Pages

Sunday, January 30, 2011

ரத்தக்கடல்..





உயிர் தரித்திருப்பதென்பது
மீனுக்கு மட்டுமல்ல
மீனவனுக்கும் போராட்டமாகிவிட்டது
தினந்தோறும்!!!..
கடலுக்குள் அழுவதால்
எங்கள் மீனவனின் கண்ணீரும்
வெளியில் தெரிவதில்லை போலும்..
காராக்கிரகத்தையும் குண்டுகளையும்தவிர
மரணமும் பரிசாய்க்கிடைப்பதுண்டு அவனுக்கு.

வாக்குச்சீட்டில் 
குத்திய பாவத்துக்கு
முதுகில் குத்தப்படுவதென்பது,
சாபக்கேடான வாடிக்கையாகிவிட்டதென்றாலும்;
மறுபடியும் நாடித்தான் செல்கிறோம்
விட்டில்பூச்சிகளாய்,
விடிவெள்ளியென பொய்மினுங்கை பூசிக்கொண்ட
தீப்பந்தங்களை நோக்கி.

இறையாண்மையென்று பொய்க்கூக்குரலிட்டு
தன்சொத்தைப்பாதுகாக்கும்
மயில்வேடமிட்ட வான்கோழிகளுக்கு,
உயிரையே சொத்தாய்க்கொண்ட
எளியவனை 
இலவசமெதுவும் பெற்றுக்கொள்ளாமல்
மனிதனாய் நீடிக்கும் யாரேனும் அறிமுகப்படுத்தி வையுங்கள்..
நம்முடைய இரைக்காகவும்தான்
அவன் செத்துமடிகிறான்.

எல்லை கடந்தும் தாக்கும்
எல்லையில்லா பயங்கரவாதத்தை
தடுக்கவொட்டா எல்லைச்சாமிகளாய்..
வாக்குறுதிகளை
வரமெனவீசிவழங்கும் கூட்டம் வருமுன்
நமக்கு நாமே
உறுதிக்காப்பிட்டுக்கொள்வோம் 
மனிதம்மட்டுமே காப்போமென்று..

டிஸ்கி:  தமிழக மீனவர்களின் மீது நடைபெறும் கட்டவிழ்த்த வன்முறையை கண்டித்து, அனைவரும் கூட்டு முயற்சியில், அனுப்பவிருக்கும் இந்த மனுக்கடிதத்தில் நான் 1870 ஆவது நபராக கையெழுத்திட்டு விட்டேன். அப்ப நீங்க?????


விண்ணப்பம் இங்கே இருக்கு.





Monday, January 24, 2011

கைவரப்பெறாமல்..


எதையாவது எழுத நினைத்து
எதையாவது
கிறுக்கிவைக்கிறேன்..
கண்ணாடித்திரைக்கப்பால்
கண்சிமிட்டும்
கோஹினூரென
கைவரப்பெறாமலே,
சுற்றிச்சுழன்றடிக்கும்
கனவுமண்டலத்தின் பெருவெளியில்
சுதந்திரப்பறவையாய்...
நீந்திச்செல்கிறது ஒரு கவிதை..
சலனமற்றிருந்த மனக்குளத்தில்
அலையெழுப்பிய கல்லால்
வரிசையற்றலையும் எழுத்தெறும்புகள்
கலைந்தோடுவதை
வேடிக்கை பார்த்தபடி..

டிஸ்கி: இந்த கவிதையை வெளியிட்ட கீற்று இணைய இதழுக்கு நன்றி.

Wednesday, January 19, 2011

ஸ்பரிசம் பற்றிய ஞாபகம்..

கடைசியாக
எப்போது கிடைத்ததென்று
மூளையறைகளை காலிசெய்தும்
கிடைக்கவில்லை
ஸ்பரிசம் பற்றிய ஞாபகம்..
கன்னம் வழித்துமுறிக்கும்
சுருங்கிய விரல்களைப்பார்க்கையில்
வராத ஞாபகத்தை,
காதலுடன் கோர்த்த
விரல்களைக்காண்கையில்
தோன்றாத ஏக்கத்தை,
பிஞ்சுவிரல் பற்றிச்செல்லும்
அன்னையின் விரல்கள்
திறந்து கொணர்ந்தன,
ஞாபகப்பேழையில்
பொக்கிஷமாய் பாதுகாக்கும்,
வீட்டில் அவன் கழித்த கடைசி இரவையும்;
தலை கோதிய அன்னையின் ஸ்பரிசத்தையும்..
தொடுகைக்கான ஏக்கத்தையும் சேர்த்து
துடைத்துக்கொள்ளும்போது
கண்ணீருடன் சொட்டிக்கொண்டிருந்தன,
ரத்தப்பஞ்சு மூட்டையினூடே
அவன் விரல்களும்..


டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட கீற்று இணைய இதழுக்கு நன்றி.


Saturday, January 15, 2011

கீற்றென..


ஆதவனே நீ வாழி!!
கட்டிளம் காளை உனை
சுற்றும்.. எண்ணிலடங்கா கன்னியருள்,
நீ மாலைசூட்டியது
பூமிப்பெண்ணுக்கு மட்டுமே..
சோதரிக்கு துணைவந்த
சந்திரனையும்
அன்பளித்து வசப்படுத்தும் தந்திரம்,
உன்னிடம் மட்டுமேயுள்ளது..
எனினும்,
உன் முன்னால், அவன் வருவதேயில்லை,
உங்களுக்குள்ளும் வரப்புத்தகராறோ!!

பூமியின் வியர்வையை
திரவத்தங்கமாய்ப்பொழியவைக்கும்
செப்பிடு வித்தைக்காரனே!!
உக்கிரம் தாங்காமல்
சலித்திட்ட போதிலும்,..
உன்னை,
விரும்பியழைக்கின்றோமொரு,  மார்கழிக்குளிரில்;
அபகரணம் செய்யப்படுகிறாய்
சில பொழுதுகளிலெனினும்,
மீண்டு வந்து புன்னகைக்கிறாய்
கீற்றென..
பச்சையக்கூட்டணியுடன்
நீ நடத்தும் ஆட்சியில்,
இலவசங்களுக்கும் கணக்கில்லை..
உலகுக்கே படியளக்கும் ஆதாரசக்தியுன்னை
தெண்டனிட்டு வணங்குகின்றோம்..
வாழ்த்துகின்றோம்;
உனக்கென்றோர் பண்டிகையில்..


Wednesday, January 12, 2011

ரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..

(படம் உதவி: கூகிள்)

பிளாஸ்டிக் பெட்டிகளுடன்
இரும்புப்பெட்டிக்குள்
கடைவிரிக்கும்
எதிர்கால தொழிலதிபர்கள்,
வழக்கமான வாடிக்கையாளருக்கென்று
திறந்துவைக்கும் சிறிய சாம்ராஜ்யத்தில்;
தொண்டை கிழிய
கத்தியபின்னும், மிஞ்சுகின்றன..
இன்னும் நிரம்பியிருக்கும் பெட்டிகளும்
ஒரு தேனீருக்கான
சில சில்லறைகளும்..

டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி..