்லா
மஹாகனம் கொண்ட பேருடல்
இடையிடையே இடையூறாய்
வந்து நெளியும் நீள்மூக்கு
தெண்ணீரில் தன்னுருவென 
தான் கண்டதையெண்ணி
இன்னும் மனம் கலங்கிற்று

தாவும் மான் தொடங்கி தோகை மயில் ஈறாக
அதன்
அழுத கண்ணீர் துடைத்தன
ஆறுதல் தோற்று நின்றன
தூக்கத்தைத் துக்கம் வென்றெடுக்க
துக்கத்தைக் கொடும்பசி தோற்கடிக்க
அலமுறையிட்டு அழுதது யானைக்கன்று

அழுகையின் வீரியம் கூடுந்தோறும்
படபடத்த காதுகள்
அடித்துக்கொண்டு வானேகின உச்சநொடியில்
இப்போதெல்லாம்
அந்த யானைக்கன்று கலங்குவதில்லை
மலருக்கு மலர் தாவிக்கொண்டிருக்கிறது
தும்பிக்கையால் தேனுறிஞ்சியபடி.

Tuesday, May 9, 2023

பூனையும் வினையும்..


நல்ல பூனைகளுக்கு இங்கே இடமுண்டா
வினவிக்கொண்டு வாசலில் நின்றதொரு பூனை
முகத்திலும்
பளிங்காங்குண்டுக்கண்களிலும்
சொட்டிய அப்பாவித்தனம் தவிர
இன்னொரு நற்சான்றிதழ் தேவையா என்ன
அதை உள்ளே அழைப்பதற்கு

வந்த நாள் முதலாய்
சிறு சோகமொளித்த அதன் சிரிப்பும்
ஏகாந்த வேளைகளில் எங்கோ வெறித்த
அதன் பெருமூச்சுகளும்
சமநிலை இழக்க வைத்தன என்னை
அறியும் ஆவலை ஊதிப்பெருக்கின
பற்றியெரிந்த ஓர் நாளில் வினவினேன் அதனிடம்
சுமந்தால் பாரம்
பகிர்ந்தால் தீரும்
என்னதான் உன் வேதனை என்றேன்
பழைய நண்பனைப் பிரிந்த வேதனை
சிந்தையைத் திருப்ப முயல்கிறேன் என்றது அது
ஆதிகாலம் முதலாய் 
எம்முன்னோர் சொல்லிச்சென்ற வழிமுறைகளில்
ஒன்றிரண்டை
நானும் அதற்கு எடுத்துரைத்தேன்

முதற்கட்டமாய்
களையெடுத்துத் தோட்டம் திருத்தியது
வன்னமாய்ப்பூத்தன வண்ண மலர்கள்
அல்லியும் தாமரையும் மண்டின குளத்தில்
பின் வந்த நாட்களிலோ
அல்லிக்குளத்தின் வண்ணமீன்கள்
தடயமில்லாமல் மறையத்தொடங்கின
ஒன்றும் நினைக்கவில்லை நான்

முற்றத்துச்சுவர் தாங்கிய செயற்கை வீடுகளில்
குஞ்சுகளைப்பறி கொடுத்த குருவிகள்
கதறிப்பதறின
சின்னாட்களில் குருவிகள் இல்லாத என் வீடு
நிசப்த பூமியானது 
பூனையின் முகம் தெளிந்திருந்தது இப்போது

சுவரிலிருந்த ஓவிய மீன்கள் 
எலும்புக்கூடுகளாய் மிஞ்சிய ஓர் நாளில்
விசாரித்தேன் பூனையை
எல்லாம் உனக்காகத்தான் என்றது அது
குளத்தின் அழகைக்கெடுத்த மீன்கள்
எச்சமிட்டும் சத்தமிட்டும்
வீட்டை அழுக்காக்கிய குருவிகள்
அத்தனையும் அகன்ற பின்
சுந்தரச்சோலையாயிருக்கிறது பார் உன் வீடு என்றது
அகற்றப்பட்டவை என்னானதோவென 
விசாரப்பட்டபோது
பாழாய்ப்போவதெல்லாம் பூனை வயிற்றிலே 
என்றபடி மீசையை நீவிக்கொண்டது
அமைதியும் அழகும் கொண்டதோர் இல்லம்
அமைத்திருக்கிறேன்
எனக்கென்ன பரிசு எனக்கேட்டபோது
வாசலை நோக்கி விரல் சுட்டி விரட்டினேன்

நல்ல பூனைகளுக்கு 
இங்கே இடமுண்டாவென வினவியபடி
உங்கள் வாசலிலும்
ஒரு பூனை தென்படக்கூடும்
தோற்றப்பிழையால் ஏமாறுவதும்
கும்பிடு போட்டு அனுப்பி வைப்பதும்
அவரவர் வினைப்பயன்.

Monday, March 27, 2023

குருவியும் சரக்கொன்றையும்


முதற் சரக்கொன்றை பூத்து விட்டது
அக்காக்குருவிகளைத்தான் காணவில்லை.
அலகு ஓய்ந்ததோ
அன்றி
களைத்து இளைத்ததோ
அக்காக்களைக் கண்ணுக்குள்ளேயே
வைத்திருக்கும் தங்கைகள்
தேடித்தட்டழிகிறார்கள்

இந்த மரத்தில் பூத்திருப்பது
சென்ற வருடம் கூவிய
அக்காக்குருவியின் 
கீதமாக இருக்கலாம்
தங்கைகளின் ஏக்கமாக வழிவது
ஏதோ ஒரு வருடத்தின்
பூக்குவியலாகவும் இருக்கலாம்

சுள்ளிக்குவியலாய் இருக்கும்
மரத்தின்
பூவின் தனிமையும்
வனம் முழுக்க அக்கக்கோவென
தேடும் தங்கையின் தனிமையும்
ஒன்றென்றால் ஒன்றுதான்
வெவ்வேறென்றால் வேறு வேறுதான்
சொட்டும் குரலும் மகரந்தமும்
பரவும்
மண் மட்டும் என்றும் ஒன்றே போல்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.

