Pages

Wednesday, October 26, 2016

மெல்லென நகரும் சாலை

சீரான இரத்த ஓட்டம் போல்
ஓடிக் கொண்டிருந்த வாகனங்கள்
காவலர் தன் பணி செய்யத்தொடங்கிய கணத்திலிருந்து
முடிச்சிட்டுக்கொண்ட நாளங்களில்
தேங்கத்தொடங்கியதும்
உறுமீன் வரும் வரை வாடியிருந்த ஒருத்தி
மல்லிகைப்பூ விற்கத்தொடங்குகிறாள்
அவள் முடிக்கற்றைகளை அணிசெய்த சாரல் துளிகள்
சிறுவைரங்களையொத்திருப்பதை அவளறியாள்
இதோ இச்சாலையோரத்தில் முளைத்திருக்கும்
பூ நாற்றுப் பண்ணைச்செடிகள்
வானவில்லை கரைத்துக்குடித்து விட்டு
அத்தனை வண்ணங்களிலும் பூத்திருக்கின்றன.
புற்றீசல்களாய்ப் புகுந்து புறப்பட்டு
தத்தம் வயிற்றுப்பிழைப்பிற்கு
வழி தேடிக்கொண்டிருக்கும் சாலையோர வியாபாரிகளின்
கண்களிலும் பிரதிபலிக்கின்றன
பண்டிகைக்கால தேவைகள்
என்ன அவசரம்?
மெதுவாய்த்தான் நகரட்டுமே இப்போக்குவரத்து.

Monday, October 17, 2016

கரையும் துளி


கோபம் ஏற்படுத்தும்போது
விலகி நடக்கவும்
பிரியத்தைக்கொட்டும்போது
ஏந்திக்கொள்ளவும்
தனிமைத்தவத்தில்
நிச்சலத்துடனிருக்கவும்
மகிழ்வில் ஆர்ப்பரிக்கவும்
பிரிவேற்படும்போது சகித்துக்கொள்ளவுமென
எல்லாம் பழகிக்கொண்டாயிற்று
ஆயினும்,
ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அசந்தர்ப்பமாய்
துளிர் விடும் கண்ணீரை
என்ன செய்வதென்றுதான்
இன்னும் பிடிபடவில்லை
போகட்டுமென அதில் கரைந்து விடுவதைத்தவிர..