Pages

Friday, January 20, 2023

நல்லாச்சி - 48


கழுத்து கொள்ளா சம்பங்கி மாலைகளோடு
அவளுக்குப்பிடித்த மல்லிகை ஆரங்களும்
தாள் தோயும் ரோஜாமாலையுமாக
இறுதிப்பயணம் கிளம்பிவிட்டாள் பெரியாச்சி
அன்னையின் கை தொட்டு கால் தொட்டு
முகம் வருடி தலை கோதி
முன்னுச்சியிலோர் முத்தமும் பதித்தபின்
தன்னுயிரை ஊட்டி வளர்த்தவளை
ஆறா உள்ளத்துடன் வழியனுப்புகிறாள் நல்லாச்சி
தூரா ஊற்றென விழிநீர் கொப்பளிக்க
பாசத்தில் வழுக்கி நினைவுகளில் தோய்ந்து
கிடக்கிறாள் ஒரு மூலையில்
அன்னையின் பழம்புடவையுடன் பிதற்றியபடி 
சகலமும் மங்கி
மெல்லடி வைத்து வரும் பேத்தி
மடியேந்திக்கொள்கிறாள் நல்லாச்சியை
'பூட்டியாச்சி கடவுளின் வனத்தில்
பூக்கொய்யச் சென்றிருக்கிறாள்
நற்பூ கொண்டு அவள் வரும்வேளை
கூம்பியிருத்தலாகுமா உன் முகமலர்'
சொற்பூ கொண்டு ஒத்தடமிட்டு 
ஒரு வாய்ச்சோறூட்டும் பேத்தியிடம்
அடைக்கலமாகிறாள் நல்லாச்சி
'என்னப் பெத்தாரு
எங்க அம்மையில்லா'
இனியாங்கே
உதிராது கண்ணீர்ப்பூக்கள்
பற்றிக்கொள்ளவோர் சுண்டுவிரல்
வாய்த்து விட்டது நல்லாச்சிக்கு.

0 comments: