Pages

Wednesday, January 30, 2013

ரயிலோடும் வீதிகள்.. (நவீன விருட்சத்தில் வெளியானது)

(இணையத்தில் சுட்ட படம்)
கயிற்று வளையத்துள்
அடைபட்டிருந்த பெட்டிகளெல்லாம்
அலுத்துக்கொண்டனர்,
ரயில் மெதுவாகச்செல்வதாக..
குதித்துக் கும்மாளமிட்டுச்
சூறாவளியாய்க் கிளம்பிய ரயில் பெட்டிகள்
ஒன்றுக்கொன்று இடித்துத் தள்ளியதில்
தடம்புரண்டோடிய
உற்சாக ஊற்று
சற்றுச்சுணங்கிற்று அவ்வப்போது.
பிள்ளையார் கோவில் நிறுத்தம்
இந்நேரம்
தாண்டப்பட்டிருக்க வேண்டுமென்ற
மூன்றாவது பெட்டி காளியப்பனை
ஆமோதித்தாள்
ஐந்தாவது பெட்டியான வேலம்மாள்.
“வெரசாத்தான் போயேண்டா”
விரட்டிய குரலுக்குத்தெரியாது,
ரயிலோட்டுனருக்கு
அன்றுதான்
காலில் கருவை முள் தைத்ததென்பது.
அலுத்துப்போன கடைசிப்பெட்டி
சட்டென்று திரும்பிக்கொண்டு இஞ்சினாகியதில்
வேகம் பிடித்த ரயிலில்
இழுபட்டு அலைக்கழிந்து வந்தது
முன்னாள் இஞ்சின்
வலியில் அலறிக்கொண்டு..

டிஸ்கி: வெளியிட்ட நவீன விருட்சத்திற்கு நன்றி.

Thursday, January 24, 2013

தொலைந்த நிழல்..(நவீன விருட்சத்தில் வெளியானது)

மதிய வெய்யில் உறங்கிக்கொண்டிருந்த வீதிகளில்
தேடலுடன் நகர்ந்து கொண்டிருந்தது அந்த நிழல்.
பூவரச மரத்தின் கீழ் துயின்ற
பூச்சருகுகளின்
உறக்கம் கலைக்காமல்
வார்த்தைக்குள் வராத சங்கீதத்தை
வாய்க்குள் மென்று கொண்டே
தான் தொலைந்த இடத்தைத்
தேடிக்கொண்டிருந்தது.

கலகலப்புகளிலும்
சின்னக்கொலுசுகளின் கிணுகிணுப்புகளிலும்
ஆலமர ஊஞ்சல்களிலும்
தன்னைத்தேடிச் சலித்த அது
ஜவ்வு மிட்டாய்க்காரனின் பின்னே
போய்க்கொண்டிருந்தது
தானும் கைதட்டிக்கொண்டு.

பல்லாயிரம் வாசனைகளுக்கிடையே
மிதந்து வந்த தன்னுடைய வாசனை
கால்களைக்கட்டியிழுக்க
தொலைந்த இடம் சேர்ந்த மகிழ்வுடன்
ஓடிச்சென்று விரல் பற்றிக்கொண்டு
பாண்டியாடத்தொடங்கியது
பாவாடை பறக்கப் பறந்து கொண்டிருந்த சிறுமியுடன்.

டிஸ்கி: நவீன விருட்சத்திற்கு நன்றி :-)