Pages

Monday, July 29, 2013

தூதும்,, சமாதானமும்.

கல்லெறிபட்ட தேன் கூடாய்க்
கலைந்து கிடந்த வீட்டில்
இரு வேறு கட்சிகளாய்ப்
பிரிந்து நின்று
உப்புப் பெறாத விஷயத்துக்காய்,
விஷவார்த்தைகளால் சுட்டுக் கொண்டார்கள்
தலைவனும் தலைவியும்.

பறக்கும் தட்டுகளும், கண்ணீர்க் குண்டுகளும்
இறைந்து கிடந்த போர்க்களத்தில்,
சட்டென்று ஏற்றப்பட்டது
சமாதானக்கொடி
ஓடிச் சென்று கட்டிக் கொண்ட
மழலைத்தூதுவர்களால்..

எவர்க்காய்ப் பரிவதென்றறியாமல்
மருண்டு நின்றவர்களுக்காய்
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட
முதுகுக்குப்பின் கைகுலுக்கிக்கொண்ட
தூதுவர்களால்
நிரம்பி வழிந்தது மனக்கருவூலம்
வற்றாத அன்பால்..

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட நவீன விருட்சம் மின்னிதழுக்கு நன்றி..