Pages

Saturday, May 9, 2026

நல்லாச்சி

செல்லப்பிராணி வளர்க்க ஆசை பேத்திக்கு
வீட்டிலுள்ளோரைப் பிய்த்துப்பிடுங்குகிறாள்
சேக்காளிகள் வீடுகளிலெல்லாம் வளர்க்கின்றனராம்
கதைகதையாய்ச் சொல்கின்றனராம் அருமைபெருமைகளை
சொல்லிச்சொல்லி மாய்கிறாள்
தனக்குமொன்று இல்லையெனில் மதிப்பில்லையென்கிறாள்

நடைபழக நாயோ பூனையோ
சேர்ந்து மிழற்ற கிளியோ குருவிக்குஞ்சோ
சொப்புவாய் குவித்துக்கொஞ்சும் மீன்களோ
எனக்கொரு செல்லம் வேண்டுமென்கிறாள் 
பராமரிப்பை அஞ்சுகின்றனர் வீட்டார்
பிள்ளைப்பாசம் நிறைவேற்றச்சொல்கிறது
இயலாமை பின்னடைய வைக்கிறது

அன்றோர் தினம் கீச்வீச்சென விடிகிறது
கண்திறக்காத பஞ்சுப்பொதிகளுடன் தோட்டத்தில்
அள்ளி மடியிலிடுகிறாள் நல்லாச்சி
அணைத்துக்கொஞ்சுகிறாள் பேத்தி
இன்னொரு அன்னையாய் மாறி
இப்போதெல்லாம் 
தத்தம் பிள்ளைகளை அவளிடம் விட்டுவிட்டு
உலாச்சென்று விடுகின்றன அத்தனை ஜீவன்களும்
தலையிலும் தோளிலும் இடுப்பிலுமாக
அத்தனையும் சுமந்து நடைபழகுகின்றாள் பேத்தி
ஒரு பேரன்னையாக.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

நல்லாச்சி


செல்லாச்சி வீட்டில் அமளியாயிருக்கிறதென
ஓடுகின்றனர் நல்லாச்சியும் பேத்தியும்
பிடிவாதம் கொண்ட பேரப்பிள்ளைகளால்
இடிந்து அமர்ந்திருக்கிறது குடும்பம்
அவர்கள் உதிர்த்த
தகாத வார்த்தைகளும் தற்கொலை அச்சுறுத்தல்களும்
இறைந்து கிடக்கின்றன வீடெங்கும்
வாசலில் வழியும் ஒன்றிரண்டு வார்த்தைகளால்
எட்டிப்பார்க்கும் வம்பர்களும் அன்பர்களும்
இன்னும் குறுக வைக்கின்றனர் அக்குடும்பத்தை
பெற்றோரும் அவர்களைப் பெற்றோரும்
ஒருவர்மேல் ஒருவர் குற்றப்பத்திரிகை வாசிக்கின்றனர்
செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டதாய்
இருவர் கூற்றிலும்
முழுக்க மெய்யுமில்லை முழுக்கப் பொய்யுமில்லை

எங்கே உருகவேண்டும் எதற்கு இறுகவேண்டுமென
எல்லை வகுக்காததன் விளைவே இது
என்கிறாள் நல்லாச்சி
குறைநீரில் பூஞ்செடி வாடாதா என்கிறது அக்குடும்பம்
அதிகநீர் அழுகவைக்கும் என்கிறாள் நல்லாச்சி
அவசியமெனில் செடியைச் சற்று நறுக்கவும் செய்யலாம்
சிறு கண்டிப்பு அவசியமே
மென்மை எதிர்பார்த்து பூஞ்சையாய் விளையக்கூடாது
கல்வியும் ஒழுக்கமும் இருகண்கள்
ஒன்றைப்போற்ற இன்னொன்றைத் தூற்றவேண்டா
பெரியோர் சிறியோர் பரஸ்பர மதித்தலில்
கிளைவிட்டுப் பொலியும் அன்புமலர்கள்
பின்னேர் சரிவரத் தொடர 
முன்னேர் தடுமாறாமல் செல்லல் வேண்டும்
அத்தனையும் கேட்டுக்கொள்கிறது அக்குடும்பம்
பூனைக்கு மணிகட்டியிருக்கிறாள் நல்லாச்சி
உரைத்தவையெல்லாம் உரமோ
விழலுக்கிறைத்த நீரோ யாரேயறிவார்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

