Pages

Saturday, May 23, 2026

நல்லாச்சி..

பெரியதாத்தா வரும் தினங்களில்
இறக்கை கட்டிக் குதூகலிப்பாள் பேத்தி
வயலில் விளைந்தவையென கொண்டுவரும் மூட்டைக்குள்
தோட்டத்தில் உதிர்ந்தவையென 
ஒன்றிரண்டு மயிற்பீலிகளும் இருப்பதுவும்
ஒரு காரணம்

ஆடலும்பாடலும் கதைசொல்லலுமாய்
தாத்தாவின் தோளில் நிழலாய்த்தொற்றி
நல்லாச்சியை மறந்து திரியும் பேத்திக்கு
ஒரேயொரு குறைதான்
தன் களித்தோழனிடம்
கைவிரலிடுக்கில் புகையும் கடைசி விரல்தான் அது
ஆருரைத்தும் கேட்காத அகந்தையை
அறிவுறுத்தி உடைக்க எண்ணுகிறாள் அவள்

தாத்தா புகைத்த துண்டுகளை 
பொறுக்கிச் சேர்த்த பேத்தி
மூட்டையாய்க் கட்டுகிறாள் மயிற்பீலிகளுடன்
‘இனி இவையே எம்துணை
நீங்களில்லா வெற்றிடத்தை 
இது சற்றேனும் இட்டு நிரப்பட்டும்’
மழலையில் சொன்னவளின் மதிமுகத்தில்
பயத்தின் ஈரம் பரவ
நெஞ்சுக்குழி துடிக்கிறது தாத்தாவுக்கு
இனி அதைத்தீண்டேன் எனச்சூளுரைக்கிறார்
இனியது என மகிழ்கின்றனர் அனைவரும்
ஆலமரத்தையே சாய்க்கும் ஆனை
அங்குசத்துக்கு அடங்குவது வழமைதானே.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

No comments: