Pages

Saturday, January 28, 2023

நல்லாச்சி - 49


தொழுவம் நிறைந்த மாடு கன்றுகளும்
தோட்டம் நிறைந்த செடிகொடிகளுமாய்
செழித்துப் பொங்கியிருக்கிறது நல்லாச்சி வீடு
தோட்டத்தில் பூத்தவை போக
முல்லை மல்லி செண்பகம் ரஞ்சிதமென
தொழுவத்திலும் பூத்து கன்றுடன் நிற்பவற்றில்
கருப்பில் வெள்ளை தெளித்த
பிச்சிவெள்ளை மட்டும் பேத்தியின் பெருவிருப்பம்
மந்தையிலிருந்து வீடுபுகுந்ததும்
பேத்தியின் வாசம் தேடுவது அதற்கு வாடிக்கை
துணியோ சோப்போ
வாயிலகப்பட்டதைக் சவைத்துத் துப்புவதும்
ஹமாமை மட்டும் மென்று விழுங்குவதும் கூட
அதற்கு வாடிக்கையே
மூவந்தி மயங்கியும் வீடு சேராத பிச்சிவெள்ளைக்காய்
வாசல் நெடுக நடந்து தேய்கிறாள் நல்லாச்சி
முன்னங்கால் வீங்கி வந்து சேர்கிறது பிச்சிவெள்ளை
பயிர்பச்சை நாடிப் படுவப் பத்திலிறங்கிய பசுவை
பக்குவமாய் மீட்ட கதை சொல்கின்றனர் மீட்பர்
கனத்த மனதுடன் வைது கொண்டே 
பண்டுவம் பார்க்கிறாள் நல்லாச்சி
செங்கரும்புத் தோகை மென்முள் அப்பிய கையை
முதுகின் பின்னொளித்துத் திருதிருக்கிறாள் 
தன் முறை வரக் காத்திருக்கும் பேத்தி.

Friday, January 20, 2023

நல்லாச்சி - 48


கழுத்து கொள்ளா சம்பங்கி மாலைகளோடு
அவளுக்குப்பிடித்த மல்லிகை ஆரங்களும்
தாள் தோயும் ரோஜாமாலையுமாக
இறுதிப்பயணம் கிளம்பிவிட்டாள் பெரியாச்சி
அன்னையின் கை தொட்டு கால் தொட்டு
முகம் வருடி தலை கோதி
முன்னுச்சியிலோர் முத்தமும் பதித்தபின்
தன்னுயிரை ஊட்டி வளர்த்தவளை
ஆறா உள்ளத்துடன் வழியனுப்புகிறாள் நல்லாச்சி
தூரா ஊற்றென விழிநீர் கொப்பளிக்க
பாசத்தில் வழுக்கி நினைவுகளில் தோய்ந்து
கிடக்கிறாள் ஒரு மூலையில்
அன்னையின் பழம்புடவையுடன் பிதற்றியபடி 
சகலமும் மங்கி
மெல்லடி வைத்து வரும் பேத்தி
மடியேந்திக்கொள்கிறாள் நல்லாச்சியை
'பூட்டியாச்சி கடவுளின் வனத்தில்
பூக்கொய்யச் சென்றிருக்கிறாள்
நற்பூ கொண்டு அவள் வரும்வேளை
கூம்பியிருத்தலாகுமா உன் முகமலர்'
சொற்பூ கொண்டு ஒத்தடமிட்டு 
ஒரு வாய்ச்சோறூட்டும் பேத்தியிடம்
அடைக்கலமாகிறாள் நல்லாச்சி
'என்னப் பெத்தாரு
எங்க அம்மையில்லா'
இனியாங்கே
உதிராது கண்ணீர்ப்பூக்கள்
பற்றிக்கொள்ளவோர் சுண்டுவிரல்
வாய்த்து விட்டது நல்லாச்சிக்கு.