நல்லாச்சி

                                           

நடைப்பயிற்சி வேண்டுமாம் நல்லாச்சிக்கு
அறிவுறுத்தி விட்டார் மருத்துவர்
நீரிழிவின் ஆரம்பப் படிநிலை
சற்றே தடதடக்கும் இதயம்
பலவீனமாகிறேனென மணியடித்துவிட்ட எலும்புகள்
இறுக ஆரம்பித்திருக்கும் மூட்டுகள்
என உண்டியல் காசைப்போல் சேமித்திருக்கும்
உடல் நலிவை ஆற்றும்
மென் நடையும் மென் பயிற்சியும்
தன்னால் ஆகாதென்கிறாள்
டாக்டரின் படிப்பையே சந்தேகிக்கிறாள்

சாக்குப்போக்குச் சொல்லியும்
மெய்யே போல் பொய்க்கோபம் கொண்டும்
எல்லாவற்றையும் ஒதுக்குகிறாள்
வீட்டுக்குள் நடப்பது கணக்கில்லையா என்கிறாள்
கலகலத்துக்கிடக்கிறது வீடு
களேபரமான ஓர் நாளில்
இடைவெளியற்று இருமிய பேத்தி
தளர்ந்து சரிகிறாள் எல்லோரும் பதற

ஒருமண்டலமாய் விடியலில்
ஓயாது பிரகாரம் சுற்றுகிறாள் நல்லாச்சி 
அடிப்பிரதட்சணமென்ன நெய்விளக்கென்ன
அங்கப்பிரதட்சணமென்ன எள்விளக்கென்ன
என்னென்ன விரதமென்ன எல்லாவும் 
ஏற்கிறாள் பேத்திக்கென
பொய்நோய்க்காய் பெற்றோரிடம் மன்னிப்பு வேண்டியபின்
கோவிலிலிருக்கும் அம்மையப்பனிடமும் வேண்டுகிறாள் பேத்தி
தினம் நூறு தோப்புக்கரணங்களுடன்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.



நல்லாச்சி

                                   
தோல்பாவைக்கூத்து தெருக்கூத்து
இரண்டும் வந்திருக்கின்றன கிராமத்திற்கு
ஊர்த்திருவிழாவை முன்னிட்டு
தெய்வங்களும் கொஞ்சம் 
உற்சாகமடைந்து புத்துணர்வு கொள்கின்றன

நல்லாச்சியும் பேத்தியும்
தினம் ரசிக்கின்றனர் இரு கூத்துகளையும்
அர்ச்சுனன் தபசையும், நள தமயந்தியையும்
அரிச்சந்திரனையும் பாஞ்சாலி சபதத்தையும்
நல்லாச்சி சொன்ன இன்னபிற கதைகளையும்
கூத்துவடிவில் பார்த்த பேத்தி
ராஜாக்களையும் ராணிகளையும்
பளபளக்கும் அரசவாழ்வையும்
நிஜமெனவே நம்பத்தொடங்குகிறாள்
இரவிலும் பகலிலும் வெவ்வேறாய்ச் சுழல்வது
அவர்கள் உலகம் என்பதை மறுக்கிறாள்

ஒரு பகலில் கல்லடுப்பில் சமைத்தபின்
அம்மிதேடி வருகிறாள் மகாராஜாவின் மனைவி
நல்லாச்சி வீட்டுக்கு
கைச்சொடுக்கில் அடிபணியும் ஏவல்பெண்கள்
கொண்ட ராணி
ஒட்டிய கன்னங்களுடன்
அள்ளிச்சொருகிய புடவையும் கூந்தலுமாய்
நெஞ்சுவலிக்க அம்மியரைப்பதை
அதிர்ச்சி விலகாமல் பார்க்கிறாள் பேத்தி

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.