Pages

Tuesday, September 22, 2015

நிசப்த இரைச்சல்..

இணையம் கொடுத்த படம்.

ஆந்தைக்கும் பின்னிரவு நாய்களுக்கும் போட்டியாக
சீரற்ற இடைவெளிகளில் முழங்கிய
வாகன ஒலிப்பானுக்குப் போட்டியாக
இருமிக்கொண்டிருந்தார் மேல்மாடித்தாத்தா
நடுநிசித் தொந்தரவைச் சலித்தபடி

திறக்கப்படாத வாயிலுக்காய்
சக மனிதர்களின் பொருமலைப்பொருட்படுத்தாமல்
வாகனத்தைக் கதற விட்டுக்கொண்டிருந்தவரின்
விரல்களில் ஒழுகிக்கொண்டிருந்தது
அன்றைய தினத்தின் அலுப்பும் சலிப்பும் கோபமும்

மேடு பள்ளம் சுற்றி கல் முள் மிதித்தோடி
சோர்வுற்றிருந்த அந்த வாகனமும்
ஓய்வுக்காக ஏங்கிக்கொண்டிருந்திருக்கக்கூடும்
திருடனொருவனை எச்சரிப்பதை அறியாமல்
கடைசித்துளி சக்தியையும் திரட்டிக்கூவியது அது
காத்திருப்பின் துளிகள் நிறைவடைந்து
நிசப்தம் சூழத்தொடங்கிய நொடியில்
திருடன் வெளியேறிய வீட்டின்
எங்கோ ஓர் மூலையிலிருந்து
வீறிடத்தொடங்கியது ஒரு குழந்தை.

வால்: கவிதையை வெளியிட்ட அதீதம் மின்னிதழுக்கு நன்றி.