நல்லாச்சி - 47


வேப்பிலைப்பொடியும் மாவிலைப்பொடியும்
கலந்தெடுத்துத்
தூபம் போடுகிறாள்
வேப்பெண்ணெய் நிறைந்த சிற்றகல்களை
ஒவ்வோர் அறையிலும் ஏற்றுகிறாள்
அண்டைஅயலார் உரைத்தபடியெலாம்
உபாயங்கள் கைக்கொண்டு
எதற்கும் இருக்கட்டுமென
துளிச்சொட்டு மருந்தையும்
பேத்தியின் ஆடையோரம் தெளித்து
வீட்டையே அதகளப்படுத்துகிறாள்
பேத்தியின் கன்னத்தில் 
சிறு தடிப்பு கண்ட நல்லாச்சி
அத்தனைக்கும் தப்பி
காதோரம் ரீங்கரித்துப்பாடும் கொசுவை
ஏதும் செய்யமாட்டாமல் குமையும்
நல்லாச்சியிடம்
கூட்டாக எசலுகின்றனர் தாத்தாவும் பேத்தியும்
இந்தக் கொசுத்தொல்லை தாங்கவில்லையென.

நல்லாச்சி - 46


பச்சரிசிப் பொங்கலும் பல காய்க் குழம்புமாக
முதல்நாள் கொண்டாடியாயிற்று
தவுனுக்கு வாயூறிய பேத்தியின் மனதை
சுட்ட பனங்கிழங்கு கொண்டு
ஆற்றுகிறாள் நல்லாச்சி
துள்ளும் செல்லக்கன்றின்
கழுத்தணைத்துக் கொஞ்சி
அடக்கிவிட்டதாய் ஆர்ப்பரிக்கும்
பேத்திக்குப் பரிசாய் விரலில் விழுகிறது 
ஆச்சியின் நெளிமோதிரம் இரண்டாம் நாளில்
கடவம் நிறைந்த கரும்புச்சக்கைகளை
அடுப்பெரிக்க ஆகுமென்று
வெயில் நனைக்கும் முற்றத்தில்
பரப்பும் நல்லாச்சியிடம்
காதல்மணம் கொண்டதால் ஆகாதவர்களான
மாமனையும் அத்தையையும் கண்டால்தான்
காணும்பொங்கலும் நிறைவுறுமென
சொல்ல வந்தவை திக்கி
நிலைகொள்ளாமல் நிற்கிறாள் பேத்தி
அறியாத நல்லாச்சி
உடைத்து நீட்டுகிறாள் இன்னொரு கரும்புத்துண்டை
வழக்கம்போல் இவ்வருடமும்
காணாமலேயே கழியப்போகிறது
காணும் பொங்கல்

Saturday, January 7, 2023

நல்லாச்சி - 45

முத்துப்பந்தலின் கீழ்
ஒரு வைரமென
நட்சத்திர விதானத்தின் கீழ்
சயனித்திருக்கிறாள் பேத்தி
நல்லாச்சியின் மேல் கால் போட்டுக்கொண்டு
முல்லை வாசனை சுமந்து வரும்
மந்தமாருதத் துணையுடன்
சின்னவளைத்தூங்க வைக்க
எடுத்து விடும் கதைகளெல்லாம் 
ஒவ்வொன்றாய்த் தோல்வியுற
உம் கொட்டியபடி சின்னவளும்
கொட்டாவியை மென்றபடி பெரியவளும்
மேலும் பல கதைகளைக் களமிறக்குகின்றனர்
தானும் சொல்லப்போவதாக
அறிவித்த பேத்தி
இடைவெளியில்லாக் கதைகளை
இஷ்டத்துக்கு அளந்து விடுகின்றாள்
சொல்லடுக்கி அடுக்கி அவள் சமைத்த கதைகளில்
கற்பனா ரசம் பொங்கியோட
வானம் வரை பெரிய ஆப்பிள் காய்க்கும் மாமரமொன்று
தம் தோட்டத்திலிருப்பதை
ரகசியமாய் அவள் சொன்ன சமயம்
விழிகள் விரியக் கேட்டுக்கொண்டிருந்தது நிலவு.
நல்லாச்சியும் தென்றலும் உறங்கி 
இரு ஜாமங்களானபடியால்
அவ்விருவரும் அதை அறியக்கூடவில்லை
ரகசியங்களை 
ஒரு செல்லப்பூனையைப்போல் பராமரித்து வரும்
குழந்தைகளே
அவற்றைப் பிறரிடம் காட்டிப் பெருமையும் கொள்வர்
ஆகவே
நீங்களும் சொல்லி விடாதீர்கள்.

