Pages

Tuesday, December 12, 2017

வாசனைகளைச் சுமந்தவள்..


செண்பகமும் பன்னீர் ரோஜாவும் கிடைத்தால்
பள்ளிப்பிராய நினைவுகளின் வாசனை
சூழ்ந்துகொள்ளும் பொன்னாக்காவை.
பால்யத்தை மீட்டுக்கொணரும் வாசனைகள்
அவ்வப்போது அவளை உயிர்ப்பித்தபோதும்
இன்ன பிற வாசனைகள் அவளைக் கைவிடவில்லை
அவளும் அவற்றைக் கைவிட்டு விடவில்லை.
அவற்றின் பின்னொரு
பைத்தியத்தைப்போல் அலைந்து
ஒவ்வொன்றாக நுரையீரலில் சேகரிப்பாள்
அக்கணங்களில் அவள் முகம்
புத்தனின் மோன நிலையை ஒத்திருக்கும்
என அங்கலாய்த்துக்கொள்ளும் வீட்டாரை
சட்டை செய்ததேயில்லை அவள்
பூநாகமென ஒவ்வொரு வாசனையிலும்
கிறங்கிக்கிடந்தவள்
ஒரு வெயில் நாளில்
மண்ணெண்ணெய் வாசத்துடன் கருகிக்கிடந்தாள்
அவளுக்குச் சற்றும் பிடிக்காத வாசனை அது
என்பதை
 அன்று நினைவு கூரத்தவறவில்லை அத்தனை பேரும்.


வால் : ஆகஸ்ட் மாத இதழில் கவிதையை வெளியிட்ட  அகநாழிகை இதழுக்கு நன்றி.

Saturday, July 1, 2017

வேறேதுமில்லை..

(இணையத்தின் படக்கொடைக்கு நன்றி)


நினைவுகளாய் மட்டுமே வாழ்ந்து
நினைவுகளாகவே இவ்வுலகில் எஞ்சுபவர் மீது
மரணத்தின்
விரல் கூட படிவதில்லை
அவர் மரணித்த பின்னும்
அவரை உயிர்த்தெழச்செய்ய
எங்கோ ஒரு பருப்பொருளில் ஒட்டியிருக்கும்
நினைவுகள் போதும்
ஒரு புகைஓவியம் போல் 
மெல்ல உருக்கொண்டு மீண்டெழும்
அவர்கள்
இதோ நிற்கிறார்கள்
தொட்டு விடும் தூரத்தில்
பிரியமானவர்களின் நினைவுகளில்
நீந்துபவர்களுக்கும்
அந்நினைவுகளின் ஆதாரக்கோட்டில்
வாழ்பவர்களுக்குமிடையேயான
கண் சிமிட்டும் தூரத்தில்
இதோ எங்கோ 
இருக்குமந்த திரிசங்கு சொர்க்கத்திற்கு
போகவும் மீளவும் விருப்பங்கொண்டு
நீண்ட வரிசையின் கடைக்கோடியில் நிற்பது
நீங்களாகவோ நானாகவோ
எதுவாகவோ இருப்பினும்
நினைவுகளின் நதிக்கப்பால் கை நீட்டும் 
படகோட்டிக்குக் கொடுத்திட எதுவுமில்லை
நினைவுகளைத்தவிர.