Pages

Friday, June 29, 2012

இன்னும் தீருதிலையே..


இணையத்தில் சுட்ட கிளி..
தலையைத்தலையை
ஆட்டிக்கொண்டு உட்காந்திருக்கிறது
அந்தப்பறவை
தன்முன் இறைந்து கிடக்கும்
கேள்விகளைக்கொறித்தபடி..

எதிர்காலக்கேள்விகளை இறைப்பவர்க்கு
இறந்தகாலக்கேள்விகளைச் சாமர்த்தியமாய்ப் பதிலளித்து
கேள்விக்குறிகள் நிரம்பிய
தன் நிகழ்காலச்சிறையில்
முடங்கிக்கொள்ளும் அப்பறவை
இரண்டு நிமிடச் சுதந்திரக்காற்றில்
சிறகு விரித்துப் பறக்கிறது விர்ர்ர்ரென,

புதிதாய் முளைத்திருந்த
இறகுகளிலிருந்து சிதறி மிதக்கின்றன
கேள்விகள்
காற்றுவெளியெங்கும் எண்ணிலடங்காதவையாய்..
இறுக மூடியிருக்கும் என் கைகளில்
இன்னும் மீதமிருக்கும்
கேள்விகளைக் கேலி செய்தபடி..

டிஸ்கி: ஜூன் 15-30 அன்று வெளியான இன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது.

Wednesday, June 27, 2012

தீராத விளையாட்டுப்பிள்ளை..


இணையத்தில் பிடித்து வந்த காற்று..
சிறைப்படும்
ஒவ்வொரு தருணங்களிலும்
குதித்துக் கூத்தாடுகிறது காற்று
குழந்தைகள் கைகளில்
பலூன்களாய்..

ஊழிக்கூத்தாடியதும்
ஊரையே புரட்டிப்போட்டதும்
வேறெதுவோ என்று மறுதலித்து விட்டு
கட்டிச்சமர்த்தாய்ப்
புல்லாங்குழற்சிறுவன் பின்
ஆட்டுக்குட்டியென வந்த தென்றல்

பரிந்தூட்டும் தாயென
வியர்த்த முகங்கள் துடைத்தபின்
கலைத்து விளையாடுகிறது மேகங்களை
தீராத விளையாட்டுப்பிள்ளையாய்..

டிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.

Wednesday, June 13, 2012

உருக்கொண்ட எண்ணங்கள்..

இணையத்தில் சுட்ட படம்..
தினம் வந்து கொண்டிருந்த
கனவுப்புலியொன்று
நனவில் வந்தது ஓர் நாளில்.

மூளைக்கனுப்பிய
நியூரான் சமிக்ஞைகள்
தொடர்பில் இல்லையென்று திரும்பி வந்து விட
திகைத்து மூச்சடைத்துத்
தடுமாறி நின்ற எனை நோக்கி
மெல்லக் கொட்டாவி விட்டபடி
திரும்பிப் படுத்துக் கொண்டது,
வாலசைவில்
தன் இருப்பைத் தெரிவித்தபடியே
தன் கட்டுக்குள் பிறரை வைக்க
நன்றாகக் கற்றிருந்த அந்தப்புலி.

எங்கணும் எதிலும் வாலின் நாட்டியத்தரிசனமளித்தும்
அற்ற பொழுதுகளில்
கூர் பல்லால் ஆசீர்வதித்தும்
என் பொழுதுகளை ஆக்கிரமித்திருந்த ஓர் போதில்
பயம் கொன்று திரும்பி
அதன் கண்களைச் சந்தித்தேன்.
பிரபஞ்சப் பேரொளி சுடர் விட்ட அதன் கண்களில்
கருணையின் தரிசனமும் தாண்டவமாட
சுருங்கிய கோடுகள் புள்ளிகளாயின.

உண்மையுரு எதுவென்று மயங்கி நின்ற
என்னிடம்,
‘உன் எண்ணங்கள் கொள்ளும் வடிவம்தானடி சகியே நான்,
திண்ணமாய் எதிர் கொள் மலைக்காமல்,
புலியோ,.. புள்ளிமானோ எதுவுமே நீ வளர்ப்பதுதான்’ என்றுரைத்து,
இளந்துளிர்க் கொம்புகளை
மெல்லக்குலுக்கியபடி
அசை போட ஆரம்பித்தது எண்ணப்புற்களை..


டிஸ்கி: கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.