நல்லாச்சி - 44

"ஓரி உலகெலாம்.... உலகெலாம் சூரியன்"
நல்லாச்சி கற்றுத்தந்த பாடலை
மனனம் செய்தபடி
ஏழாங்கல் விளையாட முயல்கிறாள் பேத்தி
பாடல் வரிகள் வசப்படும்போது
கற்கள் நழுவுவதும்
கற்களை அள்ளும்போது
பாடல் மறப்பதுமாக
கவனப்பிசகில் தவிப்பவளிடம்
கவனக்குவிப்பிற்கு 
விளையாட்டுமொரு பயிற்சியே என அறிவுறுத்துகிறாள் நல்லாச்சி
பயிற்சி வகுப்புகளின்றி
ஆயிரக்கணக்கில் கட்டணமுமின்றி
ஆங்கோர் முன்னேர்
பின்னத்தி ஏரைத் தயார் செய்கிறது
கடமையில் கருத்தாய்.

நல்லாச்சி - 43

வெண்டையை நுனி ஒடிக்காமல்
புடலை சுரைகளை நகத்தால் அழுத்தாமல்
காளையைக்கூட சாட்டையின்றி
தட்டிக்கொடுத்து
பக்குவமாய்க் கையாளும் தாத்தா
வீட்டு மனிதர்களிடம் மட்டும்
வன்முகத்தைக் காட்டுவது
ஏனெனக் குமைகிறாள் பேத்தி
பேச்சற்று தாத்தா நழுவி விட
பதிலற்று நல்லாச்சி ஊட்டிய பால்கஞ்சி
அன்று 
சற்றே உப்புக்கரித்தது.

நல்லாச்சி - 42

தர்க்கம் விழாமல்
பசுவும் நிறைகுழியுமாக
முத்துக்களை அள்ளும் நல்லாச்சியை
அதிசயித்துப் பார்க்கிறாள் 
பல்லாங்குழியை முன்பின் கண்டிராத பேத்தி
ஆட்டம் துவங்கிய சில நொடிகளிலேயே
எதிராளியை
வெறும் குழிகளுடன் நிற்கச்செய்த 
நல்லாச்சியின் சாமர்த்தியத்தை
வியக்கும் பேத்தியிடம்
ஆச்சி ஒருநாளும் சொன்னதேயில்லை
வியாபார காந்தங்களாக
மாற நினைத்த மகன்களிடமிருந்து
பெரும்பான்மை சொத்தைக்
காப்பாற்றவியலா
தன்னுடைய கையறுநிலையை.

Friday, January 6, 2023

நல்லாச்சி - 41


நல்லாச்சியின் முந்தானை பிடித்து
தோட்டந்துரவெங்கும் சுற்றிவருகிறாள் பேத்தி
ஒவ்வொன்றையும் ரசிப்பதோடு
இதென்ன அதென்ன
எங்கிருந்து வந்தவை இவையென்ற 
கேள்விகள் வேறு அவளிடம்
ஒவ்வொன்றின் பிறவி வரலாற்றையும்
அலுக்காமல் கேட்கும் பேத்திக்கு
சலிக்காமல் பதிலிறுக்கிறாள் நல்லாச்சி
விதையிலிருந்து முளைப்பவை
கொப்பிலிருந்து தளிர்ப்பவை
என்பவற்றோடு
ஈன்று பெருகுபவை குறித்தும் விளக்கிய நல்லாச்சி
இப்போது
சோதிக்கிறாள் பேத்தியை
கீரை விதையும் முருங்கம் போத்தும்
எளிதில் இனங்கண்ட பேத்தி
தக்காளி கத்தரி நாற்றுகளை
சற்றே குழம்பி கண்டறிகிறாள்
இவையென்ன என்ற 
ஆச்சியின் கேள்வியைத் தொடர்ந்த பேத்தி
கண்கொட்டாமல் பார்த்தபடி சொல்கிறாள்
'கோழிவிதைகள்' என
பொரிந்து வெளிவர ஆரம்பித்திருந்த குஞ்சுகள்
கீச்சுக்கீச்சென்று ஆமோதிக்கின்றன.