வரதட்சணையா
வாங்கியதெல்லாம்;
வட்டிக்கடைக்கு போயாச்சு.
ஆசைப்பட்டு கொடுத்ததெல்லாம்
ஆடம்பரமா தீர்த்தாச்சு..
மாமனார் வீட்ல
பசை கொஞ்சம் கூடுதல்.
கொஞ்சம்போல வழிச்சுக்க,
வழியென்ன இருக்கு?????...
'ஒன்னோட பொறந்த வீட்ல
பாகப்பிரிவினையாமே??.
ஒம்பங்கையும் வாங்கியா...'
கழுத்தைப்பிடித்து
வெளியே தள்ள;
கதவைத்திறந்தவன் திகைத்தான்.
'வந்தா சொத்தோட வான்னு
விரட்டீட்டாரு எம்புருசன்'
நின்றிருந்தாள் தங்கச்சிக்காரி,
கண்ணைக்கசக்கியபடி.
காற்று எப்போதும்
ஒரே திசையில் வீசுவதில்லை.