Monday, March 13, 2023

தேடல்

             
விழித்திருக்கும்
கைக்குழந்தைக்குத் துணையாய்
கொட்டக்கொட்ட
தானும் விழித்திருக்கிறார்
நோய்மை கிழித்துப்போட்ட ஒருவர்
புறப்புலன் மங்கி 
அகப்புலன் தெளிவின்றி
சுய கட்டுப்பாடுமற்ற உடலர் இருவரில்
வந்த பாதை நினைவில்லை ஒருவருக்கு
போகும் பாதையோ 
தெரியவில்லை இன்னொருவருக்கு
அகமும் புலனுமற்ற ஏதோவொரு
மாயவெளியில்
அளவளாவும் இரு ஆன்மாக்களும்
தத்தம் ரேகைகளை
அங்கே பரிமாறிக்கொண்டு பிரிகின்றன
ரேகையைப் பத்திரப்படுத்தும் பொருட்டு
கால் கட்டைவிரலை
வாயில் வைத்துக்கொள்கிறது குழந்தை
கையை இறுக்கிக்கொள்கிறார் வயதானவர்
ஒருவரையொருவர் அர்த்தத்துடன் நோக்கி
பொக்கைச்சிரிப்பைச் சிந்துகின்றனர் இருவரும்
அப்பிக்கிடக்கும் காரிருளில்
விரல்களைத்தேடுகின்றன ரேகைகள்.

கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.

Tuesday, March 7, 2023

வலி

ஒவ்வொரு முறையும்
ஒரு குளிர் அலையைப்போல்
வலி வந்து மூடும்போது
விதிர்விதிர்த்துத் துடித்தடங்கும் உடம்பில்
எங்கோதான் இருக்கிறது
உடல்நடுக்க மையம்
மெல்லெனக்கிளம்பி திடீர்க்கணத்தில்
பின்னந்தலையில் சொடுக்கும்
குரூர வலியிடம் இறைஞ்சுவதற்கு யாதுளது
கர்மாவோ கடனோ
அனுபவித்துக்கழிப்பதொன்றே செய்யக்கூடியது

ததும்பும் பேரன்புடன் வலி சொன்னது
நீ
எனக்கு அடிமையாயிரு
என்னை ஆராதி
தியானித்தாலோ கதி மோட்சம் கிட்டும்
முடிந்தால்
புண்பட்ட உடலோ மனதோ
இன்னுங்கொஞ்சம் கீறிக்கொள்
வலி கொண்ட மனதென்றால் எனக்குப்பிரியமதிகம்
உனக்கும் பொழுது போகும்
சிரங்குற்ற குரங்கின் கதையை
கேள்வியுற்றிருப்பாய்தானே நீ
ஆயுதங்களைப்போட்டு விட்டு
சரணடைந்து விடு
எதிரிகள் இல்லாவிடத்தில்
நாய்க்குட்டியாய்ச் சுருண்டிருப்பேன் நான்

இருப்பையுணர்த்தும் அவசியம் எனக்கு
உண்மையில்
உன்னை நானென்ன செய்ய வேண்டுமென்று
நீதான் தீர்மானிக்க வேண்டும்
கங்கையாய்த் தாங்குவாயா
அல்லது
முயலகனாய் அடக்கி வைப்பாயா
சட்டெனச்சொல்
காலம் சொட்டிக்கொண்டிருக்கிறது விரைவாக

யுகம் கழிந்தும் பதிலில்லாததால்
வலி
உடல்நடுக்கப்புள்ளியில் மையம் கொண்டது
ஒரு 
கருக்குழந்தையாய்.

டிஸ்கி: திண்ணையில் வெளியானது. திண்ணையில் வரிகள் நான் அனுப்பியது போல் இல்லாமல் கொஞ்சம் முன்னே பின்னே பிரசுரமாகியிருக்கிறது.

Wednesday, March 1, 2023

எல்லாத்துறையிலும் ஒரே கடல்..


எந்தக்குளத்தில் பூத்தாலென்ன
எல்லாத்தாமரைக்கும்
ஒரே மணம்
எந்த உலையில் வெந்தாலென்ன
எல்லா அரிசியிலும்
ஒன்று போல்தான் பசி தீர்கிறது
எல்லாத்தாய்களும் ஒருவளே
குழந்தையின் பசி உணர்வதில்
எந்தத்துறையில் முங்கினாலென்ன
எல்லாத்துறையிலும் ஒரே கடல்
எல்லாச்சாளரங்களின் வழியும்
நுழைகிறது காற்று
உன் என் வியர்வையை ஆற்ற
எல்லாமும் சேருமிடம்
ஒரு புள்ளியில்
பரந்து பிரிவதும் அங்கிருந்தே
பலவற்றிலிருந்து ஒடுங்கியிணைந்தவையெலாம்
சிதறிப்பறக்கின்றன
ஒன்றுதான் ஒன்றுதான் என்றபடி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.