Pages

Monday, November 22, 2021

நல்லாச்சி - 20


வரிகளைத் தொலைத்த பாடலொன்று
வண்டாய் ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது 
நல்லாச்சி மனதில்
ஒன்றுக்கொன்று தொடர்பிலாத வரிகள்
தம்மைத்தாமே பற்றியிழுத்து
ரயில்பெட்டிகளாய்க் கோர்க்க முயன்று
மேலும் சிதறி மூலைக்கொன்றாய் விழுகின்றன
எங்கோ ஒலிக்கும் மாங்குயிலின் கீதம்போல்
அவளைப் பின்தொடர்ந்து கொண்டேயிருக்கிறது அப்பாடல்
தடத்தை மிஞ்ச விட்டுச்சென்ற பாம்பாய்
தன்னை உருக்காட்டி மறையும் அதன்
நுனி பற்றிழுத்து
குடத்திலடைத்து விட ஆவேசமாய் 
முயல்கிறாள் நல்லாச்சி
நொடியில் அதன் பிம்பத்தையள்ளி
இதோவென சேர்ப்பிக்கிறாள் பேத்தி
கை கோர்த்த பாடல் 
கொண்டாடிக்குதூகலிக்கிறது ஆச்சியின் இதழ்களில்
ஆச்சர்யப்படும் பேத்திக்கு
விசிலில் பதிலளிக்கிறாள் நல்லாச்சி
டேக் இட் ஈஸி ஊர்வசியென..

நல்லாச்சி - 19


ப்ப்போ..
கசியும் கண்களை புறங்கையால் சிறையிட்டு
உதடுகளை அழுத்திக்குவித்துச் சொன்னபடி
காய் விடுகிறாள் பேத்தி
எவ்விக்குதித்தும் எட்டாத செம்பருத்திப்பூவிடம்
முக்கிமுக்கி முதுகு வளைத்தும்
முன் நகரவியலாத ஆற்றாமையுடன்
தத்தளிக்கிறது செடி
ஒருவர் முகம் நோக்கி இன்னொருவர்
எத்தனை யுகங்களாய்க் கடந்தனவோ நொடிகள்
ஆற்றாமையும் இயலாமையும் இரு கரைகளாய்
பெருக்கெடுத்தோடுகிறது ஆசைவெள்ளம்
ஒரு தேன்சிட்டோ
மெல்லிய தென்றலோ
கடந்து சென்ற நல்லாச்சியோ
யாரோ ஒருவர்
ஏதோவொன்று
பேத்தியின் கைகளில் தாழ்கிறது பூங்கிளை
பழம் பழம் பழம்...

நல்லாச்சி - 18

ஓடைக் குறுமணல் சோறாய் மின்ன
உருவிய இலைகள் கீரையாய் ஒதுங்க
கிள்ளிய பூக்கள் காயாய் அமைய
நட்சத்திரம் பொரித்து
செங்கமங்கல் குழம்பூற்றி
கழுவித்துடைத்த நிலாத்தட்டில்
உணவூட்டுகிறாள் நல்லாச்சிக்கு
தொட்டும் துளாவியும் கதைகளோடும்
பேத்தி ஊட்ட
கதைகளில் மயங்குகிறாள் நல்லாச்சி
உண்ண மறந்து
தனக்குமோர் கவளமென
கைநீட்டுகின்றன தெய்வங்கள்
கதை கேட்க மறந்து.

நல்லாச்சி - 17

பயிர்பச்சை செழிக்கணும்
கன்றுகாலி பெருகணும்
புயல்மழையே கதியென்றிலாமல்
பருவமழையும் பொழியவேணுமென
வேண்டியுருகுகிறாள் நல்லாச்சி
விஸ்வரூபடெுத்திருக்கும்
சொக்கப்பனையின் முன் கைகூப்பி
ததாஸ்து என்றருளுகிறாள் பேத்தி
ஃபைவ்ஸ்டார் சாக்லெட் 
நாலைந்து படைத்தாயெனில்
அனைத்தும் சித்திக்கும் மகளே என
குறுஞ்சிரிப்புடன் அபயக்கரம் காட்டும்
பேத்தியின் கையில் 
தெரளியும் அப்பமும் பொரியுருண்டையும் திணித்து
வெச்சுக்கடி ஆத்தா எங்கூர் சாக்லெட்டை
எனப்படைக்கிறாள் நல்லாச்சி
சடசடத்துச் சிலிர்க்கும் சொக்கப்பனை
ஆசீர்வதிக்கிறது இருவரையும்
தேவதைகள்
பேத்திகளாகவும் பிறப்பதுண்டு.

Friday, November 5, 2021

நல்லாச்சி - 16

வடை கிடைக்கப்பெறாத காகங்களுக்கென்றே
நிலவில் வடை சுடுகிறாள்
பாட்டியொருத்தி
சோறுண்டவாறே பேத்தி சொல்லும் கதைக்கு
உம் கொட்டிக்கொண்டிருக்கிறாள் நல்லாச்சி
பாவப்பட்ட நரிகளையெலாம்
முகத்தில் விழிக்கத்தோதாய்
தம் முற்றங்களில் தளைத்துவிட்டு
பாடச்சொல்லி
காகங்களிடம் கெஞ்சும் பேராசை மனிதர்களை
அண்டவொட்டாமல்
நட்சத்திரங்களையெறிந்து விரட்டுகிறாளாம் பாட்டி
வானத்தைச்சுட்டி நீளும்
பேத்தியின் விரல்நுனித் திசையில்
பொழிகிறது நட்சத்திரமழை
அள்ளிக்கொள்கிறாள் நல்லாச்சி.